நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

தாயை மறந்தது ஏனோ?

தாயை மறந்தது ஏனோ?

கோயில் வாசலில் கேட்ட

வித வித பிச்சை ஒலிகள்

நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .

 

தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து

பின்புலப்   படமுடன்  கதை  விரிந்தது.

எச்சூழ்நிலை தள்ளியது அவளை?



எல்லாம் வல்ல தான்தோன்றி அவன்

வாசலை ஏன் வறுமையின்

சின்னமாக்கினான்?

 

சாலைகளின் நடுவில்,

பேருந்து  நிறுத்தத்தில்,

தொடர் வண்டிக்குள் பூங்காவில் 

இப்படியாய் தாயை நிறுத்திய

எவனோ ,எவளோ-

 தாய்ப்பால் குடித்த அவர்களின்

வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

 


தலை மேல் கை வை

வாழும் என் வாழ்வென

கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப்

பத்தோ ,ஐம்பதோ

தரும் தருமர்களே

பிச்சைத் தாய் வருவது

மறந்து போனது ஏனோ ?

 


பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்த

பாவம் போக்க, முதிர்ந்த பொழுது பணம் கட்டி

அனுப்பி வைத்தாயோ முதியோர் இல்லத்திற்கு ?

அவளும் பிச்சைத் தாய் தானோ?

நன்றி  இனிது இணைய இதழ் 

இணையம் அறிவோமா?

இணையம் அறிவோமா?

ஆதிமனிதன் ஒருசெய்தியை அருகில் இல்லாத இன்னொருவனுக்குக்  கூற நினைத்தால், பல்வேறு உடன்பாட்டு முயற்சிகளினால் குறிப்பிட்ட கால இடைவெளியினால் மட்டுமே கூற முடிந்தது. அதற்காக அவன் ஒளி, ஒலிகளை மற்றும் சமிக்கைகளைப் பயன்படுத்தினான்.

செய்தியைக்கூறப் பயன்படு பொருள்கள் பல இருந்தன. உதாரணமாக, “சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். காப்பாற்றுங்கள்” என்பதைப் பிறருக்குத் தெரிவிக்கப் புகையை ஏற்படுத்தித் தெரிவிப்பது ஆதிகால முறையாக இருந்தது.


இது போல் எண்ணற்றச் செய்திப் பரிமாற்றச் செயல்கள் இருந்தன.

மொகலாய மன்னன் ஔரங்கசீப் தான் முதன்முதலில் அரசின் திட்டங்களை நடவடிக்கைகளை மக்கள் அதிகமாக நடமாடும் தெருக்களில் எழுதி போடுவதற்கு ஆவன செய்தான் என்பதையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

இப்படியாக, வரலாறு, கதைகள், சிந்தனைகள், நிகழ்வுகள் போன்றவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டன.

 

இப்படி இருந்த நிலை மாறி, நொடிக்கு நொடி உலகின் எந்த மூலையிலும் நடந்த ஒரு செயல், அடுத்த நொடி உலகின் வேறு மூலைக்குச் செய்தியாக, செயலாக, சிந்தனையாகக் கூறப்படுகிறது என்றால், அறிவியலின் அதிசயத்தை என்ன சொல்வது?

எண்ணிப் பார்க்க முடியாத அசுர வளர்ச்சி செய்திப் பரிமாற்றத்தில்.

அந்த வகையில் காற்றின் ஊடாக நாம் நடத்துகின்ற மாயாஜால வித்தைகள்.

யாரும் எதிர்பார்க்காத மின்மாற்ற அலைகளின் வெளிப்பாடுகள்.

சொல்லவோ, எண்ணவோ, சிந்திக்கவோ முடியாத, விரிந்து பட்ட முயற்சி.

கண்ணுக்குத் தெரியாமல் காற்றலைகள் மூலம் கோடிக்கோடித் தகவல்களை, நிகழ்வுகளை, ஒலி, ஒளிகள் மூலம் நிகழ்படங்கள், நிகழ்வுக் காணொளிகள் என காணக் கிடைக்காதவை எவையும் இல்லை எனும் அளவிற்குக் கொண்டு வந்து கொட்டும் சுனையாக (நீரூற்று) இணையம் உள்ளது.

அவ்விதமான இணையங்கள் உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் சரித்திரத்தின் பக்கங்களாக மாற்றுகின்றன. உலகம் சுருங்கிப் போகுமளவு எங்கும் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்பதாக உருமாறிப் போயிருக்கிறது.

அதைப்போல், காரியங்கள் துரிதகதியில் இயங்குகின்றன. கண்மூடித் கண் திறக்கும் காலத்திற்குள் தேடியவை உள்ளீடு செய்யப்பட்டு, உங்கள் கைகளில் தரப்படுகின்றன.

பல நூறு ஆசிரியர்கள் நம் தகப்பனார்களுக்கு அறிவை தந்தார்கள் என்றால், பல கோடி ஆசிரியர்கள் நமக்கு அறிவையும் ஆற்றலையும் சிந்தனை விரிவாக்கத்தையும் இணையமான ஆசிரியர்கள் தருவதாக இருக்கிறார்கள்.

மனிதன் தன் கட்டுக்கடங்காத மூளைச் செயல்பாட்டிற்குத் தீனிபோடும் உணவு ஆலையாக இணையம் வலம் வருவதை இன்று காண்கின்றோம்.

 

எவையும் எங்கிருந்தோ, எப்படியோ, எதனாலோ வரிசை வரிசையாய் வந்து அறிமுகம் சொல்லுகின்றன. தேவையானதை மட்டும் மனிதன் அறிகின்றான்; பிறவற்றை மறுக்கின்றான்.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இணையம் காணக் கிடைப்பதால், இதில் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை வாழ்வில் காணாமலும் அறியாமலும் போய்விடலாம்.

எனவே, சிறந்த இணையப் பக்கங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இத்தொடர். இணையத்தின் தன்மையை வரிசைப் படுத்தியோ, முன்னிலைப் படுத்தியோ பட்டியலானது என்ற அறிவிப்பு அல்ல இத்தொடர்.

பார்த்தவற்றில், அறிந்தவற்றில் பயனடைந்தவற்றில் சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதுவே இணையம் அறிவோமா தொடர்.

 

முதலில், நாம் காணயிருக்கும் தளம், நூலகங்களுக்கெல்லாம் பெரிய நூலகமாக விளங்கும் தளம்.

எங்கும் பயன்பாட்டில் இல்லாத உலக மொழிகளில் உள்ள அரிய நூல்கள், அறிவுச் சுரங்கமாக விளங்கும் உரைகள், காணொலிகள், இசைப்பதிவுகள், உலகத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர் பதிவுகள், சமயச் சொற்பொழிவுகள், ஆன்மீகத் தளங்கள், உலக மேதைகளின் படைப்புகள் என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

உலகப் பொக்கிஷமாக விளங்கும் அரிய மின்நூலகத் தளமிது.

www.archive.org
என்ற இத்தளத்தில் பல மொழி சார்ந்த இலக்கிய நூல்கள், ஆளுமைகள் குறித்தவைகள், இசை, மதம் சார்ந்தவை என பல்லாயிரம் பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நூல்கள் பெறுவதற்கு, https://archive.org/details/openreadingroom- என்ற பக்கத்தைச் சொடுக்குங்கள். பல ஆயிரம் சிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளன.

தமிழ் சார்ந்த இசையும் நிறைந்து பாதுகாக்கப் பெறுகின்றன. இத்தளத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து, தங்களுக்குத் தேவையானதை பதிவிறக்கம் செய்தும், பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம்.

 

இணையம் அறிவோமா?
இணையம் அறிவோமா?
 

இத்தளம் எத்தகையது என்பதை, இத்தள நிர்வாகிகள் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். அது என்னவென்றால்,

“ www.archive.org இணையக் காப்பகம் இலாப நோக்கற்றது. இது இணைய தளங்கள் மற்றும் பிற கலாச்சார கலைப் பொருட்களின் டிஜிட்டல் நூலகத்தை டிஜிட்டல் வடிவத்தில் உருவாக்கி வருகிறது.

ஒரு காகித நூலகத்தைப் போலவே, ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள், அச்சு முடக்கப்பட்டவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச அணுகலை நாங்கள் வழங்குகிறோம்.

அனைத்து அறிவுக்கும் உலகளாவிய‌ அணுகலை வழங்குவதே எங்கள் நோக்கம்.

முக்கியமான வலைப்பக்கங்களை அடையாளம் காண எங்கள் காப்பகம் இத்திட்டத்தின் மூலம் 600க்கும் மேற்பட்ட‌ நூலகம் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.” என்பதாகும்.

பல்வேறு அறக்கட்டளைகளின் நிதி மூலமாக இத்தளம் சிறப்புடன் இயங்குகிறது.

 

www.archive.org தளத்தில் காணப்படுபவைகள்:

• 33,000 கோடி வலைப் பக்கங்கள்

• 2 கோடி புத்தகங்கள் மற்றும் நூல்கள்

• 45 லட்சம் ஒலிப் பதிவுகள் (1,80,000 நேரடி இசை நிகழ்ச்சிகள் உட்பட)

• 40 லட்சம் வீடியோக்கள் (16  லட்சம் தொலைக்காட்சி செய்தி திட்டங்கள் உட்பட)

• 30 லட்சம் படங்கள்

• 2,00,000 மென்பொருள் நிரல்கள்

இந்த தளம் 1996-ல் தொடங்கப்பட்டது. தொடங்கிய அந்த மாதத்தில் பார்வையாளர்கள் வெறும் 16 பேர்கள் தான். ஆனால் இன்று தினமும் 1,91,904 பேர் இத்தளத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த தளத்தைப் பார்வையிட www.archive.org ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை


நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி.

அவர் சந்திக்கும் மனிதர்களின் ரசனைகளைத் தூண்டிவிட்டு, அதில் தன்னை மீறிச் சிலாகித்துச் சிரித்து மகிழ்ந்து ரசிப்பார்.

அவருக்குக் கவிதைகள் இங்கு தான் பிறக்கின்றன.

மனிதர்களின் ஒளிவு மறைவில்லாத சிந்தனையும், ரசிப்பும், மகிழ்ச்சியும் யாரும் காணாத கற்பனைக் காட்சியை அவருக்குத் தோற்றிவிக்கும் போலிருக்கிறது.

அவர், அவரின் குழந்தைகளிடமும் இப்படித் தான் ரசித்து, எங்களிடம் அதை வியந்து கூறுவார்.

 

பழநிபாரதி
பழநிபாரதி
 

”அது சரி,

அவர் ரசனை இருக்கட்டும்.

இங்கு அதெல்லாம் எதற்குக் கூறுகிறீர்கள்?” என்று தானே கேட்கிறீர்கள்?

 

”வரலாற்றியல் முறை ஆய்வு” என்று ஒன்றுண்டு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும், அவனது படைப்பிற்கும் ஒரு தொடர்புண்டு என்பதே அது.

அவ்வகையில், காதலியை ரசிக்கும் காதலனின் மனப்போக்கைக் கவிஞர் எழுதுவதற்கு, அவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்வது சிறப்பு தானே! எனவே தான் அவர் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் ரசிகனாக வாழ்வதைக் கூறினேன்.

அவ்வாறு, அவர் மூலமாக நான் நிறையக் கவிதை நூல்கள் படித்திருக்கின்றேன்.

ஒருநாள் அவருடைய ”மழைப்பெண்” என்ற கவிதைத் தொகுப்பைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்றார்.

 


 

அப்பொழுது எழுதிய கட்டுரை தான் இது. அதைப் படித்த அவர், சிறிய புன்முறுவலோடு ரசித்து வாங்கி வைத்துக் கொண்டார்.

இதற்குப் பிறகு, அவர் எழுதிக் கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்களை எல்லாம் கொண்டு வந்து காண்பித்து என் ரசனையைக் கேட்டு ரசிப்பார்.

இந்தக் கட்டுரைக்குப் பின், ஒருபடி மேலே அவரோடு நெருங்கினேன் என்பதே உண்மையாகும்.

”மழைப்பெண்” நூல் குறித்த என் பார்வையை, இனி காண்போமா?

 

“ஒரு அனுபவத்திற்கு உருவம் தரக் கவிஞன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவே கவிதை.

வார்த்தைகள் நடனம் புரியும் போது கவிதைகள் பிறக்கின்றன. மிகக்குறைந்த வார்த்தைகளில் மிக அதிகம் சொல்வதற்கான முயற்சிதான் அனுபவக் கவிதையாகிறது.

அனுபவம் உள்ளத்தில் எழுப்பும் சலனங்களை உணர்ச்சியோடு அழகுற வார்த்தைகளில் அமைப்பதே சிறந்த கவிதை” என்பதற்கிணங்க அதைச் செம்மையாகச் செதுக்கியிருக்கின்றார் கவிஞர் பழநிபாரதி.

ஒருதலைப்பட்சமான உணர்வுகளைச் சங்ககால இலக்கியங்கள் ‘கைக்கிளை’ எனும் திணைக்குள் அடக்கின.

காதலர் இருவரின் பழக்கத்திற்குப் பின் தனித்தனியான உணர்வாக்கங்களைப் ‘பிரிதல்’ எனும் துறைகளுக்குள் அடக்கிப் பேசின.

‘மழைப்பெண்’ கவிதைத் தொகுப்பு முழுமையும் இந்த இரண்டு பகுதிகளுக்குள்ளும் அடங்கிச் சங்கத்தமிழின் புதுமை வடிவமாகி அழகுற நிற்கின்றது.

தலைவனோ தலைவியோ ‘இடந்தலைப்பாடு’ எனும் நிகழ்வுக்குப் பிறகு மிக்கக் காதலுணர்வோடு இருக்கும் பொழுது, காதலின் தன்மையால் அவர்கள் பார்ப்பவையெல்லாம் பிரியமானவரின் தோற்றமாகவே இருக்குமாம்.

இதைத் தொல்காப்பியர் “நோக்குவயெல்லாம் அவையே போறல்” என்பர். இதை அழகாகப் புதுக்கவிதை வடிவில் கவிஞர்,

“எல்லோருமாக

இருந்தேன் நான்

வழியனுப்ப வரமுடியாத

உன் பயணத்தில்”

என்கின்றார்.

 

புதுக்கவிதையின் தரத்தை உலகக் கவிதைகளின் தரத்திற்கு உயர்த்தியதில் படிமக் கவிதைகளுக்கு (IMAGE POETIC) ஒரிடம் உண்டு.

தற்பொழுது இக்கவிதைகள் இருண்மை நோக்கில்தான் பலராலும் எழுதப்படுகின்றன. ஆனால் கவிஞரின் படிமக் கவிதைகள் புரிதலை வெளிப்பாடாகக் கொண்டவையாகும்.

இந்நூலில் உள்ள கவிதைகள் இயல்புக்கு மீறாத கற்பனையையும் புற உலகத்தால் பெற்ற அறிவினையும் இணைத்து அமைக்கும் கலைப்படிமக் கவிதைகளாக (Artistic image poem) உள்ளத்தைக் காதலுணர்வில் உருக்குகின்றன.

“படைப்பாளின் உள்ளக்கிடங்கில் தோன்றிய அதேவுணர்வு வாசகனின் உள்ளத்திலும் தோன்றினால் அது கவிதையின் வெற்றியாகிறது” என்பர்.

படைப்பு இடமாற்றமாவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. காட்சிப் பின்புலப் படைப்பாக்கங்கள் எந்தத் தளத்தில் பதிவாக்கம் செய்யப் பெற்றிருந்தாலும், அதைப் பதிவு செய்ய கவிஞன் தேடும் சொற்கள் மந்திரத்தனமான செயல்களைச் செய்யக்கூடாது. அப்போதுதான் கவிதைகள் இரசனையுடையதாகக் கருதப் பெறும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞன் ‘ஹீயம்’( Hiyam Qablan) இரவுப் பொழுதில் நிலாவைப் பார்க்கின்றான். அது அவனுக்குள் பல காட்சிப் பின்புலத்தைத் தருகின்றது.

அழகான அக்கவிதையில் எந்தச் சொற்களும் படிமக் கருத்தைத் தவிர்த்து மாயாஜாலம் செய்யவில்லை. அக்கவிதையானது,

“மௌனமான கப்பல்தளத்திற்கு மேலே

கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா

தூரத்தில் காணும் அது

விளையாடிய குழந்தை

மறந்து விட்ட பலூன் தான்”

என்பதாகும்.

 

இதேபோல் கவிஞர் பழநிபாரதி கையாண்டிருக்கும் படிமக் காட்சிகள் அழகியல் நோக்குடைய பிரதிபலிப்புக் கொள்கையை (Theory of Reflection) அடிப்படையாகக் கொண்டவையாகும்.

முத்தத்தைக் கொடூரமான பறவையாகப் படிமமாக்கி எழுதிய கவிதை இங்கு எண்ணத்தக்கதாகும்.

“சிறகு முளைத்த முத்தங்கள்

என் கைகள் கீறிப்பறந்து

வட்டமிடுகின்றன.

உன் தலைக்கு மேலே

இரை போட்டுப் பழக்கு.

அவை

உன்னைக் கொத்தித் தின்பதற்குள்”.

கொடூரப் பறவையின் எதிர்பார்ப்பும், முத்தத்தின் எதிர்பார்ப்பும் படிமக் காட்சியில் கருத்து ஒருமைப்பாடுடைய பொருளாகின்றது.

இதே போல் முத்தத்தைக் குளியலறை, மேகம், நதி, புயல், இரவுப்பொழுது, தேநீர் கலவை, பந்து விளையாட்டு போன்றவற்றுடன் உவமித்துப் படிமமாக்கியுள்ளார்.

“நீண்ட காலமாய்

எனக்குள் புதைந்து

வைரமாகி விட்டது

உனக்குக்

கொடுக்க முடியாமல் போன

அதே முத்தம்”

நல்ல உவமைகள் ஒத்த தன்மையுடைய பொருள்களோடு இணைந்து அழகியல் தன்மைக்கு வளம் சேர்க்கின்றன.

 

படைப்பாக்கவாதி, படைப்புகள், வாசகன் என்ற முப்பரிமாண‌ வலைக்குள் கருத்தின்பால் ஒரு பிரளயம் உட்புகுந்து கவிமன வானம் புடைத்திருக்கின்றது.

புதுப்புதுப் பொருள்கள், காட்சிகள், உருவகங்கள், வண்ணங்கள், வடிவுகள், நினைவுகள் போன்றவை கவிஞனைத் தன் பங்குக்கு இழுத்து மயக்கப் பார்த்திருந்தாலும், கவிஞர் மிகச்சரியான ஒழுங்கு முறையில் ஒவ்வொரு கவிதையிலும் காதலைப் படிமப்படுத்தியுள்ளார்.

காதலியைப் பார்த்த அந்த நொடிப் பொழுதை,

“ஐம்பூதங்களுக்கு

உனக்காக என்னை

பலி கொடுத்து

உறைந்த கணம் அது”

என்கின்றார்.

மேலும் இக்கவிதையில் அந்தப் பொழுது ‘வானத்திலிருந்து எரிந்து விழும் எரிநட்சத்திரம் போலவும் மரத்தில் விழுந்த மின்னல் போலும். பாறைகளைச் சிறுகல்லாக்கும் நதிநீர் போலவும் உள்ளனவாம்.

ஒவ்வொரு படிமப் பொருளும் கூறவந்த பொருளோடு வாசகனுக்கு அப்படியே போய் சேருகிறது.

காதலன் தன் காதலியைக் காணாமல் ஐந்து நாட்கள் இறந்தே போனான் எண்ணத்தால். அதைப் பிறகு கூடும் போது மறந்திருக்கலாம்.

ஆனால் காதலன் மறக்க மாட்டானாம் ஏன்? காதலி அந்த ஐந்து நாட்கள் பட்ட துன்பத்தைக் கூறு எனக் கேட்க,

“அடக்கம் செய்யாமல்

அடுக்கி வைத்திருக்கின்றேன்

நீ நடத்தும்

இறுதி மரியாதைக்காக”

என்கின்றான்.

 

தீவிரமாக யோசித்தால் மட்டுமே புரியக் கூடிய ஆழ்ந்த கவிதைப் பாணியைத் தளமாகக் கொண்ட குறியீட்டுக் கவிதைகள் கவிஞரால் மிக எளிமையாக எழுதப் பெற்றிருக்கின்றன அவ்வகையில்,

“தாக நிலமாய்

உதடு வெடிக்க

நிழல் மேகமாய்

உன் முத்தம்”

“உன் அழகின்

மணி யோசையில்

படபடத்தோடுகின்றன

என் மாடப்புறாக்கள்”

எனும் கவிதைகள் அமைந்துள்ளன.

மேலும் என்னைச் சமைத்து, பரிமாறி, சுவைத்து, செரித்துவிடு என உணவாக மாறும் காதலனின் பக்குவம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கதாகும்.

 

மற்றொரிடத்தில் காதலியை மரமாகவும், அதில் பயனடையும் பறவையாகத் தானும் இருப்பதாக உவமித்துள்ளார்.

காமத்தின் எல்லையில் இருவரின் நிலையையும் உருவகப்படுத்தி, ஊஞ்சலின் வெளியாகவும் சுழன்று படுத்துறங்கும் பம்பரமாகவும் காட்டியுள்ளார்.

அழகியலும், காதலுணர்வும் ஒன்றையொன்று விட்டுவிடாமல் கைகோர்த்துக் கொண்டு செல்லும் பாங்கிற்கு,

“முத்தத்துக்குப் பின் முத்தம்

அலைக்குப் பின் அலை

கரை ஒதுங்கியது

உடல்

உடல் நுழைந்தது கடல்”

எனும் கவிதை சான்றாக அமைந்துள்ளது.

‘மழை’ எனும் சொல் ‘முத்தம்’ எனும் சொல்லின் மாற்றுப் பெயரோ என எண்ணுமளவு முத்தம் எதிர்நோக்கும் காதல் தாகம் இந்நூல் முழுமைக்கும் விரவிக் கிடக்கின்றது. முத்தத்தைப் பந்திற்குப் படிமமாக்கி வெளிப்படுத்தியுள்ளார்.

“வெற்றிப்புள்ளியை நோக்கி

நகர்த்து அல்லது நகர்த்தவிடு

நம் உதடுகளுக்கிடையில்

உதைபட்டுத் தவிக்கிறது

ஒரு முத்தப்பந்து”

என்பது அக்கவிதையாகும்.

 

ஒரு பெண்ணின் உடலைக் கறுப்புச் சொற்கள், சிவப்புச் சொற்கள், உருபு மயக்கம், தனிச்சொல், நடுவிரி என ஒவ்வொரு உறுப்புகளையும் ‘கேசாதிபாத வர்ணனை’யாக உருவகப்படுத்தி எழுதியது.

‘ஆற்றுப்படை’ நூல்களில் பாடினியை யாழோடு உருவகப்படுத்தி எழுதிய அழகினை நினைவுப் படுத்துகிறது.

லா.ச.ரா. தன் நாவல்களில் இயற்கைப் பொருள்களின் மெல்லியதான உணர்வுகளைக் கூடப் பதிவு செய்திருப்பார். அதே போல் கவிஞரும் ஒரு கவிதையில்,

“கண்ணாடி விழுங்கிய

உன் பிம்பங்களையாவது

கொத்தித் தேடி

அள்ளி வந்து

ஆறுதல் செய்ய

என்னிடமிருந்து தான்

உன் வீட்டுக்கு வருகிறது

சிட்டுக் குருவி”

என்று பதிவு செய்திருக்கின்றார்.

இயற்கைக்கு மாறான அனுபவத் தூண்டல் கொண்ட கவிதையாகும்.

 

“படிமக் கவிஞன் ஒரு பொருளை மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அதைப் புகழ்வதோ, இகழ்வதோ இல்லை. வாசகன் என்ன உணர வேண்டும் என்று அறிவுறுத்தவும் இல்லை. அவன் உணர்ந்ததை நாம் உணரச் செய்வது தான் படிமக் கவிதையின் உயிர்நிலை” எனும் டாக்டர் மு.சுதந்திரமுத்துவின் கருத்திற்கேற்ப ‘மழைப்பெண்’ கவிதைகள் அனைத்தும் அமைந்துள்ளன.

ஒரு சில கவிதைகள் மட்டும் இருண்மையை (abscurits) நோக்கியதாகப் பயணித்தாலும், புதுக்கவிதை வளர்ச்சிக்கு ‘மழைப்பெண் ‘ ஒரு பிரகாசமான விடியலாய் வந்திருக்கிறது.

உலகக் கவிதைத் தரத்திற்கு இத்தமிழ்க் கவிதை போட்டி போட்டு இருக்கிறது.

பாரதிசந்திரன்


நன்ரீ இனிது இணைய இதழ் 

ரசவாதியின் ரசக்கலவை

ரசவாதியின் ரசக்கலவை

நான் வெகுவிரைவில் நிலைகுலைந்து

உருமாறிப் போனாலும் போவேன்.

அந்தத் தடுமாற்றத்தில் பைத்தியக்காரனாகி எங்கோ எதையோ

இழந்தவனைப் போல் தேடித் திரிந்தாலும் திரியலாம்

 

அவ்வாறு நானிருந்தால்

கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்

 

யாரையும் அடிக்கவோ, கடிக்கவோ

மாட்டேன் என்று தான் நினைக்கின்றேன்.

அப்படி எதாவது செய்தால்

சும்மா விட்டு விடாதீர்கள்.

 

கை, கால்களை நன்கு கட்டி

ஆற்றிலோ, குளத்திலோ எறிந்து விடுங்கள்.

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று

யாராவது கேட்டால், நீங்கள் ஒன்றும் கூறாதீர்கள்.

நான் அவர்களைச் சும்மா விடுவதில்லை.

நாயாகவோ நரியாகவோ அல்லது பேயாகவோ வந்து

கை, கால்களைப் பிய்த்துச் சதைகளைக் கீறி

இரத்தம் குடிக்காமல் விடமாட்டேன்.

 

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

எனக்குப் பசி வரும், அப்போது உணவில்லையெனின் கோபம் வரும்.

கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.

 

எதுவும் தரவில்லையென்றாலும்

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

நீங்கள் எப்பேர்பட்ட ரசவாதி என்று தெரிந்தே

இப்போது உடனாளியாய் இருக்கின்றேன்.

 

அறியாமல் நீங்கள் சேர்மானம் கூட்டவில்லை.

அறிந்தே ரசக்கலவை ஆக்குகிறீர்கள்.

 

இன்னது இன்னதென்று தெரியாமலா

தீமூட்டிக் காய்ந்தமரம் சாய்க்கிறீர்கள்…

 

சொற்களை வைத்தேச் சோறாக்கித் தலையிலூற்றுகிறீர்கள்…

 

எனக்குத் தெரியும்… உலக தத்துவம்.

 

காற்றே குற்றவாளி.

இடியும், மழையும்

என்னாலில்லை என்கிறீர்கள்.

மேகமே… உனை வரச்சொன்னது யார்? என்கிறீர்கள்

 

இந்தப் பைத்தியத்திற்குத் தெரியும்

இடியும், மழையும் அதாகவே தான் வருமென்று.

பாரதிசந்திரன்

நன்றி  இனிது இணைய இதழ் 

செந்தமிழ் சொற்களஞ்சியம் அகரமுதலி

செந்தமிழ் சொற்களஞ்சியம் அகரமுதலி


அகரமுதலி (2019) என்ற பெயருடன் உள்ள tamillexicon.com என்ற‌ இணையதளம், தமிழின் பல்வேறு பரிணாமங்களையும் உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

பல்வேறு உள்கட்டமைப்புடன், கடினஉழைப்புடன், பலருக்கும் பயன்படும் விதத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேறு மொழிப் பேசும் ஒருவர் இத்தளத்தைக் கொண்டு மிக விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம்.


தமிழர்களாகிய நாம், நமது முன்னோர்களின் ஆழமான, அகலமான அறிவாற்றலையும், மொழிச்சிறப்பின் அறியாத பக்கங்களின் வீரியத்தையும் புரிந்து மேம்படலாம்.

இத்தளத்தில், மிகப்பயனுள்ள தேடுபொறிகளும், மாற்றிகளும் இடம் பெற்றுள்ளன. அவை, இன்றைய தமிழ் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமையும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

தளத்தில் காணப்படும் பகுதிகளைப் பயன்படுத்தி எதிர்கால இளைய தலைமுறையை வழிப்படுத்துவோம்.

தளத்தில் காணப்படும் முக்கியமான பகுதிகள் சிலவற்றின் பயன்பாடுகளை இனி அறியலாம்.

அகர வரிசை
”தமிழ்ச் சொற்களின் விளக்கங்களை அறிய” எனும் தலைப்பில், பழங்காலச் சொற்களுக்கு மட்டுமில்லாமல், தற்கால வழக்கு சொற்களுக்கும் பொருளுரைத்து அதைப் புதிய தமிழ்ச் சொல்லாக இணைத்து இருப்பது சிறந்த பணியாக உள்ளது.

”க” வரிசை சொற்கள் மட்டும் 115 பக்கங்கள் நீண்டு உள்ளன. தேடுபொறியில் ஒரு சொல்லைக் கொடுத்தும் தேடலாம் அல்லது எழுத்துக்களைச் சொடுக்கும் வார்த்தைகளிலும் பொருள் தேடலாம்.

தேடுபொறியில் ஒரு சொல் பதிவிட்டால், தமிழ் மொழிபெயர்ப்பு, கலைச்சொல், திருக்குறள், ஆங்கிலம் என எதைக் குறித்தாலும், அது குறித்துத் தேடும் வசதி உள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு சொல்லைத் தேடுபொறியில் இட்டு, திருக்குறள் என்பதை குறியீட்டுத் தேடுக எனக் கூறினால், குறிப்பிட்ட வார்த்தை திருக்குறளில் எங்கெங்கெல்லாம் கையாளப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிடும்.

கலைச்சொல் பகுதியில் குறியீட்டு, ஒரு தமிழ்ச் சொல்லைப் பதிவிட்டுத் தேடினால், தமிழ்ச் சொல்லுக்கான இணையான பொருள் தரும். ஆங்கில சொற்களையும் அந்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் விளக்கத்தையும் தரும்.

எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் குறித்த அடிப்படை இலக்கணம் ஆங்கில உச்சரிப்புடன் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகக் கிரந்த எழுத்துகள், தமிழ் எழுத்துடன் இணைந்து எவ்விதம் எழுத்தாகப் பயன்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளன.

வேற்று மொழியினர் தமிழ்மொழியைக் கற்க வேண்டுமானால், இப்பக்கமானது பெரிதும் பயன்படும். தமிழ் இலக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எழுதி
 

தமிழ் எழுதி
தமிழ் எழுதி
 

மிகப் பயனுள்ள 100% சரியான முறையில் செயல்படும் பக்கமாக இது அமைந்துள்ளது.

தமிழில் வெவ்வேறு எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாகவோ, ஒருங்குறி எழுத்துக்களை வெவ்வேறு எழுத்துருக்களாகவோ மாற்றும் பகுதி. எழுத்து மாற்றியாக இப்பகுதி மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றது.

24 வெவ்வேறு மாற்றிகள் இங்கு உள்ளன. எந்த எழுத்துருவாக இருந்தாலும் இப்பக்கத்தில் தேவையான எழுத்துருவாக மாற்றிக்கொள்ளலாம்.  மிகச்சரியாகவும் மாற்றித் தரும்.

இங்கு, Tamil phonetic Unicode மூலம் தட்டச்சு செய்து எழுதும் தனித்தாள் பக்கமும் இங்கு உள்ளது

தமிழ் அளவைகள்
பண்டையத் தமிழர் பயன்படுத்திய கணிதக் குறியீடுகள், எண்கூறுகளின் பெயர்கள், எண்கூற்று வாய்ப்பாடு, நீள வாய்ப்பாடு, பொன் நிறுத்தல் வாய்ப்பாடு, பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு, முகத்தல் வாய்ப்பாடு, முகத்தலளவை பெய்தல் வாய்ப்பாடு, நிறுத்தலளவை, நாள், ஆண்டு, கால வாய்ப்பாடு, தெளிப்பளவு, திதிகள், தமிழ் மாதங்கள், யுகங்கள், எண் வாய்ப்பாடு, படைகளின் அளவு, திரவளவு, கணித குறியீடுகள், கால அளவுக் குறியீடுகள் ஆகியவை விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.

தளத்தின் அனைத்துப் பக்கத்திலும் தமிழ் மற்றும் ஆங்கில சொற்களின் விளக்கங்களைத் தேட தேடுபொறி அமைந்துள்ளது .

களஞ்சியம்
தமிழ் களஞ்சியம்
தமிழ் களஞ்சியம்
 

பதினெண்கீழ்க்கணக்கு, நீதி நூல்கள், தமிழ் பாடல்கள், தமிழ் இலக்கணம், ஐம்பெரும் காப்பியங்கள், தமிழ் நூல்கள், தமிழ்ச் சான்றோர்கள் என நூல் தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு நூல் தலைப்பிலும் அந்நூலில் பகுதிகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

வினவல்
தமிழியல், கணினியியல், ஆங்கிலம், விடுகதை, பொதுஅறிவு எனும் தலைப்புகளில் கேள்வி-பதில் முறையில் எண்ணற்ற கேள்வி- பதில்கள் உள்ளன.

இணையத் தேர்வானது போட்டிகள் போல் நடத்தப்பட்டு முதன்மையர் பெயர் பட்டியலும் வெளியிடப்படுகின்றன.

அறிவுவளம் பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும், இப்பகுதி பெருமளவு பயன்படும்.

சொல் ஆட்டம்
சொல்லாட்டம்
சொல்லாட்டம்
 

ஆரம்ப நிலை, இடைநிலை, தேர்ந்த நிலை என மூன்று பகுதிகளாக இவ்விளையாட்டு உள்ளது. முதலில் பத்து வார்த்தைகள் 45 நொடிகள் காண்பிக்கப்படும்.

பிறகு விளையாட, தொடர் பட்டனை அழுத்தினால் பத்து வார்த்தைகளில் ஒவ்வொன்றாக எழுத்துக்கள் விடுபட்டு தரப்படும்.

அவைகளை சரியாக உள்ளீடு செய்து செய்தால் 10 மதிப்பெண் வழங்கப்படும். இதுபோல் நிறைய விளையாட்டுக்கள் உள்ளன.

இதனைப் பயன்படுத்தி நமது நினைவாற்றல் திறனை பெரியளவில் வளர்த்துக் கொள்ள முடியும்.

பேழை
பேழை
பேழை
 

தமிழர் வரலாறு, சேர, சோழ, பாண்டியர் வரலாறு, கி.முவில் நடந்தவை, யாழ்ப்பாணத்தில் வழங்கும் பேச்சுத் தமிழ் போன்றவை கட்டுரைகளாக போடப்பட்டுள்ளன.

தமிழர் தம் வரலாறைப் பதிவு செய்து வைத்திருக்கும் வரலாற்றுப் பதிவாகும் இது.

திருக்குறள்
திருக்குறள்
திருக்குறள்
 

திருக்குறள் முழுமைக்குமான பலரது உரைகள்,  ஆங்கில மொழி பெயர்ப்பு, ஆங்கிலத்தில் விளக்கம் எனத் திருக்குறளை முழுமைப்படுத்தி உள்ளது இப்பக்கம்.

கலைச் சொற்கள்
தமிழ் கலைச்சொற்கள்
தமிழ் கலைச்சொற்கள்
 

பல்வேறு துறை சார்ந்த ஆங்கிலக் கலைச் சொற்களுக்குத் தமிழில் மிகச்சரியான கலைச் சொற்களைத் தந்துள்ளனர்.

அகர திரட்டுகள்
பறவைகள், விலங்குகள், மலர்கள், மீன்கள், தானியங்கள், தொகைச் சொற்கள், இலக்கங்கள், பழங்கள், காய்கறிகள் என இவற்றினுடைய அனைத்து வகைகளின் பெயர்களும், அதன் வேறுபெயர்களும், விளக்கங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சுருக்கச் சொற்கள்
தேடு பொறியில் சுருக்கக் குறியீடுகளைப் பதிவிட்டால் அதுசார்ந்த பல விளக்கங்களைத் தமிழ்ப் பொருளுடன் வெளியிடுகின்றது.

தமிழின் ஓர் அரிய சொத்து என்றே அகரமுதலி இணையதளத்தைச் சொல்லலாம்.

அகரமுதலி இணையதளத்தைப் பார்வையிட www.tamillexicon.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்

வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்


எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற முக்கியமான அங்காடித்தெரு போல, அனைத்து வயதினரையும் திருப்தி செய்கிற, வேறு எங்கும் இல்லாதவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரு சிறந்த இணையதளமாக ’வலைத்தமிழ்.காம்’ அமைந்திருக்கிறது.

மிகப்பெரும் உழைப்பில், தமிழ், தமிழ் சார்ந்த  முன்னேற்றம், தமிழர் களின் வளர்ச்சி,  படைப்பாக்கப்  பெருக்கம், உலக இலக்கியங்களுக்குத்  தக்க தமிழைக் கொண்டு செல்லுகிற முயற்சி. இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்றால், அது வலைத்தமிழ் குழுமத்தின் மூலமாக நடைபெறும் என்று கூறலாம்.

வடஅமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள், சிறப்புடன் உருவாக்கித் தந்திருக்கிற மாபெரும் அட்சய பாத்திரம் ”வலைத்தமிழ்” என்கிற குழுமம்.

இக்குழுமத்தில், வலைத்தமிழ் இணையதளம், வலைத் தமிழ் பன்னாட்டுப்  பல்சுவை மாத இதழ், வலைத்தமிழ் சிறுவர்களுக்கான மாத இதழ், வலைத்தமிழ் அகாடமி, தமிழ்ச்சரம்  எனும் பகுதிகள் சிறப்புடன் இயங்குகின்றன.

இவையெல்லாம், தமிழர்களுக்காகத் தமிழ்  மேன்மைக்காகத்  தமிழ்க் குடும்பங்கள் செய்கிற மாபெரும் இலக்கிய பணியாகும்; சமூகப் பணியாகும்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், மொழியைத் தன் மக்களிடம், அதாவது, தன் சந்ததியினர் மறந்துவிடக் கூடாது, தமிழை வளர்க்க வேண்டும் என்கிற பெரிய அவாவின் காரணமாக, இச்செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாது உலகம் முழுமைக்குமானத் தமிழர்களை ஒன்றிணைத்து மேன்மைப்படுத்தும் செயலையும் செய்து கொண்டிருக்கின்றனர். பாரட்டவேண்டிய அற்புதமான செயல் இதுவாகும்.

”வலைத்தமிழ்.காம்”  என்ற  இணையதளத்தைப் பற்றி இனி காண்போம்.

 

இத்தளத்தில், முகப்புச்செய்திகள், அரசியல், சினிமா, மொழி இலக்கியம், சமையல், ஆன்மீகம், சிறுவர் பகுதி, உடல்நலம், தற்சார்பு, மற்றவை எனும் தலைப்புகளின் உள்ளாகப் பல்வேறு விதமான உள்தலைப்புகளை வைத்துப் படைப்புகளையும், சிந்தனைகளையும் பதிவிட்டு உள்ளனர்.

”செய்திகள்” எனும் பகுதியில், தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சமூகப் பங்களிப்பாளர்கள், தமிழ்ச் சாதனையாளர்கள், தமிழ்த் தொழில் அதிபர்கள், தமிழர்களின் கண்டுபிடிப்புகள் எனும் தலைப்புகளில் பல நூறு கட்டுரைகள், செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

உடனடியாக அவ்வப்பொழுது நடக்கும் செய்திகள், அது எவ்வாறு கூறப்பட வேண்டுமோ, அவ்வாறான நடுநிலையான செய்திப் பரிமாற்றத்திற்கான பகுதியாக இது அமைந்துள்ளது

”அரசியல்” எனும் பகுதியில்  உள்தலைப்புகளாகக் கட்டுரை அல்லது நிகழ்வு, அரசியல் வரலாறு, அரசியல்வாதிகள், தேர்தல், வளர்ச்சித் திட்டங்கள், சுதந்திரப் போராட்டம் எனும் தலைப்புகளில் அரசியல் சார்பான பல கட்டுரைகள், வரலாறுகள் இங்குப்  பதிவிடப்பட்டுள்ளன.

இது வரலாற்றின் தொகுப்பாகும். இளையசமூகம்  தெரிந்து கொள்ளத்  தேவையான செய்திகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

”சினிமா”  என்னும் பெரும் தலைப்பில், சினிமாச் செய்திகள், திரை விமர்சனம்,  சினிமாத் தொடர்கள், திரைப்படங்களின் விபரம், கட்டுரைகள் எனும் உள்தலைப்புகள் காணப்படுகின்றன.

சினிமா சார்பான இளைஞர்களின் தேடல்களுக்கு இது மிகச்சரியாகத் தீனிபோடும். புதுப்புது படங்கள், பழைய திரைப்படங்கள், அவற்றின் சிறப்புகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற பல விஷயங்கள் இங்குப் பரிமாறப்படுகின்றன.

”மொழி இலக்கியம்” எனும் பெரும்பகுதியில், கவிதை, தமிழ்மொழி மரபு, சிறுகதை, கட்டுரை, சங்க இலக்கியம், திருக்குறள், பாடல்கள், தமிழ் நூல்கள், தமிழிசை,  தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஆய்வுக் கட்டுரைகள்,  உலகத்தமிழ் மாநாடுகள் எனும் பகுதிகள் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியப் படைப்பாளர்களின் படைப்புகள் தினந்தோறும் இங்குப் பதிவிடப்படுகின்றன. இலக்கியக் களஞ்சியமாக இது காணப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள், உலகத்தமிழர்களின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.

உலகத்தமிழ் எழுத்தாளர்களை, அவர் தம் படைப்புகளை உணர்ந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் இப்பகுதி பெரிதும் பயன்பாடாக இருக்கும். இளம் படைப்பாளர்கள் முதல், அனைவரும் தமது படைப்புகளை இப்பகுதியில் வெளியிடலாம்.

”சமையல்” எனும் பகுதியில், அசைவ உணவுகள், சைவ உணவுகள், இனிப்புப் பலகாரங்கள், காரப் பலகாரங்கள், ஆரோக்கிய உணவு, சமையல் கட்டுரைகள், பிறநாட்டுச் சமையல்கள் போன்ற எண்ணற்ற சமையல் சார்பான கட்டுரைகள்  இங்குப் பதிவிடப் பட்டுள்ளன. இது பெண்களுக்கான  சிறப்புப் பகுதியாக அமைந்திருக்கின்றது.

”ஆன்மீகம்” எனும் பகுதியில், ராசிபலன் கட்டுரை, இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம், ஓகம், கோயில்கள், பண்டிகைகள், ஆன்மீகம், தமிழர்கள் சிந்தனைகள், ஜோதிடம் என்பன வயது முதிர்ந்தவர்களுக்கான பகுதியாக அல்லது ஆன்மீகத்தை நாடுபவர்களின் தேடுதல் பகுதியாக இப்பகுதி அமைந்துள்ளது.

தமிழகத்தில் காணப்படுகின்ற, வெளிமாநிலங்களில் காணப்படுகிற, பிறநாடுகளில் காணப்படுகிற, திருக்கோவில்கள் குறித்த எண்ணற்ற பல தகவல்கள்  இங்கு கூறப்பட்டுள்ளன. ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகள் நிறைந்து காணப்படுகின்றன.

”சிறுவர்” எனும் தலைப்பின்கீழ், குழந்தை வளர்ப்பு, தமிழ்க் கல்வி,  சுட்டிக் கதைகள், சிறுவர் விளையாட்டு, தமிழகக் கலைகள், குழந்தைப் பெயர்கள், பிறந்தநாள் பாடல், சிறார் செய்திகள், சிறுவர் இலக்கியம்,  கட்டுரைத் தொடர்கள் என்பனவாகக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

உள்தலைப்புகளில், அவை சார்ந்த அனைத்து செய்திகளும்  பதிவிடப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான பயனுள்ள செய்திகள் பல அடங்கியுள்ள பகுதியாக இது அமைந்திருக்கிறது.

”உடல் நலம்” எனும் பகுதியில், மருத்துவ குறிப்புகள், பழங்கள், தானியங்கள், குழந்தை மருத்துவம், காய்கறிகள்-கீரைகள்-பூக்கள், மகளிர் மட்டும், யோகா-தியானம், உடற்பயிற்சி,  ஹெல்த் டிப்ஸ், மகளிர் அழகுக் குறிப்புகள், கட்டுரை  இங்கு  பதிவிடப் பெற்றிருக்கின்றன. இவை உடல்நலம் சார்ந்து தேடுகிற வாசகர்களுக்குப் பலனுள்ள பகுதியாக அமைந்திருக்கிறது.

”தற்சார்பு” எனும் பகுதியில், விவசாயச்செய்திகள், தோட்டக்கலை, விவசாயக்கருவிகள், கட்டுரைகள், கால்நடை-மீன் வளர்ப்பு, தற்சார்பு, வாழ்வியல் எனும் தலைப்புகளோடு கட்டுரைகள் காணப்படுகின்றன.

”மற்றவை” எனும் தலைப்பில், அறிவியல் செய்திகள், பொதுச்சேவை,  சிறப்புத் தகவல், வாழ்வியல், இந்தியச் சட்டம் எனும் உள் தலைப்புகளில் பொதுவான கட்டுரைகள், குறிப்புகள், ஆவணங்கள் போன்ற பதிவிடப்பட்டு இருக்கின்றன.

இத்தளத்தில், திருக்குறள், புகைப்படங்கள்,  காணொளிகள், குழந்தைகளுக்கான‌ பெயர்கள் எனும் தலைப்புகளிலும் தகவல்கள் விரிவாகப் போடப்பட்டுள்ளன.

குறிப்பாக,  ”திருக்குறள்” எனும் பகுதியில் 1330 குறள்களுக்கும்,  ஒலிப்பதிவு முறையிலான  பதிவுகள் உள்ளன.  திருக்குறளை வாசித்துப் பதிவு செய்து இங்கே பதிவேற்றியுள்ளார்கள்.

கண்ணால் கண்டும், காதால் கேட்டும் திருக்குறள் படிக்கலாம், தெளிவாக அறியலாம். அங்கேயே விரிவான உரை விளக்கத்திற்காகச் சொடுக்கியும் உள்ளது. அதைத் தேர்வு செய்தால் பல அறிஞர்களின் திருக்குறள் உரைகள் பதிவிடப்பட்டுள்ளன.

இதைப்போல், ”புகைப்படங்கள்” எனும் பகுதியில் பல வரலாற்று அறிஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
”காணொளிகள்” எனும் பகுதியில் பல வரலாற்றுக்  காணொளிகள் இடம் பெற்றுள்ளன.

”குழந்தைகளுக்கான‌ பெயர்கள்” பக்கத்தில் 1,05,000 குழந்தைகளுக்கான அழகான தூய தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவைபோல அனைத்து பதிவுகளும் மிகப்பயனுள்ளதாக அமைந்திருக்கிறது

 

இத்தளத்தில், ”தமிழ்ச்சரம்” எனும் மற்றொரு தளத்தின் இணைப்பும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்ச்சரம்
தமிழ்ச்சரம்
 

இதைச் சொடுக்கினால் அத்தளம் புதுப்பக்கத்தில் தோன்றி, அதில், ’உலகத் தமிழர்களின் சங்கமம்’ எனும் தலைப்பில், பொது, திரைப்படம், அரசியல், ஆன்மீகம், வீட்டுக்குறிப்பு, வணிகம், புத்தகம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், காணொளி எனும் பகுதிகள் உள்ளன.

இவை ஒவ்வொன்றையும் சொடுக்கினால், வேறு வேறு தளங்களில் பதிவிட்டு இருக்கிற கட்டுரைகளை எல்லாம் கொண்டுவந்து இங்குத் திரட்டி எனும் அமைப்பில்  தருகிறது. இது ஒரு பயனுள்ள திரட்டியாக
செயல்படுகிறது.

வலைத்தமிழ்ப் பன்னாட்டு மாத இதழின் இணைப்பும், வலைத்தமிழ் மொட்டு என்கிற சிறுவர்களுக்கான பன்னாட்டு மாத இதழின் இணைப்பும் இங்குத் தரப்பட்டுள்ளன.

 

வலைத்தமிழ்ப் பன்னாட்டு மாதஇதழின் ஆசிரியர் குழுவில், 10 ஆளுமைகள் காணப்படுகின்றனர். முதன்மை ஆசிரியராக சா.பார்த்தசாரதி அவர்கள் இருக்கின்றார்,

தமிழ் இணையதளங்களில், பல்வேறு தமிழ் மென்பொருள் சார்ந்த முன்னேற்றங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிற நீச்சல்காரன் அவர்கள் துணை ஆசிரியராகவும் மற்றும் பலரும் இருப்பது சிறப்பாகும்.

”வலைத்தமிழ் மொட்டு” எனும் சிறுவர் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் 11 பேர் காணப்படுகின்றனர், அதன் முதன்மை ஆசிரியராகச் செந்தில்நாதன் ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளார்.

சமீபத்தில், 2019-ஆம் ஆண்டில் மூன்று இதழ்களும், ஏப்ரல் 2020 இல் ஒரு இதழும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி வலைத்தள இணைப்பும் தரப்பட்டுள்ளது.

’மக்கள் மன்றம்’ எனும் தலைப்பில் கருத்து கணிப்பும் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது.

 

தமிழ்க் கற்கவும், பிழையின்றி எழுதவும் வலைத்தமிழ் அகாடமி  உதவுகிறது. அதற்கெனவே வலைத்தமிழ்  அகாடமி இயங்குகிறது.

இதற்கெனத் தனிதளமும் இருக்கிறது. அதில் இசை கற்றுக்கொள்வதற்கும், இணையத்திலேயே பரதநாட்டியம் கற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றன.

இது ஒரு மாபெரும் செயல் ஆகும். வெளிநாட்டுவாழ் தமிழ்க் குழந்தைகள் தமிழ் இசை, தமிழர்களின் புராதனமான நாட்டியக் கலை போன்றவற்றை அறிந்து கொள்ள இத்தளம்  மிகப் பயனுள்ளதாக அமையும். இவையும் இக்குழுமத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது.

இத்தளம்,

• 18,000 தமிழ் இணைய முகவரிகள்

• 1,05,000 குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்

• 4,900 தமிழ் இலக்கிய தொகுப்புகள்

• 1,70,000 வார்த்தைகளுக்குப் பொருள் தரும் தமிழ்அகராதி

• 2,000 சமையல் குறிப்புகள்

• 1300 கோவில்களின் அரிய தகவல்கள்

• பல்லாயிரக்கணக்கான செய்திகள்

• புகைப்படங்கள்

• காணொளிகள்

• இசைப் பயிற்சி

• தமிழ்ப் பயிற்சி

• நடனப் பயிற்சி

எனப் பல்வேறுபட்ட தகவல்களைத் தரும் களஞ்சியமாக விளங்குகிறது.

வலைத்தமிழ்.காம் இணையதளத்தைப் பார்வையிட www.valaitamil.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

ிளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌

விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌

விளையாட்டாய்த் தமிழ் கற்க வேண்டுமா?

குழந்தைகளுக்குத் தமிழில் ஆர்வம் உண்டாக்க வேண்டுமா?

தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகியவற்றில் புலமை பெற வேண்டுமா?

ஜெர்மன் மொழியை அறிந்து புலமை பெறவேண்டுமா?

தமிழ்டிக்ட்.காம் (tamildict.com) என்கின்ற​ இத்தளம் உங்களுக்குப் பெரும் உதவி செய்யும்.

ஜெர்மன் மொழி கற்க நிறையக் காணொளிகள் உள்ளன.
அகராதிகள் மூன்று மொழியையும் ஒரு சேரக் கற்க பயன்படுகின்றன.

அந்தத் தளம் குறித்து இனி காண்போம்.

தமிழ்-ஆங்கிலம்-ஜெர்மன் அகராதிகள்
எழுத்துப் பிழை சரிபார்ப்புடன் தமிழ்- ஆங்கிலம்-ஜெர்மன் அகராதிகளுக்குச் சிறந்த தளம்.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கும் முயற்சி இது.

ஒவ்வொரு பார்வையாளரும் புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரைக்கலாம் மற்றும் பிற பயனர்களின் பரிந்துரைகளைச் சரி செய்யலாம் அல்லது உறுதிப்படுத்தலாம்.

திட்டத்தை ஆதரிக்கப் பல சாத்தியங்கள் இத்தளத்தில் உள்ளன.

ஆங்கிலம் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு அகராதி
ஆங்கிலம் முதல் தமிழ் மொழிபெயர்ப்புக்கு, மேலே உள்ள தேடல் பெட்டியில் நீங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க விரும்பும் ஆங்கில வார்த்தையை உள்ளிட்டு ‘தேடு’ என்பதற்கான பொத்தானை  கிளிக் செய்தால் போதும், தமிழில் உள்ள பொருள் வெளிப்படும்.

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு அகராதி
தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, மேலே உள்ள தேடல் பெட்டியில் தமிழ்ச் சொற்களை உள்ளிட உங்களுக்குப் பல விருப்பங்கள் உள்ளன.

1. மேலே உள்ள பெட்டியில் உங்கள் தமிழ்ச் சொற்களை (யூனிகோடில்) வெட்டி ஒட்டவும் மற்றும் ‘தேடு’ என்பதற்கான பொத்தானை கிளிக் செய்யவும்.

2. ரோமானிய மொழிபெயர்ப்பை நீங்கள் அறிந்திருந்தால், மேலே உள்ள யூனிகோட் தமிழை ஆங்கிலத்திற்குப் பொத்தானைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கலாம்.

நீங்கள் ஆங்கில எழுத்துக்களை ஒலிப்பு ரீதியாக தட்டச்சு செய்து, இடம் விடுக் கட்டையை (space bar) அழுத்தும்போது, இவை தானாகவே தமிழ் எழுத்துக்களாக மாற்றப்படும்.

எ.கா., நீங்கள் ஆங்கிலத்தில் ’AMMA’ எனத் தட்டச்சு செய்து இடம் விடுக் கட்டையை அழுத்தினால், அது ’அம்மா’ ஆக மாற்றப்படும்.

ஜெர்மன்-தமிழ் அகராதி
ஜெர்மன் மொழியிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பிற்கு, மேலே உள்ள தேடல் துறையில் நீங்கள் தமிழில் மொழிபெயர்க்க விரும்பும் ஜெர்மன் வார்த்தையை உள்ளிட்டு ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்க.

தமிழ் – ஜெர்மன் மொழிபெயர்ப்பு
தமிழில் இருந்து ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்க, தேடல் துறையில் தமிழ் சொற்களை உள்ளிட உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன.

எண்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் வசதி
எண்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்ற, மேலே உள்ள தேடல் பெட்டியில் எண்ணை உள்ளிட்டு ‘தேடல்’ என்பதை கிளிக் செய்க.

கமாக்கள் போன்ற பிரிப்பான்களைப் பயன்படுத்த வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் 655 என்ற எண்ணை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்தால்,  அது அறுநூற்றி ஐம்பத்தியைந்து என்று மொழிபெயர்க்கப்படும்.

இது 999999999 வரையிலான எண்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுகின்றது. இந்த அம்சம் தமிழ் எண்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

தமிழ் சொல் புதிர்
தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்ளப் புதிர்கள் உதவுகின்றன.

கற்றல் சொற்கள் பயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்வது, தமிழ் சொற்களைக் கற்க எளிதான வழியாகும்.

குழந்தைகளுக்கான இந்தக் கற்றல் பயன்பாடு, தமிழ்ச் சொற்களைக் கற்க குழந்தைகளின் ஆர்வத்தை வளர்க்கிறது.

கற்றல் சொற்கள் புதிர் சொற்களை அடையாளம் காண, பட வடிவமைப்பில் குறிப்புகளை வழங்குகிறது.

குழந்தைகளுக்கான சொற்களை மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்துகிறோம், இது எளிதானது, நடுத்தர மற்றும் கடினமானது. மேலும் குழந்தைகள் தங்கள் ஆர்வத்தின் பின்வரும் துணை வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவானக் குறிக்கோள்களுடன், குழந்தைகளுக்கான சொற்களைக் கற்றுக் கொடுப்ப‌தன் நோக்கம்:

வாசிப்புத் திறனை மேம்படுத்த

– அவர்களின் சரளத்தை மேம்படுத்த

– குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க

– அவர்களின் செறிவு சக்தியை அதிகரிக்க என்பதாகும்.

இந்த விளையாட்டு, தமிழ்ச் சொற்களின் தொகுப்பு மற்றும் குழந்தைகளின் சொற்களஞ்சியத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

இது உங்கள் குழந்தைகளின் அறிவை வடிவமைப்பதற்கும், உங்கள் குழந்தைகளுடன் இந்தக் கற்றல் தமிழ்ச் சொல் புதிரை அனுபவிப்பதற்கும்  உதவும் சொல் விளையாட்டு ஆகும்.

தமிழ் ஒருங்குறி மாற்றி (இ-கலப்பை)
இது விண்டோஸ் 7 மற்றும் 10 இல் நீங்கள் நிறுவக்கூடிய ஒரு விசைப்பலகை (தளவமைப்பு) ஆகும். இந்த அமைப்பு தமிழ்த் தட்டச்சுக்கான கிளாசிக் பாமினி விசைப்பலகைத் தளவமைப்புக்கு நெருக்கமாக உள்ளது.

தமிழ் வார்த்தைகள், ஒரு பொருள் பலசொல், விடுகதைகள், தமிழ் ஹெங்மேன், நினைவாற்றல் விளையாட்டு, ஸ்ரீலங்கா சிட்டி எனும் பகுதிகளில் தமிழ் சார்பான பல விளையாட்டுகள் உள்ளன.

தமிழாலயம்
பதினோறு பகுதிகளில் தனித்துறை சார்பாகக் கணினிக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. விடை கடைசியாகக் காண்பிக்கப்படும்.

பிற எனும் பகுதியில் ஆங்கில இலக்கணம் அறிதல் மற்றும் ஆங்கிலக் கேள்வி பதில்கள் தேர்வாகவும் இருக்கின்றன. மிகப்பயனுள்ள பகுதியாகும் இவை.

விளையாட்டாய்த் தமிழ் கற்க www.tamildict.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ் 

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

ஒளிமயமான பட்டை தீட்டப்பட்ட வைரங்களை மட்டும் வைத்து ஒரு அற்புதமான மாளிகை கட்டினால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தன்மையது “அழியாச் சுடர்கள்” (https://azhiyasudargal.blogspot.com) என்னும் இத்தளம்.

தமிழ் இலக்கிய உலகத்தில், தனது அயராத பணியினால், தன் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள். அப்படைப்பாளர்களின் வரலாறு மிகப் பெரிதானதாகும்.

மாசற்ற இலக்கியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டிருந்த, மாபெரும் ஜாம்பவான்களாகத்  திகழ்ந்தவர்களை இனம் காட்டும் ஒரு அற்புதமான இணையதளமாக ”அழியாச் சுடர்கள்” என்னும் இத்தளம் விளங்குகிறது.
.
நவீன இலக்கியங்களின் வடிவம், கருத்தாக்கம், வெளிப்பாடு, உலக இலக்கியங்களுக்குத் தக மேன்மை அடைந்தும், மாறுபட்டும், புதுமையாக முயற்சி செய்தும் தமிழில் எழுதப்பட்டன.

அவ்வாறு எழுதப்பட்ட இலக்கியங்கள் அத்தனையையும் ஒருசேர காண வேண்டும்; கற்க வேண்டும் என்றால் அதற்குப் பயன்படும் மிகச்சரியான இணையதளமாக இத்தளம் விளங்குகிறது.

 

’நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’ என்ற தாரக மந்திரத்துடன் இந்த இணையதளம் காணப்படுகிறது.

பெட்டகம் என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு இந்த இணையதளம் ஆகும். காரணம், நவீன படைப்புகளினுடைய சிந்தனைகளையும் வெளிப்பாடுகளையும் இங்கு காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் உலகத் தரத்திற்கு இணையாகத் தமிழைக் கொண்டு சென்ற இலக்கியப் படைப்பாளிகளினுடைய மாபெரும் சங்கமம் இங்கு காணப்படுகிறது.

ஒரு தொகுப்புப் பணியாகக் காணப்பட்டாலும், இந்தப் பணி ஒரு அற்புதமான பணியாகும். காரணம், புதிதாக இலக்கியம் கற்க வருகின்ற வேற்றுமொழியாளர் ஒருவர், தமிழில் இன்று செய்து வைத்திருக்கிற இலக்கியங்களை ஆராய வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்று தேடினால் இப்பெட்டகம் அதற்கு வழிவகுக்கும்.

தமிழனுடைய செம்மார்ந்த வீரம் மிகுந்த படைப்பாற்றல், படைப்புத்திறன் போன்ற நம் நவீன தமிழ் இலக்கியங்களை வெளிமொழியினர்களுக்கு இனம் காட்டிப் படிப்பித்து தெளிவடையச் செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அ. மாதவையா, அ. முத்துலிங்கம், ராமசாமி, அசோகமித்திரன், கவிஞர் அபி, அம்பை, அழகிய பெரியவன் என்ற நூற்றுக்கணக்கானவர்களின் பட்டியலில், நவீன தமிழ்ப் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த படைப்பையும் அலசி ஆராய்கிற அல்லது அப்படைப்பையே வெளிக்கொண்டு வருகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கின்றது இத்தளம்.

 

தொகுப்புப் பணி என்றாலும், அது செம்மையான சிறப்பான பணியாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு, கவிஞர் அபி அவர்களின் நேர்காணல் ஒன்றும், கவிதைத் தொகுதியில் சிலவும் போடப்பட்டுள்ளன. கவிஞர் அபி அவர்களின் இலக்கிய நயங்களையும், நளினங்களையும் தெரிந்துகொள்ள இந்த இரண்டு பகுதிகள் போதுமானது.

கவிஞர் அபி அவர்களின் நேர்காணல், அவரைக் குறித்தும், அவரது சிந்தனைத்துவத்தை வெளிப்படுத்தியும், சமகால இலக்கியப் போக்கை நாம் அவதானிக்கவும் நமக்குப் பயன்படுகிறது.

ஆழமான நுட்பங்களை அந்த நேர்கானலில் உணர்ந்து கொள்ளலாம்.
கவிதைகள் குறித்த அவரின் வெளிப்பாடுகள் அலாதியானது.

அப்பேட்டியில் ஒரு கேள்வியும் பதிலும் இவ்வாறு அமைந்துள்ளது.

கேள்வி:

படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.

தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள்.

பதில்:

‘நான் இல்லாமல் என் வாழ்க்கை ‘ என்ற என் கவிதை,

நான் இல்லாமலே

என் வாழ்க்கை

எதேச்சையில்

அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்

கற்பிக்க

நான் இல்லாததால்

நீல வியாபகம் கொண்டது

எதை துறந்தோம் என்று

அறிய வேண்டாத

நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்

பொது ரீங்காரம் மட்டும்

தொடர

நிழல் வீழ்த்தாமல்

நடமாடியது

கூரைகளுக்கு மேலே

தன்மைகளின் எதிர்ப்பை

அலட்சியம் செய்து

அசைவு தெரியாமல்

பறந்து திரிந்தது

பூமியை துளைத்து

மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு

அகப்படாமல்

நுட்பம் எதுவுமற்ற

சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து

குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம்

புகைந்து அடங்குவதை

வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து

தொலைதூரத்து வாசனையாய்

மிஞ்சிற்று

எனது குறியீடுகளின்

குறுக்கீடு

இல்லாது போகவே

தன்னைத் தனக்குக்

காட்டிக் கொண்டிருப்பதையும்

கைவிட்டது

”எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் – இவை என் நிரந்தர உளச்சல்கள்.

எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை.

இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது.

எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன்.

அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை.

இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது.

இந்தக் கவிதையில் தனித்து விடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன.

இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும்”..

எனும் பகுதி மிக அற்புதமான கேள்விப் பதிலாகும். இது சரியான புரிதலைக் குறித்ததாகும்.

கனவு அன்று கனவு எனும் கவிதைகள் அவரது மிகச்சிறந்த கவிதைத் தொகுதியாகக் கருதப்படுகிறது. அவரது காலம் எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் மற்றும் மாலை எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் இங்கு நவீன இலக்கியத்தின் சான்றாகப் பகிரப்பட்டுள்ளன.

 

இதேபோல், மௌனியின் சிறுகதைகள், மௌனி குறித்த கட்டுரைகள், அவரைக் குறித்த திறனாய்வுகள் இத்தளத்தில் காணப்படுகின்றன.

சி.சு.செல்லப்பாவின் சிறுகதைகள், அவரைக் குறித்த கட்டுரைகள், பெரிய அளவில் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு அளவிடமுடியாத கட்டுரைகளும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைகளும், நாவல் குறித்த திறனாய்வுகளும், படைப்புகளும் காணப்படுகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒரே இடத்தில் அறிவதும், அவர்களின் படைப்பையும், அவர்களைக் குறித்த படைப்புகளையும் காண்பது, நவீன இலக்கியத்தைத் தேடுபவர்களுக்குச் சொர்க்கமாக கிடைத்திருப்பது இத்தளம் ஆகும்.

கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஆளுமைகள் குறித்த ஆவணப் படங்கள் இத்தளத்தில் காணப்படுகின்றன. கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் மிகச்சிறந்த தமிழிலக்கியப் படைப்பாளி மற்றும் ஆவணப்பட இயக்குனர் ஆவார்.

ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம், மா. அரங்கநாதன் குறித்த ஆவணப் படம், இந்திரா பார்த்தசாரதி குறித்த ஆவணப்படம், சேக்கிழார் அடிப்பொடி குறித்த ஆவணப்படம், திரிலோகம் என்று ஒரு கவி ஆளுமை எனும் ஒரு ஆவணப்படம் போன்றவைகள் காணப்படுகின்றன.
.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், இசை, இலக்கிய வரலாறு, திறனாய்வுகள், ஓவியம், கலைகள் என அனைத்துத்துறை சார்ந்த சாதனைச் செம்மல்கள் இங்கு அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர் அல்லது மேன்மைப்படுத்தப் பட்டுள்ளனர்.
.
தமிழில் நவீனஇலக்கியக் கர்த்தாக்களை அடையாளப் படுத்தியதைப் போல் ”உலக இலக்கியம்” என்னும் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சொடுக்கினால் வேறு ஒரு வலைப்பூப் பக்கத்திற்குச் செல்லுகிறது.

தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் போல, உலக இலக்கிய ஜாம்பவான்களின் பட்டியல்லும் அங்கு வெளியிடப்பட்டுள்ளன.

”ஆண்டன் பாவ்லொவிச் செகாவ் , ஆல்பெர் காம்யு,  இடாலோ கால்வினோ, எர்னஸ்ட்ஹெமிங்வே, ஃபிரான்ஸ்காஃப்கா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், டொனால்டு பார்தெல்மே, தஸ்தயேவ்ஸ்கி” போன்ற 25 உலக இலக்கியவாதிகளை அடையாளப் படுத்தியுள்ளனர்.

அங்கு, தமிழ் இலக்கியவாதிகளும் கூறப்பட்டுள்ளனர். இது, உலக இலக்கியத்தில் தமிழ் இலக்கியவாதிகளும் அடக்கம் எனும் செய்தியைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

 

இத்தளத்தை இதுவரை ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள்.

அழியாச் சுடர்கள் எனும் தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்கள் குறித்தான இணையதளத்தை 25 லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள். இது சிறப்பான ஒன்றாகும்.

 

இவ்விரண்டு தளங்கள் குறித்துத் தமிழ்ப் படைப்பாளர்களில் முக்கிய மானவர்களான திரு. ஜெயமோகன் .திரு. எஸ் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரின் கருத்தும் இத்தளத்தின் சிறப்பை எடுத்தோதும்..

”இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.

https://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது.

ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்” என்பார் ஜெயமோகன்.

 

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றி வருகிறது.

அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக் காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். என்பார் எஸ் ராமகிருஷ்ணன்.

அழியாச்சுடரை பார்வையிட https://azhiyasudargal.blogspot.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)


பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ் 

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி


இந்துமதம் என்பது, தொடக்கம் காண இயலாத பிரம்மாண்டத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையதாகும்.

கிளை விரித்தாளும் ஆலமரத்தைப் போன்று ஒன்றே பலவாக மாறும் தன்மையுடையதாகும்.

அறிவைக் கண்டு அடைவதற்கும், பிறப்பின் சூட்சுமத்தை விளங்கிக் கொள்வதற்கும், நிகழ்வுகளில் தெளிவு பெறுவதற்கும் துணையாய் இருப்பது இந்து மதமாகும்.

சிந்தனைகளும், வாழ்க்கை முறைகளும், உடலியல் அதிசயமும், அறிவியல் கூறுகளும் ஒருமித்து இறைக்கோட்பாடாக ஆக்கப் பெற்றிருக்கிற மதம் இந்து மதமாகும்.

இந்து மதத்தின் ஒரு பகுதியான ”சைவ சமயம்” தன் பரப்பில், மீண்டும் மீண்டும் உயர்ந்தும், ஆழமாகியும், நிறைந்தும், பெருகியும் காணப் பெற்று அனைவராலும் உணரத்தக்கதாக இருக்கிறது.

இவை அனைத்தையும் எழுத்தாலும், வாக்காலும், இசையாலும், நடிப்பாலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் நமக்கு இருக்கும் என்றால் ”சைவம்” எனும் இத்தளத்திற்குச் சென்றால் போதும்.

நமக்குத் தேவையான எல்லாம் அங்கு கிடைக்கும். இல்லை என்ற ஒன்று அங்கு இல்லை எனும் அளவு கடுமையான உழைப்பால் இத்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

 

இணையதளத்தின் முகப்புப் பகுதியில் இந்துமதத்தின் வரலாறுகள், அவற்றின் தன்மை, சிறப்பு, விளக்கம் எனப் பல்வேறு விதமான தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

விளக்கங்கள் சைவ சமயம் குறித்தான அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறன.

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆழமான கருத்துக்கள் இறைத் தன்மையின் வெளிப்பாடுகள், மகத்துவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை சைவ சமயம் குறித்தான ஆழமான பார்வையை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

அறிமுகம் எனும் பகுதியில், இந்து மதத்தின் அடிப்படைத் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இத்தலங்கள் செய்துகொண்டிருக்கிற சமூகப்பணிகள் மற்றும் அதற்குத் தேவையானவைகள் போன்றவை இங்கு கூறப்பட்டிருக்கின்றன.

பொது எனும் தலைப்பில் உலக அளவில் நடைபெறும் சைவ சமயத் திருவிழாக்கள், முக்கியமான நாட்கள், விரதங்கள் போன்றவைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த இந்து சமய நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்துவதாக இப்பகுதி காணப்படுகிறது.

பொதுஅறிவு எனும் துணைத் தலைப்பில், சைவம் குறித்தான பல்வேறு வினா விடைகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில், இணையவழி சைவ சமய வினா விடைகளைத் தேர்வாக எழுதி, மதம் குறித்தான அறிவை பெருக்கிக் கொள்ள இப்பகுதி உதவுகிறது.

புத்தகம் மற்றும் இணையதளத் தொடர்பு முகவரி எனும் பக்கத்தில் சைவ சமயம் குறித்தானப் பல்லாயிரம் நூல்களின் பட்டியலும் கட்டுரைகளின் பட்டியலும், அறிஞர்களின் கோட்பாடுகள், சிந்தனைகள் போன்றவற்றை தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சைவ சமய இதழ்கள் எனும் பகுதியில் சைவ சாஸ்திர பரிபாலனம் எனும் இதழும், அருள் ஒளி எனும் இதழும், அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழும் பதிவிடப்பட்டுள்ளன.

மார்ச் 2020 வரை வந்துள்ள அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழை இங்கு படிக்கலாம். மிகச் சிறப்பான ஆன்மீக இதழ் இதுவாகும்.

சைவநிறுவனங்கள் எனும் தலைப்பில், தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் மற்றும் உலக அளவில் காணப்படும் சைவசமய நிறுவனங்கள் எங்கெங்கு இருக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்பதை விளக்குவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

கோயில்கள் எனும் பகுதியில் உலக அளவில் காணலாகும் சிவ தலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. கோவில்களின் சிறப்புத் திருவிழாக்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புப் மிக்க கோவில்களின் பட்டியலும் இங்கு காணப்படுகிறது.

யாத்திரை எனும் தலைப்பிற்குள், இந்தியாவில் உள்ள யாத்திரை செல்ல வேண்டிய மிக முக்கியமான திருத்தலங்கள் குறித்தான முழுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.

புனித இலக்கியம் எனும் மாபெரும் பகுதியில், திருமுறை எனும் துணைத் தலைப்பில் பன்னிருதிருமுறைகள், ஒவ்வொரு திருமுறைகளாகத் தனித்தனியாகத் தொகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

வரி வடிவமாகவும், இசை வடிவமாகவும் அந்தப் புனிதமான திருமுறைகள் காணப்படுகின்றன. வாழ்நாள் முழுவதும் படித்தாலும் படிக்க முடியாத, உணர்வதற்கு இயலாத மாபெரும் உன்னத உணர்வை இலக்கியமாக இங்கு நாம் காண்கின்றோம்.

இந்தப் பணியானது மிகச் சிறந்த மாபெரும் புனித பணியாகும். அதேபோல், தமிழ் எனும் துணைப் பகுதியில் திருமுறைகள், ஆகமங்கள், சைவ சித்தாந்தம், தல புராணங்கள், மொழிபெயர்ப்பு, வீர சைவம் ஆகியவை குறித்த பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைவ சித்தாந்தம் பகுதியில் விளக்கங்கள், சொற்பொழிவுகள், பல்லாயிரம் பக்கங்கள் பேசப்பட்டுள்ளன. இது ஒரு ஆன்மீக களஞ்சியமாகக் காணப்படுகிறது.

தொகுப்பு எனும் பகுதியில், இசை ஒலித்தொகுப்பாகவும், படக்காட்சித் தொகுப்பாகவும், புகைப்படத் தொகுப்பாகும் காணப்படுகின்றன. இவை வரலாற்று ஆவணமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

புகைப்படக் கோப்புகள் சைவம் குறித்தான பல்வேறு ஆலயங்களை வரலாறாகப் பதிவு செய்துள்ளன. கோவில்கள், கோவில் கட்டுமானக் கலைகள், திருவிழாக்கள் இறைவனின் உற்சவப்படங்கள், அறிஞர் பெருமக்களின் இறை ஞான புகைப்படங்கள் எனப் பல்வேறு விதமான ஆவணங்கள் இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சைவத் திருமுறைகள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் போன்றவை அறிஞர் பெருமக்களால் விளக்கப்பட்டுள்ளன. இசை வடிவம் காணப்படுகின்றது.  அவற்றைத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இத்தளத்தில் காணலாம்.

24 மணி நேரமும் கேட்பதற்கு வசதியாக இசைச் சொற்பொழிவுகளும், இசைப் பாடல்களும் திருநெறிய தமிழோசை எனும் பகுதியிலும் சைவ லகரி என்னும் பகுதியிலும் ஒளிபரப்பப்படுகின்றன.

இவை நாள்தோறும் சைவ அன்பர்களுக்குச் சைவத்தின் சாராம்சங்களை எல்லாம் எடுத்தோதுகின்றன.

 

ஆன்மீகத்தைத் தேடுபவரின் கண்களுக்கும். காதுகளுக்கும், அறிவுக்கும், சிந்தனை மாற்றத்திற்கும் பெரும்வித்தாகவும் சொத்தாகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மகான்களின் சிந்தனையில் உதித்த சைவ நூல்கள் பழங்காலம் தொட்டு இக்காலம் வரைச் சேகரிக்கப்பட்டு விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளன.

இத்தளம் செல்பேசியில் பயன்படும் வகையிலும் தனிச் செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மொத்ததில் சைவம் தழைத்தோங்கச் செய்யும் இணையதளமாகவும், ஆன்மீக ஆவணமாகவும், அன்பர்களை வழி நடத்தும் வழிகாட்டி யாகவும் இத்தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

”ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி…” என முழுமுதலைப் பாடும் சேக்கிழாரின் வரிகளுக்கிணங்க சைவத்தின் எல்லாவற்றையும் விளக்கி முழுமுதலாய்த் திகழ்கிறது இத்தளம்.

சைவம்.ஓஆர்ஜி பார்வையிட https://shaivam.org/ ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)



பாரதிசந்திரன்

நன்றி இணைய இதழ்

நரித்தனமானது வார்த்தையின் பொருள்

நரித்தனமானது வார்த்தையின் பொருள்


வார்த்தைகள் சில பொழுதுகளில்

விலை போய்விடுகின்றன வக்கற்று.

 

சில தடிமன் ஆகவும்

சில நோஞ்சான் ஆகவும்

அவதியாய் பிரயோசனப்படுகின்றன.

அவை ஒவ்வொன்றும் உள்ளொன்றும் புறமொன்றும்

வைத்துப்பேசுகின்றன..

 

வார்த்தை ரோசம்அற்றது அல்ல.

சடமும் அல்ல .

அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரிஆனது…

 

இழிந்ததும் கெட்டதும் என்று உண்டு

இழிசாதி என்பதை போல.

மங்கலம் ஆகி மணி மகுடம் தரிப்பதும் உண்டு

உயர்சாதி என்பதை போல.

 

“கோபத்தில் வந்த வார்த்தை அது. அதைச் சும்மா சும்மா சொல்லி மாரடிக்காதே”

வார்த்தை சாகடிக்கவும் செய்யும் கற்புக்கரசி கதை…

 

“இவர்களை மன்னியும் ஆண்டவரே”

வார்த்தை அருள் தரவும் செய்யும்

மேய்ப்பரின் கதை…

 

இவைகளோடு பயணிக்கத் தொடங்கி

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

சிறகிழந்த ஈசலாய்

செத்துப்போன – என்

வாழ்விழந்த வார்த்தைகள்…



பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்


தமிழ்ச்சுரங்கம் எனும் பெயருக்கேற்ப மாபெரும் அறிவுச் சுரங்கமாகவும், ஆற்றல் தரும் சுரங்கமாகவும், ஊற்றாய் ஊறும் சிந்தனைகளைத் தரும் சிந்தனைச் சுரங்கமாகவும், சேகரத்தின் முழுமையை உணர்த்தும் முழுமையின் சேகரமாகவும் அமைந்திருப்பதை தமிழ்ச்சுரங்கம்.காம் தளத்தைப் படிப்பவர் அனைவரும் உணரலாம்.

சுரங்கம் என்றால் தமிழெனும் மலையைத் தேடச் செல்லும் பாதுகாப்பான, அழகான சுரங்கம் இதுவாகும்.

வாருங்கள் தளத்தைக் குறித்துக் காண்போம்.

 

இத்தளத்தில் முதன்மையான ஒன்றாகக் கருதுவது இலக்கியங்கள் எனும் தலைப்பாகும்.

இத்தலைப்பின் கீழ், நம் தமிழ்மொழியின் ஆழமும், அகலமும் மிகப்பெரும் பாரம்பரியமும், தொன்மையும் மிக்கதான சங்க இலக்கியங்கள் எனும் உள்தலைப்பு உள்ளது.

அதனுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய தlலைப்புகளில் உள்ள அனைத்துப் பாடல்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கியமான தொகுப்பாகும். அனைத்துப் பாடல்களையும் ஒருங்கே ஒரு இடத்தில் கிடைப்பதற்கு வழி செய்தமை மிகப் பெரும் சிறப்பாகும். பல இலக்கியங்களுக்குப் பொருள் தந்திருப்பது அதைவிட சிறப்பாகும்.

காப்பிய இலக்கியங்கள் எனும் பெரும் பகுதியில் ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

சமய இலக்கியங்கள் எனும் பகுதியில் பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சைவ சித்தாந்த நூல்கள் ஆகிய அனைத்தும் போடப்பட்டுள்ளன.

பக்தி இலக்கியங்களின் அனைத்துப் பாடல்களும் ஒரே இடத்தில் இங்கிருப்பது தேடுபவர்களுக்கு இதொரு சொர்க்கப் பகுதியாகும்.

 

தமிழ் உலகம் எனும் தலைப்பில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழக மாவட்டங்கள், தமிழ்ப் பெயர்கள், தமிழக சிறப்பு, அம்சங்கள், தமிழர் வாழும் நாடுகள், இலக்கிய நூல்களின் பட்டியல் எனும் தலைப்புகளில் தமிழகம் குறித்தான அனைத்து விதமான செய்திகளும் தரவுகளும் தொகுத்து இங்கு தரப்பட்டுள்ளன.

இத்தளத்தின் அளப்பரிய பெருமையினை இப்பகுதி வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தமிழகம் சார்ந்த செய்திகளைத் தேடுவோர் இப்பகுதியில், அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்ளும் விதமாக இங்கு செய்திகள் போடப்பட்டுள்ளன.

 

அறிவியல் என்னும் தலைப்பில் வானவியல் பகுதி, கிரகங்களின் மற்றும் துணைக் கிரகங்களின் தன்மையினை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

ஒளியியல் எனும் தலைப்பின் கீழ் மாயப் படங்கள் மற்றும் 3d படங்கள் எனும் தலைப்புகளில் அறிவியல் சார்ந்த மாயப் பிம்பங்களைக் குறித்தான விளையாட்டுகளும் செய்திகளும் கணித அறிவும் போடப்பட்டுள்ளன.

பொது அறிவு எனும் தலைப்பின் கீழ், பொதுஅறிவுக் கட்டுரைகள், நீதிக் கதைகள், எனும் பகுதிக்குள் தெனாலி ராமன் கதைகள், முல்லாவின் கதைகள் போன்றவை மிகப்பெரிய அளவில் தொகுக்கப்பட்டு போடப்பட்டுள்ளன.

பொதுஅறிவுக் கட்டுரைகள் பல்வேறு பொதுப் போட்டிகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் மிகப் பயனுள்ள பகுதியாக இருக்கும்.

விளையாட்டுகள் எனும் சிறு தலைப்பில் மனதை அறியும் கருவி. சினிமாக் கட்டம் போன்ற விளையாட்டுக்கள் பதி விடப்பட்டுள்ளன.

 

ஆன்மீகம் எனும் பெரும் தலைப்பில் ஆன்மீக நூல்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை இந்துமதம் சார்பாகவும். திருவிவிலியம் பகுதியில் பழைய ஏற்பாடும் மற்றும் புதிய ஏற்பாடும் கிறிஸ்துவ மதத்தின் நூல்களாகவும் அங்கு சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்மீகக் கட்டுரைகள், தந்திர-குண்டலினி யோகம் போன்றவை குறித்த விளக்கங்கள், மந்திரங்கள் குறித்த கட்டுரைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆன்மீகத்தைத் தேடுபவர்களுக்கு இப்பகுதியானது, அதிகமான செய்திகளைத் தருபவையாக இருக்கின்றன.

ஜோதிடம் எனும் பகுதியில், வேத ஜோதிடம், ஆருடங்கள், எண் ஜோதிடம், மற்றும் ஜோதிட குறிப்புகள், ஜோதிடம் சார்பான கட்டுரைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவம் என்னும் பெரும் தலைப்பில் பொது மருத்துவம் என்பவற்றில் இயற்கை மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவக் கட்டுரைகள், பிற மருத்துவக் கட்டுரைகள் எனப் பலவேறு கட்டுரைகள் மருத்துவம் குறித்தான செய்திகளைக் கூறுவனவாக இருக்கின்றன.

இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம்மிக்க சித்த வைத்திய முறைகளை அறிந்து கொள்ள முடியும். பொது மருத்துவம் குறித்த நிறைய கட்டுரைகள் இங்கு காணப்படுகின்றன.

பெண்கள் பகுதி என்னும் பெரும் தலைப்பில் பெண்கள் சார்பான மருத்துவக் கட்டுரைகள், அழகுக் கட்டுரைகள், சமையல் செய்கின்ற முறைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கோலங்கள், மருதாணி போன்ற பெண்களுக்கு விருப்பமான செய்திகள் கட்டுரைகளாகப் பட விளக்கங்களாக இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நகைச்சுவை எனும் தனிப் பகுதியும், அதில் சிரிப்புகள், கடி சிரிப்புகள், சர்தார்ஜி சிரிப்புகள், முட்டாள் சிரிப்புகள், ராமு-சோமு சிரிப்புகள், அமலா-விமலா சிரிப்புகள் ஆகியவை பதிவிடப்பட்டுள்ளன.

 

கலை உலகம் எனும் பெரும் தலைப்பில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பல கட்டுரைகள் உள்ளன.

தமிழகத்திரையரங்குகள் பட்டியலும், திரைப்படச் செய்திகள் குறித்த கட்டுரைகளும், திரைக்கதை மற்றும் வசனம் போன்ற செய்திகளும், தமிழிசை இசைக்கருவிகள் குறித்த கட்டுரைகளும், விளக்கங்களும் இப்பகுதியில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

திரைப்படம் குறித்தான செய்திகளைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சுரங்கமாகக் காணப்படுகிறது.

புதுக்கவிதைகள் எனும் பகுதியில் பல கவிஞர்களின் புதுக்கவிதைகள் அணி செய்கின்றன. அதேபோல், மரபுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என இக்கால இலக்கியத்தின் தன்மைகள் தனித்தனி தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹைக்கூ பகுதியில் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன. கட்டுரைகள் எனும் பகுதியில் பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் எனும் பகுதியின் நாட்டுப்புற இலக்கிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலைக்களஞ்சியம், வரைபடங்கள் போன்ற தலைப்புகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேடுபொறி எனும் தலைப்பின் கீழ் தமிழ்த்தேடல் மூலமாகத் தமிழ் சொற்கள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தரும் பகுதி அமைந்திருக்கிறது.

அதேபோல் அகராதி என்னும் தலைப்பின் கீழ் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் பகுதியும் அமைந்திருக்கிறது.

இதன்மூலம் இளைஞர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சொற்களையும் தமிழ்ச் சொற்களிலிருந்து தமிழ்ச் சொற்களையும் அறிந்து தெரிந்து தமிழ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இப்பகுதிகள் உதவியாக இருக்கின்றன.

வானொலி பகுதியில் இணைய வானொலிச் சேவைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளம் தேடுபவர்களுக்குத் தேடுகிற பொருளையும், நாடுபவர்களுக்கு நாடுகிற அறிவுச் செல்வத்தையும் வழங்கும் தன்மையான தளமாகும்.

சுரங்கம் எனும் பெயருக்கு ஏற்பத் தமிழ்சுரங்கம் என்னும் இத்தளம் எல்லாவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற ஆழமான அகலமான சிறப்புப் பொருந்திய தளமாக விளங்குகிறது.

இலக்கியங்கள், தமிழர் பண்பாடு,  தமிழர் சிறப்பு, பொது அறிவுச் சிந்தனைகள், ஆன்மீகம் குறித்தான விளக்கங்கள், ஜோதிடம், மருத்துவம், சமையல், நகைச்சுவை, திரைப்படம் என எல்லாத் தளங்களையும் தொடுகிறது.

அவற்றில் மிகுதியான தரவுகளையும், செய்திகளையும், கட்டுரைகளையும் தந்திருக்கிற ஒரு மாபெரும் இலக்கியச் சமூக விழிப்புணர்வு அறிவுத்தேடலான தளமாக தமிழ்சுரங்கம் எனும் இத்தளம் விளங்குகிறது.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளத்தினைத் தனியொரு நபராக இருந்து உருவாக்கிய ஒருவர் திரு கே.ஆர்.சக்திவேல் ஆவார். அவரின் தமிழ்ப்பணி யாரும் செய்ய இயலா அரும்பணியாகும்.

கடும் உழைப்பால் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரைத் தமிழ் உலகம் என்றும் இதன் மூலம் மறவாது. அவரின் இணையதளம் குறித்து அவர் கூறுவதை இனி காணலாம்.

ஓர் இனத்தின் வளர்சியும், வாழ்வும் அந்த இனம் பேசுகின்ற மொழியைப் பொருத்தே அமைகிறது.

அதுபோல ஒரு மொழியின் வளர்சியானது அம்மொழியில் உருவாகும் இலக்கிய நூல்கள் மற்றும் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயனுள்ள நூல்களைப் பொருத்தே அமையும்.

மேலும் ஒரு மொழி வளர்ச்சியடையும் போது அந்த இனமும் வளர்ச்சியடையும். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழியக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

தமிழ் இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தொன்மை ஆகியவை நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அடங்கியிருக்கிறது.

நம் தமிழினத்தை காலச்சூழலிலிருந்தும், அன்னியர் ஆத்திக்கத்திலிருந்தும் காப்பாற்ற கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நமது இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் இனத்தின் இளைய தலைமுறையினருக்கு உணர்த்தி, அவர்களை பிற மொழியின் மேல் ஆர்வம் கொண்டு நம் மொழியை உதாசினப்படுத்துவதையும், தேவையற்ற இடங்களில் கூட, குறிப்பாக சொல்ல வேன்டுமானால் வீட்டில் கூட பிற மொழியைப் பயன் பயன்படுத்தும் அவலத்தையும் தடுக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது.

நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சுரங்கம்.காம் இணையதளம்.

மிகமுக்கியமான தமிழ் இணையதளங்களின் பட்டியலில், முன்னிலையில் உள்ள தளம் இதுவாகும். அதைப் பார்வையிட www.tamilsurangam.in ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி  இனிது இணைய இதழ்

தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்


தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான பரப்புகளையும் அடையாளப் படுத்தும் மிகச்சரியான இணையதளமாகத் “தமிழ்ஆதர்ஸ்.காம்” எனும் இணையதளம் அமைந்திருக்கிறது.

தேவையற்ற பகட்டான பக்கங்களைக் கொஞ்சம் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், தேவையான, சிறப்பான சிலவற்றை மட்டும் பெரிய அளவில் பதிவு செய்து இருக்கின்ற அற்புதமான   தளமாக இத்தளம் அமைந்திருக்கிறது.

”தமிழ்ஆதர்ஸ்.காம்” இணையதளம், பக்க வடிவமைப்பிலும் சிறந்த வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. பார்த்தவுடன் பிரமிப்பைத் தருகிற சில இணையதளங்கள் போல அல்லாமல் மிக நேர்த்தியாக, எளிமையும் வளமும் உடையதாக இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இந்த இணையதளத்தின் ஆசிரியராக எழுத்தாளர் அகில் இருக்கின்றார். அவரது பக்கத்தில், சமூகம் சார்பான பல கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது அவரது சமூகச் சிந்தனையைக் காட்டுகிறது. இத்தளத்தை உருவாக்குவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக அப்பகுதி விளக்குகின்றது.

குறிப்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை அவசியமா? மாட்டிறைச்சிக்குத் தடை? சர்வதேச தாய்மொழி தினம், இந்தப் பிரபஞ்சத்தை ஆண்ட பிரபஞ்சன் எனும் கட்டுரைகள் அவரது இலக்கியத் தன்மையை, சமூகப் பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

இந்த இணையதளத்தில், கட்டுரைகள் எனும் பகுதியில் கட்டுரை எழுதிய ஆசிரியரின் பெயரும், கட்டுரையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன.

அனைத்துத்  தலைப்புக்களும் வெவ்வேறு கோணத்தை உடைய, பல்வேறு விதமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, ஈழத்தில் நாட்டுக் கூத்துகலை, மன அழுத்தமும் தற்கொலைச் சிந்தனையும், கடல்கோள்களும் சுனாமிகளும் எனும் தலைப்புகள் வெவ்வேறு கோணத்தை நமக்குக் காட்டுகின்றன.

இதுபோல் பல நூறு கட்டுரைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த சிந்தனைகளின் தொகுப்பாகவே இவைகள் அமைந்திருக்கின்றன. இவை கருத்துக் கருவூலமாக இருப்பதாகப்படுகிறது.

சிறுகதைகள் எனும் தலைப்பின் கீழ், கட்டுரைகள் பகுதி போல் ஆசிரியர் பெயரும், சிறுகதையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன. இத்தலைப்பின் கீழ் பலநூறு சிறுகதைகள் காணப்படுகின்றன.

நவீன சிறுகதைகளை உள்ளடக்கியதாகச் சிறுகதைகளின் கருத்தாக்கம் அமைந்துள்ளன என்பதை சிறுகதைகளைப் படிக்கும் பொழுது நாம் உணர்கிறோம்.  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளின் தொகுப்பு இத் தொகுப்பாகும்.

கவிதைகள் எனும் தலைப்பும் இவ்வாறு அமைந்துள்ளது. நவீனம் சார்ந்திருக்கிற கவிஞர்கள் இப்பகுதியில் தமது கவிதைகளைத் தந்திருக்கின்றனர்.

கவிதை குறித்து அறிய விரும்புகிறவர்கள் இக்காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கவிதையின் தரத்தை இப்பகுதியில் கண்டு உணரலாம்.

ஒரு சில தலைப்புகளைக் கொடுத்துக் கவிஞர்களுக்கு எழுதச்சொல்லியும் அதனை வெளியிட்டுள்ளனர். இது, ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு கவிஞர்களின் சிந்தனைப் போக்குகளை அடையாளப்படுத்துகின்றது.

நூல் ஆய்வு எனும் பகுதியில் தமிழில் வெளியிடப்பட்டு இருக்கிற நூல்களின் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகமான நூல் ஆய்வுகளைக் கவிஞர் இரா.இரவி அவர்கள் செய்திருக்கின்றார்.

உலகக் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாளர்கள் ஆகியவர்களின் நூல்கள் குறித்தான, வாசகர்களின் எண்ணப் போக்கை இங்கு தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒரே இடத்தில் பல நூறு நூல்கள் குறித்தான ஆய்வுகளைக் கண்டறிய முடிகின்றது.

மின் நூலகம் எனும் பகுதி, எழுத்தாளர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாகும். காரணம் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. மின்நூலகம், 104 படைப்பாளர்களின் நூல்கள் அனைத்திலும் கூடுமானவரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும்.

நேர்காணல் பகுதியில் 42 தமிழ் எழுத்தாளர்களிடம் சென்று நேர்காணல் செய்து, பதிவிட்டு இருக்கிறார்கள். இத்தளத்தின் ஆசிரியர் அகில் நிறைய தமிழ் இலக்கிய ஆளுமைகள் உடன் நேர்காணல் செய்து இருக்கிறார்.

மருத்துவம் என்னும் பகுதியில், மருத்துவக் கட்டுரைகள் பலநூறு இடம்பெற்றுள்ளன. மருத்துவம் சார்பான அனைத்துச் செய்திகளையும் தருவதற்கு இப்பகுதி முயற்சி செய்கிறது எனலாம்.

இலங்கையின் எழுத்தாளர் கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் அதிகமான மருத்துவக் கட்டுரைகளை இப்பகுதியில் எழுதியுள்ளார்.

சினிமா எனும் பகுதியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் மொழி மாற்றத் திரைப்படங்கள் ஆகியவைகள் குறித்தான விமர்சனங்கள், திறனாய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கவிஞர் இரா.இரவி, ஞா.ஆரணி, வித்யாசாகர் ஆகிய எழுத்தாளர்கள் அதிகமான திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். விரிவான திரைப்படத் திறனாய்வான இப்பகுதி திரைப்பட ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

பலதும் பத்தும் எனும் பகுதியில் உலகில் காணலாகும் இலக்கிய நிகழ்வுகள் அல்லது சமூக நடத்தைகள் குறித்தான விளக்கங்களாக அல்லது விமர்சனங்களாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்துக் கட்டுரைகளும் மிக ஆழமான செய்திகளைச் சரியான நோக்கத்துடன் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி எடுத்துக் கூறுகின்றன. கட்சி, ஜாதி, மதம் எனும் எந்தவிதமான பாகுபாடுகளையும் காட்டாமல் விமர்சனங்கள் தரப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.

குறும்படம் எனும் பகுதியில், தமிழில் தற்பொழுது எடுக்கப்பட்டிருக்கின்ற தரமிக்கதான குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். குறும்படங்கள் குறித்து காண விரும்பும் வாசகர் பல்வேறு சேனல்களில் காணப்படும் தரமற்ற குறும்படங்களைக் கண்டு ஏமாற வேண்டியுள்ளது.

ஆனால் இத்தளத்தில் காணப்படும் அனைத்துக் குறும்படங்களும், அது குறித்த தகவல்களும் தமிழ்க் குறும்படத்தின் மேன்மையை கருத்தில் கொண்டவைகளாக அமைந்திருக்கின்றன.

குறிப்பாக, 2020-இல் வெளிவந்த குறும்படத்தில் ஒன்று. கம்பளிப்பூச்சி எனும் குறும்படம் குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் பள்ளி ஆசிரியர்களின் தவறான தொடுதல்களினால் மனம் வேதனைப் படும் நிலையை நேர்த்தியாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் தவறான நடத்தைகள், குழந்தைகளின் மனதில் எதிர்கால வாழ்வையே சூறையாடி விடுகிறது என்பதை குறும்படம் வெளிப்படுத்துகிறது.

இலக்கியத் தகவல்கள் எனும் பகுதியில் உலக அளவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன.

எழுத்தாளர்கள் எனும் பகுதியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலும், அவர்கள் தம் நூல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பு மிகச்சிறந்த தொகுப்பாகக் காணப்படுகின்றது.

இந்தியாவில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலை ஒரே இடத்தில் காண வேண்டுமானால் இத்தளத்தில் காணலாம்.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு தொகுப்பாகச் சிற்றிதழ்கள் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சிற்றிதழ்களின் முகவரி, அவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆசிரியர் பெயரும் தரப்பட்டுள்ளன.

காணொளிக் காட்சிகளின் தொகுப்புகள் இங்கு ஒளிப்பேழை எனும் பகுதியில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பல அற்புதமான காணொளிகள் இங்கு காட்சிக்கு உள்ளன.

இவ்வாறாகப் படைப்புகள், படைப்புகள் சார்ந்த எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பேட்டி, இலக்கியம் குறித்தான காணொளிகள், சமூகம் சார்பான பல கட்டுரைகள் என ஒரு ஜனரஞ்சகமான மற்றும் இலக்கிய மேம்பாட்டைக் கருதுகோளாகக் கொண்ட இணையதளமாக “தமிழ்ஆதர்ஸ்.காம்” அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதைப் பார்வையிட www.tamilauthors.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)


பாரதிசந்திரன்
நன்றி ; இனிது இணைய இதழ்

பிடிஎஃப் ட்ரைவ்.காம்

பிடிஎஃப் ட்ரைவ்.காம்



பிடிஎஃப் ட்ரைவ்.காம் (pdfdrive.com) பாதுகாக்கப்பட்டப் பன்னூல் நூலகம்.

அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில், பல கோடி நூல்களோடு காத்துக் கொண்டிருக்கிறது.

சில நூறு நூல்களைக்கூட வைப்பதற்கு இல்லங்களில் தற்காலத்தில் இடவசதியும், அதைப் படிக்கும் கால நேரங்களும் இல்லாத நிலையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இச்சமயத்தில், இதுபோன்ற தளங்கள் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விதமான, அனைத்து மொழிகளிலும் காணப்படும் இவ்வகை நூல்கள் நமது அறிவையும் சிந்தனைகளையும் தேவை களையும் நிறைவு செய்யும் படியாக இருக்கின்றன.

இலக்கியம் எனும் பகுதியில், உள்நுழைந்தால், அங்கு இன்னும் நிறைய துணைத் தலைப்புகளோடு பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் சொடுக்கினால் அந்தந்தப் பகுதிக்கான நூல்கள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டு காணப்படுகின்றன.

தலைப்பைத் தெரிந்து கொண்டு மிக எளிதாக உள்நுழைந்து அந்த நூல்களை நாம் பெற்றுவிடலாம். இது ஒரு மிகச்சிறந்த எளிய வழியாகும்.

பல மில்லியன் நூல்களில் நாம் தேடுகிற நூலைத் தேடுபொறியில் பதிவிட்டும் பெறலாம். இந்த இணையதளத்திற்குள் செல்வதற்கு நாம் ”உள்நுழைக” பகுதியில் நமது தகவல்களை அளித்து நமக்கென்று ஒரு கணக்கை வைத்துக் கொள்ளலாம்.

மிகப் பயனுள்ள இணையதளம் இவை என இத்தளத்தைக் கூறலாம். ஒவ்வொரு பெரும் பகுதியிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் பிடிஎஃப் வடிவில் காணக் கிடைக்கின்றன‌.

அதை நாம் நமது கணினியில் அல்லது தொலைபேசியிலோ பதிவிறக்கம் செய்து எப்போது ஓய்வு கிடைக்கிறதோ அப்போது படித்துக் கொள்ளலாம். இது இக்காலத்தின் தேவையாக இருக்கிறது.

இத்தளத்திலுள்ள பெரும்தலைப்புகள் 

ஆசிரியர் தேர்வுகள்

மிகவும் பிரபலமானவை

கல்வி

கலை

வாழ்க்கை வரலாறு

வணிகம் மற்றும் தொழில்

குழந்தைகள் மற்றும் இளைஞர்

சுற்றுச்சூழல்

புனைகதை மற்றும் இலக்கியம்

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

வாழ்க்கை முறை

தனிப்பட்ட வளர்ச்சி

அரசியல் & சட்டங்கள்

மதம்

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி

தொழில்நுட்பம்

போன்ற தலைப்பின் கீழ், பல மில்லியன் புத்தகங்கள் இங்குள்ளன.

அவை, நமக்கு எதாவது ஒரு சமயத்தில் தேவைப்படும் நூலாகவும் இருக்கலாம்.
இது போன்ற அறிவுக்களஞ்சியங்கள் பணச்செலவின்றி உதவுமானால் நமது அறிவினை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம்.

இந்தத் தளம் குறித்து, விளக்கத்தினை அவர்கள் மொழியில் நாம் பெறும் போது, ”PDF டிரைவ் என்பது ஒரு இலவச தேடுபொறி, இது உங்கள் சாதனங்களில் மில்லியன் கணக்கான PDF கோப்புகளைத் தேட, முன்னோட்டமிட மற்றும் பதிவிறக்க அனுமதிக்கிறது.

எங்கள் தரவுத்தளத்தில் PDF கோப்புகளைச் சேர்க்க எங்கள் வலைவலங்கள் தொடர்ந்து உலகளாவிய வலையை ஸ்கேன் செய்கின்றன.

PDF கோப்புகள் வலையிலிருந்து திரும்பப் பெறப்பட்டால், அவை உடனடியாக PDF இயக்கக தேடல் முடிவுகளிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.

இந்த வழியில், எங்கள் PDF டிரைவ் நூலகம் புதுப்பித்த நிலையில் உள்ளது, அதே நேரத்தில் தொடர்ந்து வளர்ந்து, தேட ஒரு மகத்தான தரவுத்தளத்தை உங்களுக்கு வழங்குகிறது.

பாரம்பரிய தேடுபொறிகளுக்கு கூடுதலாக, PDF இயக்ககத்தில் இந்தக் கூடுதல் அம்சங்கள் உள்ளன:

முன்னோட்டங்கள் எல்லா கோப்புகளிலும் கவர் புகைப்படங்கள் உள்ளன, இது நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

மேம்பட்ட வடிகட்டுதல் PDF கோப்புகளை அவற்றின் பக்க எண், வெளியீட்டு தேதி, கோப்பு அளவு மற்றும் / அல்லது புகழ் மூலம் வடிகட்டி வரிசைப்படுத்தலாம்.

வேகமாக PDF கோப்புகளைத் தேட மில்லி விநாடிகள் மட்டுமே ஆகும்.

புதுப்பித்த நிலையில் உள்ளது PDF இயக்ககத்தின் காப்பகம் தொடர்ந்து மற்றும் திறமையாக புதுப்பிக்கப்படும் போது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

ஒத்திசைக்கப்பட்டது எந்தவொரு கோப்பின் அதே PDF பதிப்பையும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்பு கொண்ட மொபைல் சாதனங்களிலிருந்து அணுகலாம்.

உங்கள் ஆர்வங்கள் மற்றும் சமீபத்திய தேடல்களின் அடிப்படையில் PDF டிரைவ் பரிந்துரைகளை வழங்குகிறது.” என்பதாக அறியலாம்.

கணினி மயமான காலத்தின் கொடையாக, pdfdrive.com நமது தேவைகளை மிக எளிதாகப் பூர்த்தி செய்கிறது.

(இணையம் அறிவோமா?  தொடரும்)



பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ் 

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

 

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.

மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.

தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.

அத்தகு இணையதளங்களில் நாள்தோறும் நாள்தோறும் கணக்கிலடங்கா படைப்புகள் எழுதப்பட்டும், பகிரப்பட்டும் பேசப்படுகின்றன. அவற்றைத் தேடித் தேடிப் படிப்பது என்பது இயலாத காரியம். வானத்து நட்சத்திரங்களைத் தேடிப்பிடித்து ரசிப்பது போன்றது அதுவாகும்.

தனக்குத் தெரிந்த இணையதளப் படைப்புகளோடு வாசகன் நின்றுவிட்டால், கிணற்றுத் தவளை ஆகிவிடுகிறான் அவன். வான் நோக்கிப் பறந்து பால்வீதி முழுவதும் காணலாகும் அற்புதங்களை ரசிக்க வேண்டும்; உணர வேண்டும்; அறிய வேண்டும். அப்பொழுது தான் வாழ்வு ஓரளவாவது முழுமை பெறும்.

அவ்வகையில், இணையதளங்களைப் பார்க்கும் போதும் இதே நிலைதான். பால்வீதி போன்றவை இணையதளங்கள். அவற்றைத் தேடிப் பிடித்து அனைத்தையும் படிப்பது கடல் மணலை எண்ணுவதற்குச் சமமாகும்.

இதுபோன்ற நிலையில், பல இணையதளங்களில் பகிரப்படும் முக்கியமானவைகளை, ஒரே இடத்தில் திரட்டித் தந்தால் வாசகனுக்கு எப்படி இருக்கும் எனும் நோக்கில், இணையதள வாசிப்பில் இன்னொரு மைல்கல்லாக வந்தது தான் ”திரட்டி” எனும் மென்பொருளாகும்.

இவ்வகை மென்பொருளில் தமிழ் இன்னொரு படிநிலையை அடைந்தது. இவ்வகை திரட்டிகளின் பணி அளப்பரியது மற்றும் சிறப்பானது ஆகும்.

தனக்குத் தேவையான செய்தியை மட்டும் கண்டு, பிறவற்றை படிக்காமல் விட்டால் மட்டுமே ஒரு எல்லையை வாசகன் இக்காலகட்டத்தில் தொட முடியும். காரணம் படைப்புப் பெருக்கம் இன்று காணப்படுகிறது. அவை அனைத்தையும் ஒரு வாசகனால் கண்டு தெளிந்து உணர்ந்து விட முடியாது.

தேவையற்றவைகளைக் காண்பது நேர விரயமும் தன் வளர்ச்சிக்குப் பாதிப்பும் ஆகும். எனவே அதற்கு உதவும் வகையில் இவ்வகைத் திரட்டிகள் பெரும் பங்கினைச் செய்கின்றன.

இணையத்தில் இது போன்ற திரட்டிகள் பல காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற திரட்டி தான் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டி ஆகும்.

ஆரூர் பாஸ்கர் மற்றும் நீச்சல்காரன் ஆகியோரின் பெருமுயற்சியால் இத்திரட்டி செயல்படுகின்றது. இருவரும் தமிழில் மென்பொருள்கள் பலவற்றைக் கண்டுபிடித்துத் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள்; செய்து கொண்டிருப்பவர்கள்.

இத்திரட்டியில் பொது, திரைப்படம், அரசியல், ஆன்மீகம், வீட்டுக்குறிப்பு, வணிகம், புத்தகம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், காணொளி எனும் தலைப்புகளில் தினந்தோறும் பல்வேறு வலைத்தளங்களில் வெளியிடும் படைப்புகளின் சரம் இனம் காட்டப்பெறுகின்றன.

”ஆன்மீகம்’ எனும் பகுதியைச் சொடுக்கினால் ஆன்மீகம் சார்பாக வெளிவந்த பல்வேறு படைப்புகள் காண்பிக்கப்பெறும். அவற்றைச் சொடுக்கினால், அதன் இணையதளம் மற்றொரு பக்கத்தில் திறக்கும். அக்கட்டுரையை அங்கு படிக்கலாம்.

இவ்வாறு தேவையானதை மட்டும் தேர்வு செய்து நாம் படிப்பதற்கு இது மிகப் பெரும் பயனாக இருக்கும். அனைத்து வலைத்தளங்களையும் திறந்து திறந்து தேடிப்பிடித்து பார்க்கும் நேர விரயத்தை இவ்வகைத் திரட்டிகள் தடுக்கின்றன.


வாசகன் சில நேரம், சில இணையதளங்களைப் பார்வையிடாமல் விட்டு விடலாம். அங்கு வெளியிடப்பட்ட படைப்பைத் தவறவிட வாய்ப்பு நிறைய இருக்கின்றது.

ஆனால், இது போன்ற திரட்டிகளில் வாசிக்கப் பழகினால், அனைத்து வலைத்தளங்களையும் சென்று பார்த்து வந்த திருப்தி அனைவருக்கும் ஏற்பட்டுவிடும்.

தேவையற்ற செய்தியாக, படைப்பாக இருந்தால் அதைப் பார்க்காமலும் அந்த இணையதளத்திற்குச் செல்லாமலும் விட்டுவிடலாம். திரட்டியின் முன்பகுதியில், ”தேடுதல்” பகுதியும் உள்ளது.

தேவையான சொல் அல்லது விபரத்தைப் பதிவு செய்து தேடினால், அவ்விவரம் இருக்கும் இணையதளப் பக்கங்களைக் கொண்டு வந்து குவித்து விடும்.
இவ்வாறான உடனுக்குடனான படைப்பு வரலாற்றினை இன்னும் எளிமையாகத் தேட, இன்று, இந்த வாரம், கடந்த வாரம், முன்னணி எனும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் சொடுக்கினால் அந்த அந்தக் காலத்தில் வெளிவந்த படைப்புகளைத் திரட்டிப் பெறலாம்.

பல்வேறு வலைத்தளங்களை உள்ளீடு செய்ய ”இணைக்க” எனும் பகுதியும் உள்ளது. இதன் மூலம் வலைத்தள நிர்வாகிகள் இப்பகுதியில் அவர்களின் வலைத்தளங்களை உள்ளீடு செய்து கொள்ளலாம்.

தமிழ் மாலைகளில் இந்தப் பல்மலர் திரட்டியான ”தமிழ்ச்சரம்” மணம் வீசும் சரமாகும்.

வலைத்தள மேன்மையின் மற்றுமொரு சாதனையாகத் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டியை க்கூறலாம். அத்திரட்டியைக்காண https://tamilcharam.com/faq/faq.html சொடுக்கவும்

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்


நன்றி : https://www.inidhu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/

கடவுளின் கண்ணில் ரத்தம் தெரிகிறது







”கண்ணில் தெரியும் கடவுள்” நூலைச் சமீபவத்தில் நண்பர் மு.தனஞ்செழியன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஹைக்கூக்களின் கவிதைத் தொகுப்பு அது. கொஞ்ச நேரத்தில் படித்து விடலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். நூலை வைக்க முடியவில்லை.ஆழமும், அகலமுமான பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது நூல். சமகாலப் பிரச்சனைகள் மனதை வாட்டியது. மீள முடியாத வேதனையில் என் மனப் போராட்டங்கள் நீண்டு கொண்டிருந்தன. இது போதாதா, என் எழுது கோல்களுக்கு. கண்ணில் தெரிந்த கடவுளைத் தடவித் தடவி வார்த்தைகள் ஆக்கினேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறம் கிளையின் வெளியீடாக வந்திருக்கும் ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு இது.
கொரோனாக் கால நெருக்கடியில் பிறந்த கவிதைகள் இவை. மனதை நெருடுகிற காட்சிகளின் படிமங்கள் இவை. ரத்தம் உறைய வைக்கிற வார்த்தைகளின் வெளிப்பாடுகள் இவை.சீக்கு வந்த கோழிக் குஞ்சுகளின் கண்மூடிய தூக்கம் அல்ல இவை.

 தன் குஞ்சை தூக்க வருகிற கருடனை சிறகு விரித்து குரல் தெறிக்க கத்தி ஓட ஓட விரட்டுகிற தாய்க் கோழியின் பரவசம் இவை.இந்நூலிலுள்ள, கவிதையைப் படித்தால் சுளீர் என்று ஓரிடத்தில் சுடுகிறது.. எங்கிருந்தோ வந்து கண்ணில் விழுந்த தூசி போல் நெருடுகிறது..எவ்விதப் பாதிப்பையும் படிப்பவர் மனதில் ஒரு கவிதை ஏற்படுத்தவில்லை என்றால், அக்கவிதை தோற்றுப் போய் விடுகிறது. உள்ளே புகுந்து வெவ்வேறு தூண்டுதல்களை ஏற்படுத்தி அகலாது நிலைத்து நிற்குமானால் அக்கவிதை ஜெயித்து விடுகிறது. அதுவே உன்னதமான கவிதை ஆகிறது. காலம் கடந்தும் நிலைக்கிறது. அவ்வகையில், இந்நூல் கவிதைகளில் பல, பல்வேறு உரசல்களை மனதிற்குள் உண்டாக்கி உயர்ந்து நிற்கின்றன. ”உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூ'விற்கு யாரையும் மயக்கக் கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய 3 அடி வடிவம், அழகான படிமங்களால், அழகான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்.அதன் தத்துவப் பார்வை, சுண்டக் காய்ச்சிய அதன் இறுகிய மொழி நடை எல்லாவற்றையும் விட அதன் எளிமை, இவையெல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்” என்று ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் நிகழ்த்தும் தன்மையைத் திருமதி லீலாவதி அழகாகக் கூறுவார்.எழுபத்தைந்து (75) கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி இந்நூல் இக்காலகட்டத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. நடப்பியலின் எதார்த்தத்தைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டாமல் அப்படியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.சமுதாயத்தின் மேல் பயம் இல்லை. வீரமோடு தம்தம் கருத்தினை விளக்கி விளாசித் தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு தீப்பந்தம் இருக்கிறது. உலகைக் கூட, அது சுட்டெரித்து விடும் தன்மையது. இன்று நடந்து கொண்டிருக்கும் அரசியலின் இழிநிலையைப் பா.செந்தில் தமது கவிதையில் கூறும்பொழுது,காசு வாங்காமல்வாக்களித்தேன்…விரலில் கறை.என்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு அளிக்கும் முறை, அரசியல்வாதிகளின் நாடகங்கள், ஓட்டு வாங்கியமைக்குப் பிறகு மக்கள் ஏமாற்றப்படல் என இருக்கும் இந்நிலை உண்மையான ஜனநாயகவாதிக்கு ஏமாற்றமே அளிக்கிறது. எனவே, என் கைகளில் மை வைத்தது கறையாக இருக்கிறது என்று கவிஞர் வருத்தப்படுகிறார்.காவல்துறையில் நடக்கும் சில அக்கிரமங்கள், சாதாரண மனிதனை நிலைகுலைய வைக்கிறது. தூத்துக்குடியில் தற்போது நடந்த தந்தை, மகன் கொலை வழக்கு, காவல்துறை மீதான கேள்விக் கணைகளைத் தொடுக்கப் பலருக்குக் காரணமாய் அமைந்தது. அதைக் கவிதையாகத் தருவதற்கு முயற்சி செய்து கூறும்பொழுது,ஆணவ வெறியர்கள்.ரத்த லத்தியில் எழுதவில்லை…காவல்துறை உங்கள் நண்பன்.
எனக் கவிதா பிருந்தா கூறுகிறார்.
தமிழகத்தை உலுக்கிய மாபாதகச் செயல் அல்லவா அது? கவிஞர் எதற்கும் பயமில்லாது தமது கருத்தை தமது கவிதையில் பதிவு செய்துள்ளார். இது, தமிழக வரலாற்றில், கவிதை வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகி இருக்கிறது. ஒரு நிகழ்வும், அது பார்வையாளன் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுவும், ஒரு சேர நிகழ்வையும் ஏற்படுத்திய சலனத்தையும் படமாக்கி தந்திருக்கிறது. இதேபோல் இன்னொரு கவிதையில், காவல்துறையின் மாண்பைக் கவிஞர் மு தனஞ்செழியன் கூறும்பொழுது,காவலரைக் கடித்தகொசுவும்...அடிபட்டே செத்ததுஎன்கின்றார் காவலரைக் கடித்த சிறு உயிரினம் கொசு. அதுகூட கடித்துவிட்டு சும்மா போய் விட முடியாது. கொசு தானே என்று கூட காவலர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்ற எண்ணத்தைக் கவிஞர் தம் கவிதையில் பதிவு செய்துள்ளார்.மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணம் ஒன்றையே கருதுகோளாகக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளிடம் பரிவோடு நடந்து கொள்வதில்லை. மருத்துவரும், மருத்துவ வசதிகளும், பணம் இருப்பவர்களுக்கே எனும் எண்ணம் பொதுவாக இன்று பொதுவெளியில் அனைவராலும் பேசப்படுகின்றன. அதனை, இனிப்பு மருந்து தான்.கசக்க வைக்கிறது…மருந்தின் விலை.      (ந ஜெகதீசன்)மருந்துக் கம்பெனிகளால்சாகா வரம் பெற்றன…நோய்கள்.                    (பூ முருகவேள்)
நடந்து சென்றவர்நடைப்பிணமாய் திரும்பினார்தீவிர சிகிச்சை.             ( பா கெஜலட்சுமி)இன்னும் இதுபோன்ற கவிதைகள் சமதளமற்ற நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. உயிரை நேசிக்க வேண்டிய மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக மாறிக் கொண்டிருக்கிறது என்ற வேதனை கவிஞர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதுவே படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.சாதீயத் தீண்டாமை குறித்த ஹைக்கூக் கவிதைகள் அதிகம் காணப் படுகின்றன. அறிவியலில்..சமூகம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், ஜாதியின் கொடூர நாக்குகள் இன்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டு தானிருக்கின்றன.நவீன கவிதைப்புரட்சியில் புதுக்கவிதைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்கவிதைப் புரட்சியில், அதன் பாடுபொருளான சமூகக் குறைகளும் ஒரு முக்கியக் கருதுகோளை அமைந்திருக்கின்றன என்பதை அறிகிறோம். கவிஞர் மு.தனஞ்செழியனின் ஒரு கவிதை சாதீயத்தீண்டாமையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறன அவ்வாறான ஒரு கவிதை,
 இறந்த சடலங்களிலும்ஜாதி பார்க்கின்றனமனித பிணங்கள்.என்பதாகும். மனிதன் பிணமாக அர்த்தமற்ற வெற்று வாழ்க்கை வாழ்கின்றான் என விரக்தியாய் சாடுகின்றார்.இத்தொகுப்பில், கொரோனாத் தொற்றுநோய் ஊரடங்கின் போது, பாதிக்கப் பட்ட வாழ்வாதாரங்கள் குறித்த அவலங்களை, பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த சிறு, சிறு தொழில்கள் செய்தவர்களின் மன வேதனையை அதிகமாகக் கவிதையாக்கித் தந்துள்ளனர்.பசி, வறுமை, இயலாமை, இழப்பு, சமூக அவலங்கள், அரசியல் பித்தலாட்டம், மருத்துவமனை அநீதிகள், அழகியல் எனக் காட்சிகள் விரிய கருத்தாக்க வெளிப்பாடுகள் கவிஞர்களின் கைகளில் வெளிப்பட்டுள்ளன.கவிதைத் தொகுப்பில், மிகத் தரமான கவிதைகளை மட்டுமே தேர்வு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். மு.தனஞ்செழியன் எனும் கவிஞர் 15 கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த பொருளாளுமை மிக்க கவிதைகளாக அவைகள் விளங்குகின்றன. குறிப்பாக,கட்டில் கால்கள்இழுத்துப் போயின வங்கிக்கு…முதியோர் உதவித் தொகைக்காக.
என்னும் கவிதையைக் கூறலாம்.இன்னும் வாகன வசதியும், மருத்துவ வசதியும், குடிநீர் வசதியும், கல்வி வசதியும் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் எத்தனை? எத்தனை?பசியால் உயிரிழந்த தாய், அதுகூடத் தெரியாமல் பிஞ்சுக் குழந்தை தாயிடம் விளையாடிக் கொண்டு இருந்த காட்சிகளைத் தினசரியில் பார்த்த பொழுது, இரத்தக்கண்ணீர் வடித்தார்கள் மக்கள். இந்தச் சோகமான காட்சியை, அசையாத அம்மாவின் இமைகளைவிளையாட்டாய் மூடின.பிஞ்சு விரல்கள்.என்கிறார் கவிஞர் மு தனஞ்செழியன். அரசியல் இன்று எவ்வளவு மலிந்து செய்யப்படுகிறது கட்சிகளால் என்பதைக் கண்டு வெறுக்கும் கவிதைகள் காணப்படுகின்றன. அதேபோல, கவிஞர் மு தனஞ்செழியன் கூறும் பொழுது,பொதுக்கூட்டம் முடிவதற்கு உள்ளேயேமுடிந்து போய்விட்டதுபிரியாணிஎன்கின்றார். பிரியாணியைக் காட்டிக் கூட்டம் கூட்டும் அரசியல்வாதிகளின் தன்மை, பிரியாணிக்காக அலையும் மக்கள். யாரைத் திருத்துவது? கவிஞரின் கோபம் கவிதையில் வெளிப்படுகிறது.போர்க்களக் காட்சியைப் பாடுவதைச் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் ”புறத்திணைப் பாடல்கள்” எனும் வகையில் அதிகம் காண்கின்றோம். சிற்றிலக்கியங்களில் பரணி பாடுதல் எனும் வகையில் நிறைய இலக்கியங்கள் பாடியுள்ளமையை அறிகிறோம்தற்காலத்தில் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் நடக்கும் பல்வேறு விதமான சமூகப் போர்களைப் பதிவு செய்வது போல இந்நூல் காணப்படுகிறது.அழகியல் கவிதைகள் குறைவாகவும், சமூகப் பிரச்சனைகள் பெரும் பான்மையாகவும் கவிஞர்களின் படைப்பில் வெளிப்பட்டுள்ளன.குறிப்பாய், கவிதைகள் காலத்தின் தெறிப்புகள். கண்ணில் தெரியும் கடவுள் பசித்த பொழுது உணவு தந்தவன் என்றாலும், இங்கு சமூகத்தில் நடப்பவை கண்டு, கடவுள் நிசமாகவே இரத்தக் கண்ணீர் வடிப்பார்.- பாரதிசந்திரன்
நன்றி : கீற்று இணைய இதழ்