நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

சனி, 31 ஜூலை, 2021

அத்வைதம் ஓர் அறிமுகம்,

 https://archive.org/details/Acc.No.6455AdvaithamOruARimukam2004

பண்டிதர் அயோத்திதாசரின் 'அம்பிகையம்மன் வரலாறு’ நூலை முன்வைத்து

 வரலாறைத் தேடிச் செல்லும் போது, பல திடுக்கிடும் செய்திகள், நம்மை நம் எண்ணத்தைத் தூரத்து தேசத்தில் தொலைய வைத்து விடுகின்றன. தெரியாதவைகள் தெரிய வரும்போது எண்ணியிருந்த இருப்புகள் சுக்கு நூறாக வானிலிருந்து விடிந்த புத்துருவமாக மிளிர்வதை வரலாறுகள் மெய்பிக்கின்றன. வான்வெளியில் தெரியவரும் மரம் மண்ணுலகிற்குள் வேறு வடிவம் தாங்கி நிற்கின்றன. சரித்திரம் அறியப்படாத புதையுண்டு கிடக்கும் மர்மங்களைத் தன்னகத்தே கொண்டது. அதையறிய வரலாற்றுக் கண் தேவைப்படுகிறது.



மதங்களின் வரலாறு பல திருப்பு முனைகளைக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் காலங்காலமாய் ஒன்றிலிருந்து ஒன்றை அந்த ஒன்றிலிருந்து வேறோன்றைச், சாயங்களையும் அடித்தளத்தையும் மாற்றி மாற்றி உலவ விட்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது. மாயைத் தன்மை கொண்ட உலகப் பொருட்கள் தன்னளவில் மாறும் தன்மை கொண்டதே. அதே போல் மதம் குறித்தான நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளும் பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளதை மத வரலாறுகள் பூரணமாய் விளக்குகின்றன.


இதனை ஒத்து பெளத்தசமய வழிபாட்டுக் கூறு குறித்துப் பண்டிதர் அயோத்திதாசர் தென்னிந்திரர் தேச புத்ததர்ம சாட்சியக்காரர்களில் ஒருவளாகிய அம்பிகையம்மன் வரலாறு பல மாற்றங்களைப் பெற்று வேறு வடிவம் தாங்கி நிற்பதை இந்நூலில் தாங்கொணா துயருடன் விளக்குகிறார்.

பார்த்தன் என்பவர் எழுதிய "அம்பிகா தன்மம்" எனும் மூல நூலைக் கொண்டு, சிலம்பு, மணிமேகலை, குண்டலகேசி, பெருந்திரட்டு, சீவக சிந்தாமணி, வீரசோழியம், பிங்கல நிகண்டு, சூளாமணி, சித்தர் ஞானவெட்டியான் பாட்டு ஆகிய நூல்களிலிருந்து குறிப்புகளைச் சான்று காட்டி இவ்வரலாற்றுத் தர்க்க நூலைப் படைத்துள்ளார் பண்டிதர்.

பண்டிதர் காலச் சொல்லாட்சி கூற விழைந்த கருத்தின் மெய்யுணர்த்தப் பெரிதும் பயன்படுகிறது. அம்பிகையம்மனின் கதை விளித்துக் கூறும் போது சிறந்த ஆய்வாளாராகச் சொல்கிறார். சிறந்த ஆய்வாளராகப் பலயிடங்களில் கொண்டுகூட்டிச் சாட்சிக்கு இலக்கியம் பகர்ந்து தம் கருத்தினைப் பலப்படுத்துகிறார். நூல் இறுதியில் மதப் பிறழ்ச்சிகளைக் கூறும் பொழுது நாளடைவில் அடைந்த மாற்றங்களுக்கான காரணம் இதுவாக இருக்கிறது என்பதை நிரூபிக்கத் தர்க்கவாத அடிப்படையில் பலமாகத் தர்க்கம் செய்து மூதலிக்கிறார்.
உதாரணமாகக் காளிதேவி வரலாறு, கன்னிகாபரமேஸ்வரி வரலாறு போன்றவை. தம் ஆழ்ந்த சித்த வைத்திய அறிவினையும் இக்கதையினூடே பதிவு செய்கின்றார். பிறமதக் காழ்புணர்ச்சியின்றி கூறும் கருத்தை ஆழமாக அதே நேரம் மென்மையாக உரைக்கின்றார். உதாரணமாக, “இன்னம் சிலர் அம்மனை நாட்கள் மெய்யாகத் தொன்றுதொட்டு புஜித்து வருகிறோம் என்பார்கள். ஆனால், அம்மன் புத்த சுவாமியை சிரசிலேந்தியதின் காரணமறிவார்களா? அப்படியறிந்திருந்தால், இவர்கள் அம்மனைப் பூங்கரகமாக ஜோடித்துத் தங்கள் சிரசிலேந்தி தெருவில் திரிவார்களா? இல்லை” என்கிறார்.

புத்தசமய அம்மனின் வெவ்வேறு திருப்பெயர்களைச் சைவ, வைணவ சமயங்கள் தங்கள் சமய அம்மனின் பெயர்களாக எவையவற்றை எடுத்துக் கொண்டன என ஒரு வரிசைப் பெயர்களையும், புத்தசமய அம்மனின் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அப்பெயர்க் காரணம் ஏன் வந்தது என்பதற்கான விளக்கத்தையும் திறம்பட விவரித்துள்ளார். புத்தமதக் கோட்பாடுகளிக்கு மாறான ஒன்று பலியிடல்.

இது மததின் தன்மைகளை உருக்குலைய மாற்றார் ஏற்படுத்திக் கொடுத்த மாயவலையாகும். இவ்வகையில் இனியும் விழாதீர் என உரக்க முழக்கமிடுகிறார். கடைசியாக, "அம்மன் துறவறத்தில் நின்று போதித்த உண்மையையும்,அம்மன் கைக்கொண்டிருந்த புத்ததருமத்தையும் நாம் கைப்பற்றுவதே அம்மனைத் துதிப்பதாகும்." என்கின்றார்.

இனி, நூல் கருத்திற்கு வருவோம். அம்பிகையம்மன் புத்த சமயம் தமிழகத்தில் வேரூரின்றி அனைவரும் பின்பற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் தோன்றிய பெண் தெய்வம், வாழும் காலத்திலேயே தெய்வமாக வாழ்ந்தவள். யாவராலும் போற்றிப் பாரட்டப்பெற்று வணங்கப்பட்டவள். அவள் இறந்த பொழுது அழுது புலம்பி ”என்றும் எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும்”, ”எங்கள் குலதெய்வமாக என்றும் இருக்க வேண்டும்” என வாழ்ந்த போதும் இறந்த பொழுதும் வேண்டப் பட்டவள்.


கண்ணகி, காளி ஆகிய இருவரும் தெய்வமாக்கப்பட்டதன் பின்னணி வேறு. இவர்கள் இறந்த பின்னர் இவர்கள் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளின், வீர நிகழ்வுகளின் அடிப்படையில் தெய்வமாக்கப்பட்டவர்கள். வாழும்போதே தெய்வமாதலும் மக்களால் இறந்த பின் தெய்வமாக்கப்படலும் வேறு வேறாகவே அமையும்.

இதை மக்களாகிய நாம் இந்த வேறுபாட்டை உணர வேண்டும். ஆனால்? நடப்பது. முன்னவளை பின்னவர்களோடு ஒப்புமை கொண்டு வழிபாட்டில் முறையற்றவைகளைச் செய்து பெரும் குழப்பத்தோடு வழிபாடு நிகழ்த்திகின்றனர். இதனைப் பண்டிதர் உணர்த்த விழைகிறார். உண்மை தெரியாதவர். இதை மாறாகப் புரிந்து கொண்டவர் திரும்பட்டும். வாருங்கள் மீண்டும் புத்த மதம் நோக்கி எனக் கூவியழைக்கிறார்.

புத்த மடாலயங்களை எவ்விதம் பிற்காலத்தவர் உருமாற்றினார்கள். புத்த வழிபாட்டு முறைகள் எவ்விதம் உருமாறின. கோயில்களிலுள்ள விக்கிரங்கள் எவ்வாறு மாறின என்ற தகவல்களும் மிகத் தெளிவாக நூல்கள் மூலம் சான்றளிக்கப் பெற்றுள்ளன.


இன்று, உலக நாடுகளிலுள்ள மாரியம்மன் கோயில்களில் நடத்தப்படும் விழாக்கள், வழிபாடுகள் புத்த மத அம்பிகையம்மன் வழிபாட்டின் எச்சமாகவே உள்ளன என்பதைத் தெள்ளத் தெளிவாக இந்தநூல் வழி அறிய முடிகின்றது.

ஆடிமாதம் கூழ்வார்த்தல், சாம்பிராணிப் புகை, வேப்பிலைத் தோரணம், கூட்டு உணவு போன்ற பலவற்றின் ஆதி தோற்றம் புத்தமத அம்பிகையம்மன் வழிபாட்டின் மூலமே ஏற்பட்டது.

ஐம்பது மொழிகளில் ஆயிரம் மில்லியன் பிரதிகள் விற்ற ஜேக்கப் கிரிம் நூல் போல் அம்பிகையம்மன் வரலாறு நூலும் உலகளவில் வெளிவந்திருக்க வேண்டும். சமயப் பூசல்களாலும், சமயப் பொறையாலும் இந்த நூல் மறைக்கப் பெற்றுள்ளன. அம்மன் வழிபாடு திரிக்கப்பட்டுள்ளன. இந்த வழியே பிரதானமாகக் கொள்ளப்படுகின்றன எல்லோராலும். இந்தக் கீழ்மை நிலைகண்டே பண்டிதர் "கேட்டுக்குப் போகும் வாசலைத் திறந்து கொண்டவர்கள்" என மனம் பதைபதைக்கிறார்.

மனிதர்கள் உன்னதமான மதக்கருத்துக்களை மற்றும் இறைவனை ஏற்க வேண்டும். என்பதை இந்த நூல்வழி பண்டிதர் அயோத்திதாசர் உணர்த்துகிறார். அவ்வகையில் புத்தமார்க்கம் தூய்மையும் உண்மையும் நேர்த்தியும் கொண்ட மார்க்கமாக உள்ளது. இந்த மார்க்கத்தையும், இறைவியான அம்மன் போதனைகளையும் பின்பற்ற வேண்டும்.

(பண்டிதர் அயோத்திதாசரின் 'அம்பிகையம்மன் வரலாறு' நூல் புத்தமத வரலாற்றைச் சாட்சிகளுடன் விவரிக்கும் ஒரு நூலாகும். தமிழகம் புத்தமதத்தைப் பின்பற்றிய பொழுதுகளில் வழக்கத்திலிருந்த சடங்கு சம்பிராதாயங்கள் மற்றும் அறிவியல் சார்ந்து நடைமுறையிலிருந்த வழிபாட்டுச் சிந்தனைகள் இன்று அவை மாறி எவ்விதம் வந்துள்ளன என்பதைக் கூறும் வரலாற்றுப் பதிவு இந்நூலாகும்.)

பாரதிசந்திரன்

அத்வைதம் ஓர் அறிமுகம்

 அத்வைதம் ஓர் அறிமுகம்


https://books.readingbharat.com/ta/28aa1bbcac8f11ea8bf298460a97aede/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-by-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

பாடமும் பாயாசமும்

 

பாடமும் பாயாசமும்

முதல் பாடவேளை, வகுப்பில் பாதி மாணவர்கள் இன்னும் வரவில்லை.

முதல் வகுப்பு என்றால் பாடம் நடத்துவதற்கு லாயிக்கற்றது. முழுமையாக எல்லா மாணவர்களும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொருவராக வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொருக்குமான கதை சொல்வார். கேட்டால் நமக்குக் கோபம் தான் வரும். எனவே யாரையும் ஏன் தாமதம் என்று கேட்பதே இல்லை.

சிறிது நேரத்தில் பாடம் நடத்த ஆரம்பித்தேன்.

ஒரே நேர்கோட்டில் மாணவர்களைக் கொண்டு வருவதற்கு, ஏதேனும் வெளி விஷயம் பேசி, வகுப்பின் கவனத்தை இழுத்துப்பிடிக்க வேண்டும். அனைவரின் கடிவாளத்தையும் கையில் பிடித்துக் கொண்டே தான் பாடத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தச் சிக்கலுக்குத் தான், எனக்கு முதல் வகுப்பு வராமல் பார்த்துக்கொள்வேன். எதற்கு வம்பு மாணவர்களோடு, அவர்கள் பாணியிலேயே போய்விடுவது நமக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது. ஆனால், இன்று முதல் வகுப்பாக விடுமுறை போட்ட சக ஆசிரியருக்காக வர வேண்டியதாயிற்று.

வகுப்பு கொஞ்சம் கொஞ்சமாக என் வசம் வரத்தொடங்கியிருந்தது. மாணவர்களைப் பேச்சால் கட்டிப் போட்டு ஆள்வதில், அந்த இடத்தில் பெரும் இறுமாப்பு தான் எனக்கு.

மாணவர்களுக்கு நான் பாடம் நடத்தும் பொழுது, அவர்களின் கவனத்தை என் மேல் கொண்டுவருவதற்காகப் பல உத்திகளைக் கையாண்டுப் பாடம் நடத்துவேன். ஒரு பிரம்மாண்டத்தை அப்படியே விளக்கி அதனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, ஆச்சரியமாகப் பார்க்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் எனக்கு. வேறு ஒரு உலகை, அதன் விசித்திரமான வடிவமைப்பை அங்குலம் அங்குலமாகத் தொட்டுத் தடவி அங்கேயே அனுபவிக்க வைத்து விடும் இலாபகத்தை என்னால் வகுப்பில் செய்து காட்டி விட முடியும்.

அப்படித்தான் அன்றும் ஆரம்பித்தேன். ”கடவுள் எவ்வளவு பெரிய பலசாலி? அவரிடம் எவ்வாறு அவ்வளவு சக்திகள் வந்தன? பல கோடிப்பேர்களுக்கு ஒரே நேரத்தில் எப்படி அருள்பாலிக்கிறார்? என்று என் கேள்விகள் வரிசையாக மாணவர்களிடம் போய்க்கொண்டே இருந்தன.

யாரும் பதில் பேசவில்லை. ஒரு கேள்விக்கான பதிலை இதுவரை நாம் தேடிக்கொண்டிருப்பதாக இருந்தால் கேள்விக்குப் பதில் சொல்வதில் இருந்து சற்று விலகியே இருப்போம். அதைத்தான் வகுப்பில் உள்ள மாணவர்களும் செய்தனர்.

கேள்வி கேட்டால், நிசப்தம் ஆகிவிடுவது அல்லது தலையைக் குனிந்து கொள்வது அல்லது வேறு பக்கம் பார்ப்பது என்பதாக அவர் அவரின் செயல்கள் இருந்தன.

நான் தொடர்ந்து, கடவுள் குறித்தான விரிந்த தளத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன். அவர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றலை விட அதிகமாகவும் பேசி விடாமல், அவர்களுக்கு ஏற்ற வகையில் யோசித்துப் பல விஷயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும் எனப் பேசினேன். இது போல் என்னுடைய எல்லா வகுப்புகளிலும் பேசுவது வழக்கம் என்பதால் அன்றும் சரமாரியான வார்த்தைகள் வகுப்பில் வந்து விழுந்தன.

வகுப்பு நிசப்தமானது. என் வார்த்தைகள் மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாட ஆரம்பித்தன. யார் யாரோ பக்கத்தில் நின்று அவர்கள் படித்த நூலில் இருக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். அவை என் மூளை வழியாக மாணவர்களிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன. அவை வேக வேகமாக வரிசைக்கிரகமாகப் போர்ப் படை வீரர்கள் போல் முன்னின்று காரியம் செய்து கொண்டிருந்தன.

நூலகங்களில் என்றோ கஷ்டப்பட்டுப் படித்த பல நூல்கள் தன் அட்டைப் படத்தைக் காட்டிவிட்டுச் சென்றன. இடையிடையே சமகால யோசனைகள், சமகாலப் பிரச்சனைகள் இவையும் அவர்களைக் கொஞ்சம் யோசிக்க வைக்க வெளிவந்தன.

பெருங்குரலெடுத்து வகுப்பிற்குள் அனைவரையும் திக்குமுக்காட வைப்பதில் என் திறமைக்கு எப்பொழுதும் ஒரு தேர்வை வைத்துக் கொண்டே இருப்பேன்.

”யோசித்துப் பாருங்கள் மாணவர்களே, திருவண்ணாமலையில் சாதாரண நபராக 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு சாமியார், ஆயிரம் சீடர்களுடன் பல கோடிகளுக்கு முதலாளி ஆகி, ஒரு தனி தேசத்தையே உருவாக்குவதற்கு முயல்கிறார் என்றால் யார் கொடுத்தது இவ்வளவு செல்வத்தை இவர்களுக்கு? இவ்வளவு சீக்கிரம் ஒருவர் இப்படிச் செல்வந்தராக முடியுமா? இவரைப்போல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை சாமியார்கள்? கடவுள் பெயரால் நாம் ஏமாறுகிறோம் நம்மை ஏமாற்றி, அவர்கள் மிகப் பெரும் அளவிற்கு கொழுத்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்

”மாணவர்களை யோசியுங்கள். கடவுள் மென்மைக்கும் மென்மையானவர். சுடர்விட்டு எரியும் தீக்கு பெரும் தீயாய் ஆனவர். அவனே உலகத்தின் மையப் பொருள். அவனே அறிவியல். அவனே உலகை இயக்குகிறான். உலக மக்கள் யாவருக்கும் பொதுவாய் இருக்கிறான். இதைப் புரிந்து கொள்ளாமல் இடையிலுள்ள ஏஜெண்டுகளை நம்பாதீர்கள். அவர்கள் நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் நபர்கள் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இடைத்தரகர்கள் ஆன இந்தச் சாமியார்கள் உங்கள் இறை நம்பிக்கையை மாற்றி அவர்கள் காட்டும் வழியில் உங்களைச் செல்வதற்குப் பழக்கி விடுவார்கள்.” பேசிக்க் கொண்டே இருக்கையில், ராமர் எனும் மாணவன் எழுந்து,

”சார். எல்லாச் சாமியார்களும் இப்படி இல்லை சார். எங்க ஊர்ல உள்ள சாமியார் காலேஜ், ஸ்கூல், ஆஸ்பத்திரி எல்லாம் கட்டித் தந்திருக்கிறார். ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவர் ஆசிர்வாதம் செய்தார்ண்ணா போதும். எல்லாம் சரியாகிவிடும்.” என்று இதுவரை அமைதியாக இருந்த ராமர் எழுந்து தனக்கு இஷ்டமான சாமியாரை நல்லவர் எனும் தொனியில் பேசினான்.

ராமர் கொஞ்சம் சுய புத்தி இல்லாதவன். யார் என்ன சொன்னாலும் நம்பும் புத்தி அவனோடது. அப்படித்தான் அந்தச் சாமியாரோட பேச்சில் மயங்கிப் போய் அலைகிறான். இவனப் போல ஆளுங்கள மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான் என மனதில் எண்ணியவாறே எனது பேச்சைத் தொடர்ந்தேன்

”மாணவர்களே, ராமர் சரியாக ஒரு கேள்வி கேட்டான். இப்படித்தான் எல்லோரும் கடவுளை விட்டுவிட்டு சாமியார்களைச் சக்தி வாய்ந்தவர் என நம்பி அலைகிறீர்கள். அருளும், அரவணைப்பும் தருவது தான் ஆன்மீகம். இதையே மூலதனமாக்கி மக்களை உயர வைத்தால் அது தான் ஆன்மீகம். அதைவிட்டு அருளுக்கும் அரவணைப்புக்கும் ஈடாகச் செல்வத்தைப் பெற்றுச் சாமியார்கள் உயர்ந்தால் அது ஆன்மீகமா? யோகா ஒரு உடல் சார்ந்த விஞ்ஞானம். இதைச் சூட்சுமமாக்கிப் பண மழையில் சாமியார்கள் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எத்தனை விஞ்ஞானிகள் இந்த உலகுக்காக எவ்வளவோ விஷயங்களை கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் பணம் கொடுத்து இருக்கிறோமா?”

”ராமர், இது உனக்கு ப்புரியுதா? நீ பிறர் சொன்னால் கேட்பாய். சுயமாகச் சிந்தித்து பார். ஏழைச் சாமியார் என்று யாராவது இருந்தால் சொல். ஸ்கூல், காலேஜ், மருத்துவமனை எல்லாம் இலவசம் என்று எத்தனை சாமியார்கள் சொல்லியிருக்கிறார் என்று எல்லா மாணவர்களையும் கவனித்தவாறு கேட்டேன்.

நமக்கென்ன என்று மாணவர்கள் யாரும் பதில் கூறாமல் இருந்தார்கள்.

”எந்தக் கடவுளும் இது போன்ற சாமியார்களை நமக்கு இனம் காட்டவில்லை. அவரவர் கடவுளை வணங்காமல், இவர்களைப் போன்றவர்களை வணங்க வைக்கும் இழிநிலைக்கு, இவர்கள் ஆன்மீகத்தை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். கடவுளையும் கடவுளின் பெருமையையும் அழித்துப் புதிய ஆன்மீகக் கொள்கைகளால் நாட்டை சூறையாடுகின்றனர்.

“மாணவர்களே ஆன்மீகம் பெரும் புனிதத் தன்மை வாய்ந்தது. மானிடப் பிறப்பை அறிந்து, உணர்ந்து வாழச் செய்வது அது. சகோதரத்துவத்தையும், ஆசையற்றுப் பாசமுடன் முழுமையாக வாழ்ந்து வரும் வாழ்க்கையையும் அது கற்றுத்தருகிறது. எனவே, ஆன்மீகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.”

”அடுத்த வகுப்பில் வாய்ப்பு இருந்தால், இன்னும் பல செய்திகளைப் பேசுவதற்கு முயற்சிப்போம்”

எனது வகுப்பை இத்தோடு முடிக்கலாம் என்று நிறைவு செய்தேன்

நேரம் பார்த்தேன். வகுப்புக்கான நேரம் தாண்டி 5 நிமிடம் ஆகியிருந்தது. அடுத்த வகுப்புக்கான மேடம் வகுப்பின் வெளியே நின்றிருந்தார்.

“நன்றி மாணவர்களே மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி வகுப்பிலிருந்து வேகமாக வெளியே வந்து, கல்லூரி நூலகத்தை நோக்கி நடந்தேன்.

இன்றைக்கு நடத்திய பாடம் எனக்குள் ஒரு திருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதை அப்படியே அசைபோட்டுக் கொண்டே இருந்தேன்.

நாடு இன்றைக்கு எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது? இதை நினைத்தால் பயமாக இருக்கிறது. உலகம் இவ்வாறு இருக்கிறது என்று கூடத் தெரியாமல், மாணவச் சமூகம் இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கான பாடத்திட்டங்கள் எதுவும் சமூக விழிப்புணர்வைக் குறித்துப் பேசுவதாக இல்லை

ஆன்மீகப் போர்வைக்குள் அழுகிப்போன பிணங்களின் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மணம் வீசும் திரவியங்களைத் தடவிச் சமூகம் ஜீரணித்துக் கொண்டு இருக்கிறது. மாணவர்களைக் கூட விட்டு வைக்காத ஆன்மீக உலகம். இவர்களை மூளைச்சலவை செய்து வசியப்படுத்தி வைத்திருக்கிறது.

இப்படியே யோசித்துக் கொண்டிருப்பது கூடத் தவறுதான். இதுபோன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு இத்தகைய விழிப்புணர்வுச் செய்திகளைக் கூறிக் கொண்டிருப்பதைப் போல இன்னும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

கல்லூரி முடித்து விரைவாகவே இன்று வீட்டிற்கு வந்துவிட்டேன். காரணம் கல்யாண வயதில் இறந்துபோன என் தங்கையின் நினைவு நாள். வரும் போதே சாமி கும்பிடத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்துவிட்டேன். சர்க்கரைப் பொங்கல், தங்கைக்குப் பிடித்த பால் பாயாசமும், உருளைக்கிழங்கு வறுவலும் தயாராகி இருந்தது. குளித்துவிட்டுச் சாமி கும்பிட வேண்டியதுதான்.

மனைவி படங்களுக்கெல்லாம் பூ வைத்துக் கொண்டு இருந்தாள். கோடிப்பட்டுத் துணியை நான்காக மடித்து என் தங்கையின் போட்டோவுக்கு அலங்கரித்துப் பூ மாலைகளைப் போட்டிருந்தார். போட்டோவுக்கு இருபுறமும் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தன.

விளக்குகள், பூஜைப் பொருள்கள் அனைத்தும் நேற்றே துலக்கிப் பள பள என்று இருந்தன.

”நேரம் ஆகிறது போய் குளிச்சிட்டு வாங்க” மனைவி அதட்டினாள்.

”அவ்வளவுதான் குளிச்சிட்டு வேகமாக வந்தரேன். பசங்க 2 பேரையும் முகம் கழுவி இருக்கச் சொல்லு. வீதியில் போய் விளையாட போறாங்க”

எல்லோரும் சாமி கும்பிடத் தயார்.

“டேய் தம்பி… சிவபுராணம் பாட்டுப் போடு”

”ஸ்பீக்கரில் போடவாப்பா” மூத்தவன் கேட்டுக்கொண்டே தன் செல்லில் கூகுள் மூலம் சிவபுராணம் போட்டான்.

ஸ்பீக்கரில் போட்டதால் கணீரென்று ”நமச்சிவாய வாழ்க” பாடல் ஒலித்தது.

”சத்தம் ஓவரா இருக்கு. குறை.”. சின்னவன் கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

படையல் போடப்பட்டு எல்லாம் தயாராக இருந்தது. ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் காட்டிச் சாமி கும்பிட்டு நின்றோம்.

”போதும்… பாட்டை நிறுத்து”

பின்னாடியிருந்துப் பெரியவனுக்குக் கூறினான்.

சூடம் மலை ஏறும் வரை அமைதியாய் இருந்தோம். மலை ஏறியதும் படையல் நகர்த்தித் திருநீறு எல்லாம் பூசியதற்குப் பிறகு பால்பாயாசம் வைத்த டம்ளரை எடுத்துச் சின்னவனை நோக்கி,

”தம்பி வா… சாமிப் பிரசாதம்… கொஞ்சம் வாயில ஊத்திக்கோ” என்று பக்கத்தில் கூப்பிட்டேன்.

”வேண்டாம்பா… வேண்டாம்பா… இது சாத்தானுக்குப் படைத்தது. சாப்பிடக்கூடாதாம். எங்க மிஸ் சொன்னாங்க, இதைச் சாப்பிட்டால் ஆண்டவரோட ராஜ்ஜியம் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமாம்.”

சொல்லிவிட்டுத் தள்ளி நின்று கொண்டான்.

எனக்குத் தலை சுற்றியது.

உச்சி வேர்த்தது.

கால் நுனி கூசியது. 


நன்றி

http://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#more-34080

அத்வைதம் பாரதிசந்திரன்.


 அத்வைதம் பாரதிசந்திரன்

By: பாரதிசந்திரன்

https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&newwindow=1&rlz=1C1CHBD_enIN909IN909&sxsrf=ALeKk00I9S4HPM9heq-YPb9NjjPuJCBcNw:1627796097126&ei=gTIGYaWLB4Xc9QO7qZ64BQ&start=10&sa=N&ved=2ahUKEwjlz4qBjY_yAhUFbn0KHbuUB1cQ8NMDegQIARBK&biw=996&bih=592#:~:text=Central%20Library%2C%20CUTN,koha%20%E2%80%BA%20opac-detail

புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து... “யாதொன்றின் மீவுரு”

 நூல் அறிமுகம்: 

 “யாதொன்றின் மீவுரு” 

(புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.



நூல்: புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூல் 
ஆசிரியர்: கவிஞர் க. சித்தார்த்தன் 

பருவம் கடந்து பயணிப்பதும், அந்நாட்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை அப்படியே உணர்வதும், அதன் பிம்பம் மாறாமல் மனக்கண் முன் காட்சியை உருவாக்கித்தருவதும் படைப்பின் சிறப்பு எனலாம். தன்முன்னதான நிகழ்வை உருவமைப்பது கூடச் சிலசிலநேரங்களில் இல்லாததாக மாறிவிடும் படைப்பாளனின் இயலாமைக்கு நடுவில், இது சாத்தியமானது ஒருவகை வியப்பே !

அசங்கல் புசங்களாக மனத் திரையில் விரியும் பழமையின் சுவடுகள் நீண்ட மறைத்தன்மை கொண்டவை. அவை, நிழலாடும் இருண்மையைத் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை. முழுவதுமான அதன் உள்ளார்ந்த பேரழகை அல்லது நெடிது நீண்ட சோகப் பின்னணியைத் தொட்டுத் தடவி உள்ளது உள்ளவாறு உணர்ந்து விடுவது எல்லாப் படைப்பாற்றலையும் விட உன்னதமாய் இருக்கிறது.

ஆழ்மன உணர்வுகளைக் கவிதைக்குள் வடிப்பதைக் கவிஞர்கள் பெரும்பாலும் விரும்புவர். அது கவிதையையும், கவிதையைப் படிப்பவரையும் சிறந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். கவிதை எல்லோருக்கும் பொதுவான எல்லாருக்குமான உணர்வுகளை மீட்டெடுத்து தருவதாகும்.

”ஒரு நல்ல கவிதை, தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்ளக்கூடியது. அப்படியான கவிதை காலத்திற்கும் அப்பால் எடையறு சுழற்சியைத் தனதே கொண்டபடி அலைகிறது. எப்பொழுதெல்லாம் வாசிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாமான பொழுதுகளின் தொகுப்பாக அதன் அதன் காலம் அமைகிறது. மௌனம் என்பது கவிதையைப் பராமரிக்கிற காலத்தின் பேழையாகிறது” என்பர் அசோகமித்திரன்.



அதேபோல, கவிஞர் சித்தார்த்தன் எழுதிய புழுதி படிந்த சொற்கள் நூலிலுள்ள கவிதைகளும் காலத்திற்கு அப்பால் உள்ள உண்மையான உணர்வுகளைப் பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளன.

”வெறுமை சூழ்ந்து இருக்கும் அறையில்

தாழிட்ட கதவுக்குப் பின்

தனிமையில் இருந்த நான்

கடந்த கால ஞாபகங்களின்

கதவைத் தட்டினேன்”

இக்கவிதை வரிகள் தான் அனைத்துக் கவிதைகளுக்குமான திறவுகோல் ஆக அமைந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நூலின் ஒட்டுமொத்த கவிதைகளையும் படைப்பாளனின் உணர்வாக இதைக் கொண்டே கூறிவிடலாம். இதுவே கவிதைகளுக்கான தன்மையை வெளிப்படுத்தும் வசனமாக இருக்கிறது.

கவிஞன் தன் இளமைக் காலத்தின் நடுவில், கேமராவுடன் நின்று உறவுகளை வரிசையாய் வட்டமாய் நிற்கவைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் அலாதியான உணர்வுகளின் விழி கொண்டு அவர்களைப் படம் பிடித்து இருக்கின்றார் . அதுவே இக்கவிதைத் தொகுப்பின் கவிதைகள் ஆகியிருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில், வீட்டில் சாப்பிட்டுப் போட்ட மாங்கொட்டை ஒன்று துளிர்க்கத் தொடங்கியது. கவிஞன் அதை நட்டு வைத்துப் பராமரிக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆனால், உறவுகள் அனைவரும் ஒவ்வொன்றாய் கூறி அந்தச் செடியை வளர்க்க வேண்டாம் என்கின்றனர். அது கேட்காமல் பாசம் கொட்டி அதைக் கவிஞர் வளர்க்கிறார். ஆனால் ஒருநாள், பள்ளி விட்டு வரும்பொழுது அந்தச் செடிக் காய்ந்து போய்க் கிடந்தது. அது அவருக்குள் பெரும் இழப்பாக இருந்தாக மாங்கன்று கவிதையில் ஒரு காட்சியை விளக்குகிறார். அந்தச் செடி காய்ந்து போனதை,

”பள்ளி விட்டு வீடு திரும்பும்

ஒரு மாலை நேர வேளையில்

என் எதிர்கால மாமரம்

இறந்து கிடந்தது .

கள்ளிப்பால் ஊற்றிக் கொன்ற ஒரு

பெண் சிசுவைப் போல ”

எனச் செடியைக் குழந்தையாகப் பாவித்து இறந்த கதையை இக்கவிதை மிகச் சோகமாக விளக்கி நிற்கின்றது.

தனிமையின் பொழுதுகளில், நம் நினைவுகள் நம்மைத் தனித்து இருக்க விடாது. அது பல நிகழ்வுகளை நம் கண் முன்னே ஓடவிடும். அங்கு பல உறவுகளுடன் நமது வாழ்க்கையில் நடந்த பல காட்சிகள் விரியும். அதை, ”உடன் இருக்கும் நினைவுகள்” கவிதை விளக்கிக் காட்டுகிறது.



கவிஞரின் பார்வையில், சமூக ஓட்டத்தில் மிக முக்கியமானவர்கள் எனக் கூறும்பொழுது, தன்னைச் சுற்றி இருக்கும் சொந்தங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளிகள் தான். அவ்வகையில் ”விவசாயி” எனும் கவிதையில், விவசாயி படும் வேதனைகள் பல நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளன.

”பசுமை பூத்திருக்கும் வயல்களின்

வரப்பில் அமர்ந்து

சோறு உண்ணும் சேறு பூசிய முகங்களில்

காய்த்துப் போன

கண்ணீர் கோடுகள்”

உளப் பிறழ்வுக் கவிதையாகப் ” பயம்” கவிதை விளங்குகிறது. அக்கவிதையில்,

”இரவு எட்டுமணிக்குப் பிறகே

நினைவில் வந்து

நீந்துகின்றன

மந்திரவாதி அனுப்புவதாய் சொன்ன

குட்டிச் சாத்தான்கள்.

 

தூரத்து நாயொன்று

ஜாமத்தில் குரைக்கையில்

அப்பாவை அணைத்தபடி

ஆறுதல் அடைகிறேன்.”

எனப் பயத்தை விரிவாக விளக்குகிறார். இளமையில், அறியாமையில், தனக்குள் நிகழ்ந்த பய உணர்வைத் தற்பொழுது மீண்டும் அவ்விடத்திற்குச் சென்று, அதைத் தோண்டி எடுத்து அழகான உணர்வுகளோடு கவிதை ஆக்குவது எவ்வளவு கடினமான செயல்பாடு, அந்த மனநிலையைத் தன் படைப்பாற்றலில் கொண்டு வந்த சிறப்பு அரியதாகும். அதைக் கவிஞர் சித்தார்த்தன் இக்கவிதையில் செய்து காட்டியிருக்கிறார்

”சாதாரண செயல்பாடுகளில் கூடப் பதற்றம் அல்லது பயம் ஏற்படும் பிறழ்வு ”பதக்களிப்புக் கோளாறு” என இம் மனப்பிறழ்வு வகைப்படுத்தப்படுகிறது. அச்சக் கோளாறுகளில் ஒன்று பொதுவாக வகைப்படுத்தப்படும். அவற்றில், பலரது சமூகத்து முன் வருவதற்கு வெட்கப்படல் (SOCIAL ANXIETY DISORDER) திகில் அடைதல், வெளியே கண்டும் மருளல் (agoraphobia) அதிர்ச்சியால் ஏற்படும் அழுத்தப் பிறழ்வு, மனஅலைக்கழிவுப்பிறழ்வு( obsessive compulsive disorder) என்பன சில இவற்றின் சில ஆகும்” என உளவியல் குறித்த கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. இவ்வகைக்கு உதாரணமாகக் கவிதைகள் பலவற்றை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. கடைசி நிமிடங்கள், தற்கொலை, வெட்டியான் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.



ஒரு பிச்சைக்காரனின் இயல்பு வாழ்க்கையானது, இன்பத்தை வெறுத்து மேம்பட்ட வாழ்வைத் தருவதாகவே வாழ வேண்டியுள்ளது. அதுவே நல்ல வாழ்வும் கூட, அது புத்தனின் வாழ்வை போன்றும், போதனையைப் போன்றும் உள்ளன என ”யாசகனின் கவிதை” விளக்குகிறது

”ஜாதி மதங்கள் அற்ற ஒரு

சமத்துவ தேசத்தை

அவனுக்குள் அவன்

ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.

பசிக்கு இரை

படுக்கத் தரை

இதனின் நிம்மதி

எங்கேனும் உண்டோ எனப்

போய்க்கொண்டிருந்தான்

புத்தனைப் போல்”

வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் கவிஞனின் பார்வை மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுகின்றது.

”தூய்மை இந்தியா” கவிதை ஒரு சமூகக் கவிதையாகக் காணப்படுகிறது. அனைத்து விதமான தரம்கெட்ட அரசியல் நிகழ்வுகளைக் கவிதையால் நக்கல் செய்கின்றார். அதில்,

”ஜாதிமதச் சண்டையால்

கிழிந்து கிடக்கும் இந்த ஆடையில்

எப்படி தைக்க போகிறாய்

உன் தேசியக்கொடியை.

மாதக் கடைசியில்

மணிப் பர்சைப் போல

இளைத்துக் கிடக்கிறது

இந்தியா”

என நம் நாட்டைப் பார்த்து ஆதங்கப்படுகிறார். மேலும்,

”சலூன் கடைக்காரர்

கூட்டிப் பெருக்கி

ஓரம் தள்ளினார்

எல்லா ஜாதி மயிரையும்”

என்னும் கவிதை சமூகத்துக்கு அளித்த சவுக்கடி ஆகும். நம் நிலையை மிக நேர்த்தியான முறையில், தமது கவிதைகளில் விளக்கமாக, அதேநேரம் உணர்வுப் பிரதிபலிப்பாகச் சமூகக் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கவிஞனின் பல்வேறு கவிதைகள் இத்தொகுப்பில் ஆழ்மன உளவியல் கவிதைகளாக, சமூகக் கவிதைகளாக, அழகியல் கவிதைகளாக, நவீனக் கவிதைகளாகக் காணப்படுகின்ற நிலையை அறிய முடிகிறது.



அழகியல் கவிதையாக ”விடியல்” கவிதை உள்ளது. அதில், ”அம்மா காலைப்பொழுதில் வீட்டின் முன் கோலம் இடுகிறாள். விடியல் அவள் காலில் விழுந்து கிடக்கிறது” என்று கற்பனையாக ஒரு காட்சியைக் கொண்டு வருகிறார். பூக்களின் முகத்தில் பனித்துளி பருக்கள் என்று இயற்கை அழகைப் பாடுகிறார் இப்படியாக, இயற்கை கற்பனைகள் இன்னும் இக்கவிதைத் தொகுப்பில் நீண்டு கிடக்கிறன.

கவிஞர் சித்தார்த்தன் தன் எழுத்துக்களால் தன் துன்பமும் கோபமும் சோகமும் அடியோடு காணாமல் போகிறது என்பதை

”கண்கள் நிரம்பி தளும்பும்

கண்ணீரைத் துடைத்து

என்னைக் கழுவத் துவங்கியது

எழுத்து”

கவிதை மிக அற்புதமான செயலைச் செய்வதாகத் தன் துயரத்தை எல்லாம் நீக்குவதாகத் தனது படைப்பாற்றல் தனக்குள் விளங்குகிறது என்னும் கருத்தைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார்.

தற்கொலை, இறப்பு, முதுமை, இயலாமை எனக் கவிதைகள், இக்கவிதைத் தொகுப்பில் அதிகமாக எழுதப்பட்டிருக்கின்றன.

தனிமனித உணர்வுகள், வேதனை, பயம், எதிர்பார்ப்பு, பாசம், நேசம், உறவுகளின் தேவை போன்றவையும் இக்கவிதைத் தொகுப்பில் காணப்படுகின்றன. எனவே ஆழ்மனம் சார்ந்த கவிதைகளையும், இயல்பு நடத்தைகள் குறித்தும், சமூகம் குறித்தான பார்வையையும் முப்பரிமான தோற்றத்தில் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன .

இக்கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் அனைத்துக் கவிதைகளும் முகநூல் கவிதைகள் ஆக வலம் வந்த கவிதைகள் ஆகும். அதிகமான, ஆழமான வாசகர்களைப் பெற்ற கவிதைகளாகவும் இக்கவிதைகள் விளங்குகின்றன. கால மாற்றத்திற்குத் தக முகநூலில் கவிதைகள் இன்று வலம் வருகின்றன. அதற்கான உடனடி விமர்சனமும் உடனே இங்கு கிடைத்து விடுவதால் படைப்பாளனும் மகிழ்கிறான்.

தன் கவிதையை நாடி பிடித்துப் பார்த்துத் திருத்தம் செய்து கொள்ளவும் முகநூல் கவிதைகள் அதிகமான அளவிற்கு உதவி வருகின்றன. காலத்துக்குத் தக கவிதைகள் பல வடிவங்களில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற கவிதைத்தொகுப்புகள் சாட்சியாக இருக்கின்றன.

அவ்வகையில், கவிஞர் சித்தார்த்தனின் கவிதைகள், யாதோன்றின் மீவுருவாக்கச் சொற்களாக இந்தப் புழுதி படிந்த சொற்களில் காணப்படுகின்றன