நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

சனி, 31 ஜூலை, 2021

புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து... “யாதொன்றின் மீவுரு”

 நூல் அறிமுகம்: 

 “யாதொன்றின் மீவுரு” 

(புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.



நூல்: புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூல் 
ஆசிரியர்: கவிஞர் க. சித்தார்த்தன் 

பருவம் கடந்து பயணிப்பதும், அந்நாட்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை அப்படியே உணர்வதும், அதன் பிம்பம் மாறாமல் மனக்கண் முன் காட்சியை உருவாக்கித்தருவதும் படைப்பின் சிறப்பு எனலாம். தன்முன்னதான நிகழ்வை உருவமைப்பது கூடச் சிலசிலநேரங்களில் இல்லாததாக மாறிவிடும் படைப்பாளனின் இயலாமைக்கு நடுவில், இது சாத்தியமானது ஒருவகை வியப்பே !

அசங்கல் புசங்களாக மனத் திரையில் விரியும் பழமையின் சுவடுகள் நீண்ட மறைத்தன்மை கொண்டவை. அவை, நிழலாடும் இருண்மையைத் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை. முழுவதுமான அதன் உள்ளார்ந்த பேரழகை அல்லது நெடிது நீண்ட சோகப் பின்னணியைத் தொட்டுத் தடவி உள்ளது உள்ளவாறு உணர்ந்து விடுவது எல்லாப் படைப்பாற்றலையும் விட உன்னதமாய் இருக்கிறது.

ஆழ்மன உணர்வுகளைக் கவிதைக்குள் வடிப்பதைக் கவிஞர்கள் பெரும்பாலும் விரும்புவர். அது கவிதையையும், கவிதையைப் படிப்பவரையும் சிறந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். கவிதை எல்லோருக்கும் பொதுவான எல்லாருக்குமான உணர்வுகளை மீட்டெடுத்து தருவதாகும்.

”ஒரு நல்ல கவிதை, தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்ளக்கூடியது. அப்படியான கவிதை காலத்திற்கும் அப்பால் எடையறு சுழற்சியைத் தனதே கொண்டபடி அலைகிறது. எப்பொழுதெல்லாம் வாசிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாமான பொழுதுகளின் தொகுப்பாக அதன் அதன் காலம் அமைகிறது. மௌனம் என்பது கவிதையைப் பராமரிக்கிற காலத்தின் பேழையாகிறது” என்பர் அசோகமித்திரன்.



அதேபோல, கவிஞர் சித்தார்த்தன் எழுதிய புழுதி படிந்த சொற்கள் நூலிலுள்ள கவிதைகளும் காலத்திற்கு அப்பால் உள்ள உண்மையான உணர்வுகளைப் பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளன.

”வெறுமை சூழ்ந்து இருக்கும் அறையில்

தாழிட்ட கதவுக்குப் பின்

தனிமையில் இருந்த நான்

கடந்த கால ஞாபகங்களின்

கதவைத் தட்டினேன்”

இக்கவிதை வரிகள் தான் அனைத்துக் கவிதைகளுக்குமான திறவுகோல் ஆக அமைந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நூலின் ஒட்டுமொத்த கவிதைகளையும் படைப்பாளனின் உணர்வாக இதைக் கொண்டே கூறிவிடலாம். இதுவே கவிதைகளுக்கான தன்மையை வெளிப்படுத்தும் வசனமாக இருக்கிறது.

கவிஞன் தன் இளமைக் காலத்தின் நடுவில், கேமராவுடன் நின்று உறவுகளை வரிசையாய் வட்டமாய் நிற்கவைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் அலாதியான உணர்வுகளின் விழி கொண்டு அவர்களைப் படம் பிடித்து இருக்கின்றார் . அதுவே இக்கவிதைத் தொகுப்பின் கவிதைகள் ஆகியிருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில், வீட்டில் சாப்பிட்டுப் போட்ட மாங்கொட்டை ஒன்று துளிர்க்கத் தொடங்கியது. கவிஞன் அதை நட்டு வைத்துப் பராமரிக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆனால், உறவுகள் அனைவரும் ஒவ்வொன்றாய் கூறி அந்தச் செடியை வளர்க்க வேண்டாம் என்கின்றனர். அது கேட்காமல் பாசம் கொட்டி அதைக் கவிஞர் வளர்க்கிறார். ஆனால் ஒருநாள், பள்ளி விட்டு வரும்பொழுது அந்தச் செடிக் காய்ந்து போய்க் கிடந்தது. அது அவருக்குள் பெரும் இழப்பாக இருந்தாக மாங்கன்று கவிதையில் ஒரு காட்சியை விளக்குகிறார். அந்தச் செடி காய்ந்து போனதை,

”பள்ளி விட்டு வீடு திரும்பும்

ஒரு மாலை நேர வேளையில்

என் எதிர்கால மாமரம்

இறந்து கிடந்தது .

கள்ளிப்பால் ஊற்றிக் கொன்ற ஒரு

பெண் சிசுவைப் போல ”

எனச் செடியைக் குழந்தையாகப் பாவித்து இறந்த கதையை இக்கவிதை மிகச் சோகமாக விளக்கி நிற்கின்றது.

தனிமையின் பொழுதுகளில், நம் நினைவுகள் நம்மைத் தனித்து இருக்க விடாது. அது பல நிகழ்வுகளை நம் கண் முன்னே ஓடவிடும். அங்கு பல உறவுகளுடன் நமது வாழ்க்கையில் நடந்த பல காட்சிகள் விரியும். அதை, ”உடன் இருக்கும் நினைவுகள்” கவிதை விளக்கிக் காட்டுகிறது.



கவிஞரின் பார்வையில், சமூக ஓட்டத்தில் மிக முக்கியமானவர்கள் எனக் கூறும்பொழுது, தன்னைச் சுற்றி இருக்கும் சொந்தங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளிகள் தான். அவ்வகையில் ”விவசாயி” எனும் கவிதையில், விவசாயி படும் வேதனைகள் பல நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளன.

”பசுமை பூத்திருக்கும் வயல்களின்

வரப்பில் அமர்ந்து

சோறு உண்ணும் சேறு பூசிய முகங்களில்

காய்த்துப் போன

கண்ணீர் கோடுகள்”

உளப் பிறழ்வுக் கவிதையாகப் ” பயம்” கவிதை விளங்குகிறது. அக்கவிதையில்,

”இரவு எட்டுமணிக்குப் பிறகே

நினைவில் வந்து

நீந்துகின்றன

மந்திரவாதி அனுப்புவதாய் சொன்ன

குட்டிச் சாத்தான்கள்.

 

தூரத்து நாயொன்று

ஜாமத்தில் குரைக்கையில்

அப்பாவை அணைத்தபடி

ஆறுதல் அடைகிறேன்.”

எனப் பயத்தை விரிவாக விளக்குகிறார். இளமையில், அறியாமையில், தனக்குள் நிகழ்ந்த பய உணர்வைத் தற்பொழுது மீண்டும் அவ்விடத்திற்குச் சென்று, அதைத் தோண்டி எடுத்து அழகான உணர்வுகளோடு கவிதை ஆக்குவது எவ்வளவு கடினமான செயல்பாடு, அந்த மனநிலையைத் தன் படைப்பாற்றலில் கொண்டு வந்த சிறப்பு அரியதாகும். அதைக் கவிஞர் சித்தார்த்தன் இக்கவிதையில் செய்து காட்டியிருக்கிறார்

”சாதாரண செயல்பாடுகளில் கூடப் பதற்றம் அல்லது பயம் ஏற்படும் பிறழ்வு ”பதக்களிப்புக் கோளாறு” என இம் மனப்பிறழ்வு வகைப்படுத்தப்படுகிறது. அச்சக் கோளாறுகளில் ஒன்று பொதுவாக வகைப்படுத்தப்படும். அவற்றில், பலரது சமூகத்து முன் வருவதற்கு வெட்கப்படல் (SOCIAL ANXIETY DISORDER) திகில் அடைதல், வெளியே கண்டும் மருளல் (agoraphobia) அதிர்ச்சியால் ஏற்படும் அழுத்தப் பிறழ்வு, மனஅலைக்கழிவுப்பிறழ்வு( obsessive compulsive disorder) என்பன சில இவற்றின் சில ஆகும்” என உளவியல் குறித்த கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. இவ்வகைக்கு உதாரணமாகக் கவிதைகள் பலவற்றை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. கடைசி நிமிடங்கள், தற்கொலை, வெட்டியான் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.



ஒரு பிச்சைக்காரனின் இயல்பு வாழ்க்கையானது, இன்பத்தை வெறுத்து மேம்பட்ட வாழ்வைத் தருவதாகவே வாழ வேண்டியுள்ளது. அதுவே நல்ல வாழ்வும் கூட, அது புத்தனின் வாழ்வை போன்றும், போதனையைப் போன்றும் உள்ளன என ”யாசகனின் கவிதை” விளக்குகிறது

”ஜாதி மதங்கள் அற்ற ஒரு

சமத்துவ தேசத்தை

அவனுக்குள் அவன்

ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.

பசிக்கு இரை

படுக்கத் தரை

இதனின் நிம்மதி

எங்கேனும் உண்டோ எனப்

போய்க்கொண்டிருந்தான்

புத்தனைப் போல்”

வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் கவிஞனின் பார்வை மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுகின்றது.

”தூய்மை இந்தியா” கவிதை ஒரு சமூகக் கவிதையாகக் காணப்படுகிறது. அனைத்து விதமான தரம்கெட்ட அரசியல் நிகழ்வுகளைக் கவிதையால் நக்கல் செய்கின்றார். அதில்,

”ஜாதிமதச் சண்டையால்

கிழிந்து கிடக்கும் இந்த ஆடையில்

எப்படி தைக்க போகிறாய்

உன் தேசியக்கொடியை.

மாதக் கடைசியில்

மணிப் பர்சைப் போல

இளைத்துக் கிடக்கிறது

இந்தியா”

என நம் நாட்டைப் பார்த்து ஆதங்கப்படுகிறார். மேலும்,

”சலூன் கடைக்காரர்

கூட்டிப் பெருக்கி

ஓரம் தள்ளினார்

எல்லா ஜாதி மயிரையும்”

என்னும் கவிதை சமூகத்துக்கு அளித்த சவுக்கடி ஆகும். நம் நிலையை மிக நேர்த்தியான முறையில், தமது கவிதைகளில் விளக்கமாக, அதேநேரம் உணர்வுப் பிரதிபலிப்பாகச் சமூகக் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கவிஞனின் பல்வேறு கவிதைகள் இத்தொகுப்பில் ஆழ்மன உளவியல் கவிதைகளாக, சமூகக் கவிதைகளாக, அழகியல் கவிதைகளாக, நவீனக் கவிதைகளாகக் காணப்படுகின்ற நிலையை அறிய முடிகிறது.



அழகியல் கவிதையாக ”விடியல்” கவிதை உள்ளது. அதில், ”அம்மா காலைப்பொழுதில் வீட்டின் முன் கோலம் இடுகிறாள். விடியல் அவள் காலில் விழுந்து கிடக்கிறது” என்று கற்பனையாக ஒரு காட்சியைக் கொண்டு வருகிறார். பூக்களின் முகத்தில் பனித்துளி பருக்கள் என்று இயற்கை அழகைப் பாடுகிறார் இப்படியாக, இயற்கை கற்பனைகள் இன்னும் இக்கவிதைத் தொகுப்பில் நீண்டு கிடக்கிறன.

கவிஞர் சித்தார்த்தன் தன் எழுத்துக்களால் தன் துன்பமும் கோபமும் சோகமும் அடியோடு காணாமல் போகிறது என்பதை

”கண்கள் நிரம்பி தளும்பும்

கண்ணீரைத் துடைத்து

என்னைக் கழுவத் துவங்கியது

எழுத்து”

கவிதை மிக அற்புதமான செயலைச் செய்வதாகத் தன் துயரத்தை எல்லாம் நீக்குவதாகத் தனது படைப்பாற்றல் தனக்குள் விளங்குகிறது என்னும் கருத்தைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார்.

தற்கொலை, இறப்பு, முதுமை, இயலாமை எனக் கவிதைகள், இக்கவிதைத் தொகுப்பில் அதிகமாக எழுதப்பட்டிருக்கின்றன.

தனிமனித உணர்வுகள், வேதனை, பயம், எதிர்பார்ப்பு, பாசம், நேசம், உறவுகளின் தேவை போன்றவையும் இக்கவிதைத் தொகுப்பில் காணப்படுகின்றன. எனவே ஆழ்மனம் சார்ந்த கவிதைகளையும், இயல்பு நடத்தைகள் குறித்தும், சமூகம் குறித்தான பார்வையையும் முப்பரிமான தோற்றத்தில் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன .

இக்கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் அனைத்துக் கவிதைகளும் முகநூல் கவிதைகள் ஆக வலம் வந்த கவிதைகள் ஆகும். அதிகமான, ஆழமான வாசகர்களைப் பெற்ற கவிதைகளாகவும் இக்கவிதைகள் விளங்குகின்றன. கால மாற்றத்திற்குத் தக முகநூலில் கவிதைகள் இன்று வலம் வருகின்றன. அதற்கான உடனடி விமர்சனமும் உடனே இங்கு கிடைத்து விடுவதால் படைப்பாளனும் மகிழ்கிறான்.

தன் கவிதையை நாடி பிடித்துப் பார்த்துத் திருத்தம் செய்து கொள்ளவும் முகநூல் கவிதைகள் அதிகமான அளவிற்கு உதவி வருகின்றன. காலத்துக்குத் தக கவிதைகள் பல வடிவங்களில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற கவிதைத்தொகுப்புகள் சாட்சியாக இருக்கின்றன.

அவ்வகையில், கவிஞர் சித்தார்த்தனின் கவிதைகள், யாதோன்றின் மீவுருவாக்கச் சொற்களாக இந்தப் புழுதி படிந்த சொற்களில் காணப்படுகின்றன

அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்

 அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – 


தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ், பெருமை, முக்தி பெறும் பேறு என எல்லாம் அடங்கிய அமிர்தமே லிங்கமாக மாறி அருள்தரும் திருத்தலம் தான், ”கலைசைச் சிதம்பரேஸ்வரர்” திருக்கோயிலாகும்.




வரலாற்றுப் பின்னணியும், தேவர்கள் வணங்கிய புராண பின்னணியும், திருவாவடுதுறை ஆதீனப்புலவர்கள் பாடிய பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது கலைசைச் தலமாகும். இயற்கையில் பல அதிசயங்கள் நிகழும் தலமாகவும் இத்தலம் உள்ளது.

திருக்கோயில் அமைவிடம்:

ஆவடி- திருவள்ளூர் பேருந்து வழித்தடத்தில் ”செவ்வாய்பேட்டை” எனும் ஊருக்கு அருகாமையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இரயில் மார்க்கத்தில், இதே வழித்தடத்தில் ”செவ்வாய் பேட்டை” நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.

தலத்தின் பெயர் ;

இவ்வூர், புராண வரலாற்றின்படியும், புலவர்களின் பாடல்களின் படியும் ”கலைசை” என்று அழைக்கப்பட்டாலும், ”தொட்டிக்கலை” என்று தற்பொழுது வழங்கப்படுகிறது. மற்றும் ”கலைசாபுரி” ,”கோவிந்த புரம்”, ”வடதில்லை” எனப் பல்வேறு இலக்கியங்களில் பல பெயர்களால் இவ்வூர் அழைக்கப்படுகின்றது. பசும் தொழுவத்தில் உள்ள கழுநீர் தொட்டி அதிகம் இருந்ததால் தொட்டிக்கலை என்று பெரும்பகுதி மக்கள் இன்றழைக்கின்றனர்.


தலபுராணச் சிறப்பு:

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது, தன்வந்திரிப் பகவான் அமுதக் கலசத்துடன் வந்தார். விநாயகரை வணங்காமல் அமுதம் கடைந்ததால் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய விநாயகப்பெருமான் அமுதக்கலசத்தை மறைத்து வைத்தார். தங்களது தவற்றை உணர்ந்த தேவர்களான பிரம்மனும், இந்திரனும் தங்களை மன்னிக்க விநாயகரிடம் வேண்டினர். மன்னிக்கும் அதிகாரம் ஈசனுக்கே என விநாயகர் சொல்லியதால், இந்திரன், பிரமன் ஆகியோர் ஈசனை நோக்கி தவம் இருந்து ஈசனிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்றனர், அப்போது அமிர்த குடம் தளும்பச் சிந்திய சிறு துளி அமிர்தம் இத்தலத்தில், லிங்கமாக மாறியது. எனவே, அமிர்தத்தின் உருவமாகவே லிங்கம் இருப்பதனால் கடவுளுக்குக் ”கலைசைத் தியாகேசர்” எனப் பெயர் பெற்றார். லிங்கம் அமிர்தத்தால் உண்டானது என்பது எவ்வளவு மகத்துவமானதும் சிறப்பானதும் ஆகும். இத்தலத்தின் இறைவன் அமிர்த வடிவமாகக் காட்சி தருகின்றான். காண்போர், அருள் வேண்டு வோர் அத்தனைப் பேருக்கும் அமிர்தத்தின் பயனைத் தன் அருளினால் வழங்குகிறார். இப்புராணக் கதையைக்,

‘கும்பங் கொடுத்த கலைசைத் தியாகர் குளக்கணுஞ்சீ

தம்பம் பிடவசை யுங்குளிர் வாடை தணந்தவர்க்குக்” (கலைசைக் கோவை-451)

‘எம்பாவை யேற்குங் கலைசைத் தியாக ரெடுத்து முன்னாள்

தம்பாலிருந்த கலசத்தை வேதன் றனக்குணர்ந்துன்” (கலைசைக் கோவை-65)

என்று கலைசைக் கோவை கூறும்

திருக்கோயில் அமைப்பு:

தொட்டிகலை ஊரின் மையப் பகுதியில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இக்கோயில். இரண்டு . மிகப் பெரிய பிரகாரங்களை உடையதாகும். கோயில் முன் புறமாக வடக்குப் புறத்தில் ”சிவகங்கைத் தீர்த்தம்” என்று வழங்கப்படும் அற்புதமான குளம் அமைந்திருக்கின்றது. சிவகங்கைத்தீர்த்தம் புராணக் கதையோடு தொடர்புடையது.இந்தத்தீர்த்தம் பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடைய அரு மருந்தாகக் காணப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்ற பொருளில் சிவனின் கங்கைத்தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

இராஜகோபுரம் பெரியதான நுழைவாயிலைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. கோபுரத்தின் மேல்பகுதி இல்லை. அடித்தளம் இராஜ கோபுரத்தைத் தாங்கி நிற்கக்கூடிய நிலையில் கட்டப்பட்டு உள்ளது நுழைவாயிலைக் கடந்ததும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய செப்புத்தகடு போர்த்திய கொடிமரம்,பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. மகாb மண்டபத்தில் நேரெதிரே கருவறையில் அற்புதமான தாமரைப் பீடத்தில் வட்ட வடிவ ஆவுடையார் மூலஸ்தானமாக அமிர்த வடிவாகச் ”சிதம்பரேஸ்வரர்” எனும் திருநாமத்துடன் மூலவர் காணப்படுகிறார். வாயிற்காப்போன் மிகப் பழமையான வடிவுடன் காணப்படுகின்றனர்.

கருவறைத் தேவ கோட்டங்களாகக் கணபதி, தஷ்ணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள் இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. விதானங்கள் வண்ணங்களுடன் சுதைச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மூலஸ்தானத்திற்கு வலதுபுறம், நால்வர் சிலைகள் வரிசையாக உள்ளன. அவரோடு, திருவாவடுதுறை ஆதீனப் புலவர் சிவஞான முனிவர் சிலையும் அங்கு உள்ளன. சிவஞான முனிவர் சிலையை மாதவ சுப்பிரமணிய முனிவர் இங்கு வைத்து வணங்கியதாக, அவர்தம் பாடல்கள் வழி அறிகின்றோம். இருவரும் குரு, மாணவர்களாக இவ்வூரில் தங்கி இவ்வூர் திருத்தலத்தையும், அருகாமையில் இருக்கக் கூடிய பல கோயில்களையும் பாடி இலக்கியம் செய்தவர்கள். இவர்கள் இருவரும் அளப்பரிய அதிசயங்கள் எல்லாம் இக்கோயிலிலி ருந்து நிகழ்த்தியவர்கள் ஆவர்.

நுழைவாயிலின் உட்புறம் சூரியன், சந்திரன் சிலைகள் உள்ளன. உட்புறப் பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளாக ஸ்ரீ விநாயகர் சன்னிதி, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகப் பெருமான் சன்னதி, மகாலட்சுமி சன்னதி, ஸ்ரீ தியாகராஜர் சன்னதி, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, ஸ்ரீ விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, சோமாஸ் கந்தர் சன்னதி ஆகிய சன்னதிகள் காணப்படுகின்றன. சுவாமி சன்னதிக்கு இடதுபுறம் தெற்குப் பார்த்த வண்ணமாகக் கருவறை அர்த்த மண்டபத்துடன் தனி சன்னதியாகச் சிவகாமி அம்பிகை உள்ளார். நடராஜர் சன்னதி இச்சன்னதிக்கு அருகாமையில் உள்ளது.

வெளிச்சுற்றுப் பிரகாரத்தில், இடதுபுறமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் அமைந்துள்ள வசந்த மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் தான் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகைத் திருநாள், திருவிளக்குப் பூஜை, பெருநாள் போன்ற திருநாட்களில் இங்குதான் உற்சவமூர்த்தி இருந்து புறப்படுவார்.

வெளிப்பிரகாரத்தில் இடதுபுறமாக மடப்பள்ளியும், நாகர் சன்னதியும் உள்ளன. பல நூறாண்டு பழமை வாய்ந்த வில்வ மரம் இருந்தது. அதுவே கோயிலின் தல விருட்சம் ஆகும். அந்தப் பழைய வில்வமரம் தற்பொழுது இல்லாமல் புதியதான வில்வமரம் காணப்படுகிறது…

கோயிலின் வெளிப்புறத்தில் மாதவ சுப்பிரமணிய முனிவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ”சாமி மடம்” உள்ளது. அங்கு தற்போது தேவாரம் திருவாசகம் படித்தல் முற்றோதல் வகுப்புகள் நடைபெறுகின்றன. சிவஞான முனிவரும் மாதவசுப்பிரமணிய முனிவரும் இங்கு இருந்து பல பக்தி இலக்கியங்களை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தச் சிறப்பு:

கோயிலில் சிவகங்கைத் தீர்த்தம் காணப்படுகிறது. இது கோவில் திருக்குளம் ஆகும். கங்கை நதியில் குளித்த பெருமை இக்குளத்திற்கு உண்டு. மேலும், பல நோய்களைத் தீர்க்கும் வல்லமை உடையது எனச் சுப்பிரமணிய முனிவர் தமது பாடலில் பாடியுள்ளார். மேலும், ”நந்தி ஓடை” எனும் தீர்த்தம் ஒன்று உள்ளது. தீர்த்தமானது, கோவிலின் பின்புறத்தில் உள்ளது. அது ஒரு ஓடை. தானே உற்பத்தியாகி ஊற்றிலிருந்து வரும் ஓடை நீர் ஆகும். பல அதிசயங்கள் நிகழ்த்தும் மருத்துவ குணங்களுடைய தீர்த்தம் அதுவாகும்.

இத்திருத்தலத்தில், மாதவ சுப்பிரமணிய முனிவரால் பாடப்பெற்ற பாடல்பெற்ற ஸ்தலமாக உள்ள ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. சிவன் கோயிலின் பின்புறத்தில் இக்கோயில் உள்ளது. மிகப் பழமையான பெருமாள் கோவில் இதுவாகும். பசுப் பால் சொரிந்து வெளிப்பட்ட இறைவன் சுயம்புவாகக் கிடைத்த பெருமான் எனத் தல புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் சிற்பங்கள் மிக அருமையான வேலைப்பாடுகள் உடையதாகும். ஆதிகேசவபெருமாள், பெருந்தேவி தாயார் சன்னதிகள் உள்ளன. இதற்கு அருகாமையில் தனிக் கோயிலாகச் செங்கழுநீர் விநாயகர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் குறித்தும் பக்தி இலக்கியங்கள் பாடப் பெற்றுள்ளன. விநாயகரின் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் சிவஞான முனிவர் இலக்கியம் புனைந்துள்ளார்.


திருவிழாச் சிறப்பு:

சிவன் கோயில்களில், ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்கள் இங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறன. பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, திருவாதிரை, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், நவராத்திரி, சஷ்டி நாள், அவதாரத் திருநாள், சபாபதி அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்புடன் ஊர்மக்களின் தயவுடன் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தினர் நடத்துகின்றனர். இவ்விழாக்களில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ விழா மற்றும் ஆருத்ரா விழா போன்றவை மற்ற இ

டங்களை விடச் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. திருவிளக்குப் பூஜையும் தொடர்ந்து சிறப்பான நாட்களில் நாட்டுநலன் கருதி அடிக்கடி இங்குக் கொண்டாடப்படும். திருவாவடுதுறை ஆதீன புலவர் சிவஞானமுனிவர் ”கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி”, ”கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்” என்ற இரண்டு நூல்களை ப் படைத்துள்ளார்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ”சிதம்பரேஸ்வரர் மாலை” என்னும் நூலைத் படைத்துள்ளார். தொட்டிகலை மாதவ சுப்பிரமணிய முனிவர் கிட்டத்தட்ட இக்கோயில் குறித்து ஒன்பது சிற்றிலக்கியமான பக்தி இலக்கியங்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். வண்ணம், பரணி, கட்டியம், சிலேடை வெண்பா, இரட்டைமணிமாலை, திருத்தம், வண்ணம் என்ற வகைகளில் பல இலக்கியங்களைப் பாடியுள்ளார்.

கட்டுரையாளர் :  பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)

திருநின்றவூர். 9283275782. chandrakavin@gmail.com,

நன்றி: https://patrikai.com/chidambareswarar-temple-thottikalai-thiruvallur-kalaisai-sivan-author-bharathichandran/



 

காற்றைத்தேடும் பலூன்கள்

 காற்றைத்தேடும் பலூன்கள்





முன்னதும் பின்னதுமான காலத்தால்

ஊதப்பட்ட பலூன்கள்

காற்றிலாடுகின்றன

உள்நுழைந்த தூசிகளுடன்

மூச்சுத் திணறிப்போய்.

காற்றைத் தேடித் தேடி அலைகின்றன.


அதீதத் தீண்டாமையானது

சாதியை விட அந்தத் தொற்று.


இயல்பை மறந்த நடத்தைப்பிறழ்வுகள்

மார்பிடித்துக் கொண்டு

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடுகின்றன


எப்படியாயினும் பிழைத்தாக.


வெளிறிய பயம்

முகத்திலிருந்து பிய்ய

அமானுஷ்ய ஓசைகளால் நிரம்பிய

வார்த்தைகள் உள்ளாழம் வரை சென்று

நைய்க்க.

புடைத்த நெற்றியில்

உயிர் ஒப்படைத்த கடவுளின்

சின்னம் வெளிர.


எங்கும் மரணஓலம்.



சுடுகாட்டிலும் வரிசை வரிசையாய்

உடல்கடுக்கக் கிடந்தன பிணங்கள்.

சடலங்கள் சடங்குகள் அற்றுப் போகின்றன

மூலத்தைத் தேடி...


----பாரதிசந்திரன் ----



 நன்றி  ஈகரை தமிழ்க் களஞ்சியம்