நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 6 ஜூன், 2013

பிச்சைத் தாய்

பிச்சைத் தாய்

கோயில் வாசலில் கேட்ட 
வித வித பிச்சை ஒலிகள் 
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் 
உள் நுழைந்து 
பின்புலப் படமுடன் கதை விரிந்தன .
எச்சூழ்நிலை தள்ளியது அவளை .

எல்லாம் வல்ல தான் தோன்றி அவன் 
வாசலை ஏன் வறுமையின் 
சின்னமாக்கினான் .

சாலைகளின் நடுவில்,பேருந்து  நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில் இப்படியாய் 
தாயை நிறுத்திய 
எவனோ ,எவளோ-
 தாய்ப்பால் குடித்த அவர்களின் 
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

தலை மேல் கை வை 
வாழும் என் வாழ்வென 
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப் 
பத்தோ ,ஐம்பதோ 
தரும் தருமர்களே 
பிச்சைத் தாய் வருவது 
மறைந்து போனது ஏனோ ?

பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்தத் 
தோஷம் போக்க 
முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ 
முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?

தாய்க்குத் திவசம் 
ஒலி வசியம் செய்தவருக்கு 
தடித்த பணம்  தட்டில் வைத்தாய்.
வயிறு பிழிந்த பசியோடு நின்ற 
பிச்சைத் தாயைப் 
பிண்ட சோறு பொறுக்க விட்டாய் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக