நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

ஒளிமயமான பட்டை தீட்டப்பட்ட வைரங்களை மட்டும் வைத்து ஒரு அற்புதமான மாளிகை கட்டினால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தன்மையது “அழியாச் சுடர்கள்” (https://azhiyasudargal.blogspot.com) என்னும் இத்தளம்.

தமிழ் இலக்கிய உலகத்தில், தனது அயராத பணியினால், தன் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள். அப்படைப்பாளர்களின் வரலாறு மிகப் பெரிதானதாகும்.

மாசற்ற இலக்கியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டிருந்த, மாபெரும் ஜாம்பவான்களாகத்  திகழ்ந்தவர்களை இனம் காட்டும் ஒரு அற்புதமான இணையதளமாக ”அழியாச் சுடர்கள்” என்னும் இத்தளம் விளங்குகிறது.
.
நவீன இலக்கியங்களின் வடிவம், கருத்தாக்கம், வெளிப்பாடு, உலக இலக்கியங்களுக்குத் தக மேன்மை அடைந்தும், மாறுபட்டும், புதுமையாக முயற்சி செய்தும் தமிழில் எழுதப்பட்டன.

அவ்வாறு எழுதப்பட்ட இலக்கியங்கள் அத்தனையையும் ஒருசேர காண வேண்டும்; கற்க வேண்டும் என்றால் அதற்குப் பயன்படும் மிகச்சரியான இணையதளமாக இத்தளம் விளங்குகிறது.

 

’நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்’ என்ற தாரக மந்திரத்துடன் இந்த இணையதளம் காணப்படுகிறது.

பெட்டகம் என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு இந்த இணையதளம் ஆகும். காரணம், நவீன படைப்புகளினுடைய சிந்தனைகளையும் வெளிப்பாடுகளையும் இங்கு காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் உலகத் தரத்திற்கு இணையாகத் தமிழைக் கொண்டு சென்ற இலக்கியப் படைப்பாளிகளினுடைய மாபெரும் சங்கமம் இங்கு காணப்படுகிறது.

ஒரு தொகுப்புப் பணியாகக் காணப்பட்டாலும், இந்தப் பணி ஒரு அற்புதமான பணியாகும். காரணம், புதிதாக இலக்கியம் கற்க வருகின்ற வேற்றுமொழியாளர் ஒருவர், தமிழில் இன்று செய்து வைத்திருக்கிற இலக்கியங்களை ஆராய வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்று தேடினால் இப்பெட்டகம் அதற்கு வழிவகுக்கும்.

தமிழனுடைய செம்மார்ந்த வீரம் மிகுந்த படைப்பாற்றல், படைப்புத்திறன் போன்ற நம் நவீன தமிழ் இலக்கியங்களை வெளிமொழியினர்களுக்கு இனம் காட்டிப் படிப்பித்து தெளிவடையச் செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அ. மாதவையா, அ. முத்துலிங்கம், ராமசாமி, அசோகமித்திரன், கவிஞர் அபி, அம்பை, அழகிய பெரியவன் என்ற நூற்றுக்கணக்கானவர்களின் பட்டியலில், நவீன தமிழ்ப் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த படைப்பையும் அலசி ஆராய்கிற அல்லது அப்படைப்பையே வெளிக்கொண்டு வருகின்ற தன்மையைக் கொண்டு வந்திருக்கின்றது இத்தளம்.

 

தொகுப்புப் பணி என்றாலும், அது செம்மையான சிறப்பான பணியாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு, கவிஞர் அபி அவர்களின் நேர்காணல் ஒன்றும், கவிதைத் தொகுதியில் சிலவும் போடப்பட்டுள்ளன. கவிஞர் அபி அவர்களின் இலக்கிய நயங்களையும், நளினங்களையும் தெரிந்துகொள்ள இந்த இரண்டு பகுதிகள் போதுமானது.

கவிஞர் அபி அவர்களின் நேர்காணல், அவரைக் குறித்தும், அவரது சிந்தனைத்துவத்தை வெளிப்படுத்தியும், சமகால இலக்கியப் போக்கை நாம் அவதானிக்கவும் நமக்குப் பயன்படுகிறது.

ஆழமான நுட்பங்களை அந்த நேர்கானலில் உணர்ந்து கொள்ளலாம்.
கவிதைகள் குறித்த அவரின் வெளிப்பாடுகள் அலாதியானது.

அப்பேட்டியில் ஒரு கேள்வியும் பதிலும் இவ்வாறு அமைந்துள்ளது.

கேள்வி:

படிமம் விஷயத்தின் உள்ளுருவைக் காட்டும் என்கிறீர்கள், உங்கள் கவிதைகள் பேசாமலும், பேசும் விதம் இன்னதென்று அறியாமலும் பிறந்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.

தன்மைகளின் பிடிப்பிலிருந்து விலகும் போது அவை abstract ஆகின்றன என்கிறீர்கள். இவைகளை உங்கள் கவிதை ஒன்றின் பிறப்பைக்கொண்டு விளக்குங்கள்.

பதில்:

‘நான் இல்லாமல் என் வாழ்க்கை ‘ என்ற என் கவிதை,

நான் இல்லாமலே

என் வாழ்க்கை

எதேச்சையில்

அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்

கற்பிக்க

நான் இல்லாததால்

நீல வியாபகம் கொண்டது

எதை துறந்தோம் என்று

அறிய வேண்டாத

நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்

பொது ரீங்காரம் மட்டும்

தொடர

நிழல் வீழ்த்தாமல்

நடமாடியது

கூரைகளுக்கு மேலே

தன்மைகளின் எதிர்ப்பை

அலட்சியம் செய்து

அசைவு தெரியாமல்

பறந்து திரிந்தது

பூமியை துளைத்து

மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு

அகப்படாமல்

நுட்பம் எதுவுமற்ற

சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து

குதித்து விளையாடியது

காலத்தின் சர்வாதிகாரம்

புகைந்து அடங்குவதை

வேடிக்கை பார்த்தது

தத்துவச் சுமை கரைந்து

தொலைதூரத்து வாசனையாய்

மிஞ்சிற்று

எனது குறியீடுகளின்

குறுக்கீடு

இல்லாது போகவே

தன்னைத் தனக்குக்

காட்டிக் கொண்டிருப்பதையும்

கைவிட்டது

”எதையும் பிரித்துப் பார்த்தல், எதிலிருந்து விலகி தனித்தல், இருப்பதிலிருந்து விலகி இல்லாதிருத்தல் – இவை என் நிரந்தர உளச்சல்கள்.

எதிலிருந்து விலகி இல்லாதிருப்பது ? இருத்தலிருந்து. இருத்தல் எது ? இந்த வாழ்க்கை.

இந்த மாதிரியான நினைவுப் போக்கில் ஒருநாள், நான் விலகி நின்றால் என் வாழ்க்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது.

எழுந்த கணத்தில் என் முன் என் வாழ்க்கை அனைத்துப் பரிமாணங்களிலிருந்தும் விடுபட்டு வரம்பற்ற சுதந்திரத்தோடு, பேரானந்தத்தோடு இயங்குவதைப் பார்த்தேன்.

அதற்கு வடிவம் இல்லை; தன்மை இல்லை; தன்னை உணரும் / தன் ஆனந்தம் இன்னதென உணரும் அவசியமும் இல்லை.

இந்த கவிதை உங்களிடம் எதையும் சொல்லவில்லை; நான் அதற்கு எந்தக் கருத்தையும் தயாரித்துக் கொடுக்கவில்லை; அது ஒரு உயிர் பொருளாக உங்கள் முன் நிற்கிறது.

இந்தக் கவிதையில் தனித்து விடப்பட்ட வாழ்க்கையின் இயக்கங்கள் காட்டப்படுகின்றன. அருத்திரளுதல், நீல வியாபகம் கொள்ளுதல், சூன்யத்தை அளைதல், நிழல் வீழ்த்தாமல் நடமாடுதல், தன்மைகளின் எதிர்ப்பை அலட்சியம் செய்து பறந்து திரிதல்-இந்த இயக்கங்கள் இன்னதென்று தெளிவுபடாத, நிழல்தனமான, ஒரு படிமத்தை மனத்திரையில் உருவாக்கிக் காட்டுகின்றன.

இந்த படிமம் விஷயத்திலிருந்து வேறுபட்டதன்று; விஷயமேதான் படிமம் உணர்த்துகிறது. இனிமேலும் சொல்வது கவிதை அனுபவத்தைப் பாதிக்கும்”..

எனும் பகுதி மிக அற்புதமான கேள்விப் பதிலாகும். இது சரியான புரிதலைக் குறித்ததாகும்.

கனவு அன்று கனவு எனும் கவிதைகள் அவரது மிகச்சிறந்த கவிதைத் தொகுதியாகக் கருதப்படுகிறது. அவரது காலம் எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் மற்றும் மாலை எனும் தலைப்பில் அமைந்த பல்வேறு கவிதைகள் இங்கு நவீன இலக்கியத்தின் சான்றாகப் பகிரப்பட்டுள்ளன.

 

இதேபோல், மௌனியின் சிறுகதைகள், மௌனி குறித்த கட்டுரைகள், அவரைக் குறித்த திறனாய்வுகள் இத்தளத்தில் காணப்படுகின்றன.

சி.சு.செல்லப்பாவின் சிறுகதைகள், அவரைக் குறித்த கட்டுரைகள், பெரிய அளவில் இடம் பெற்றிருக்கின்றன.

இவ்வாறு அளவிடமுடியாத கட்டுரைகளும், கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைகளும், நாவல் குறித்த திறனாய்வுகளும், படைப்புகளும் காணப்படுகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒரே இடத்தில் அறிவதும், அவர்களின் படைப்பையும், அவர்களைக் குறித்த படைப்புகளையும் காண்பது, நவீன இலக்கியத்தைத் தேடுபவர்களுக்குச் சொர்க்கமாக கிடைத்திருப்பது இத்தளம் ஆகும்.

கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஆளுமைகள் குறித்த ஆவணப் படங்கள் இத்தளத்தில் காணப்படுகின்றன. கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் மிகச்சிறந்த தமிழிலக்கியப் படைப்பாளி மற்றும் ஆவணப்பட இயக்குனர் ஆவார்.

ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம், மா. அரங்கநாதன் குறித்த ஆவணப் படம், இந்திரா பார்த்தசாரதி குறித்த ஆவணப்படம், சேக்கிழார் அடிப்பொடி குறித்த ஆவணப்படம், திரிலோகம் என்று ஒரு கவி ஆளுமை எனும் ஒரு ஆவணப்படம் போன்றவைகள் காணப்படுகின்றன.
.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், இசை, இலக்கிய வரலாறு, திறனாய்வுகள், ஓவியம், கலைகள் என அனைத்துத்துறை சார்ந்த சாதனைச் செம்மல்கள் இங்கு அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர் அல்லது மேன்மைப்படுத்தப் பட்டுள்ளனர்.
.
தமிழில் நவீனஇலக்கியக் கர்த்தாக்களை அடையாளப் படுத்தியதைப் போல் ”உலக இலக்கியம்” என்னும் பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் சொடுக்கினால் வேறு ஒரு வலைப்பூப் பக்கத்திற்குச் செல்லுகிறது.

தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் போல, உலக இலக்கிய ஜாம்பவான்களின் பட்டியல்லும் அங்கு வெளியிடப்பட்டுள்ளன.

”ஆண்டன் பாவ்லொவிச் செகாவ் , ஆல்பெர் காம்யு,  இடாலோ கால்வினோ, எர்னஸ்ட்ஹெமிங்வே, ஃபிரான்ஸ்காஃப்கா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், டொனால்டு பார்தெல்மே, தஸ்தயேவ்ஸ்கி” போன்ற 25 உலக இலக்கியவாதிகளை அடையாளப் படுத்தியுள்ளனர்.

அங்கு, தமிழ் இலக்கியவாதிகளும் கூறப்பட்டுள்ளனர். இது, உலக இலக்கியத்தில் தமிழ் இலக்கியவாதிகளும் அடக்கம் எனும் செய்தியைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

 

இத்தளத்தை இதுவரை ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள்.

அழியாச் சுடர்கள் எனும் தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்கள் குறித்தான இணையதளத்தை 25 லட்சம் பேர்களுக்கு மேல் பார்த்து இருக்கிறார்கள். இது சிறப்பான ஒன்றாகும்.

 

இவ்விரண்டு தளங்கள் குறித்துத் தமிழ்ப் படைப்பாளர்களில் முக்கிய மானவர்களான திரு. ஜெயமோகன் .திரு. எஸ் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரின் கருத்தும் இத்தளத்தின் சிறப்பை எடுத்தோதும்..

”இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.

https://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது.

ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்” என்பார் ஜெயமோகன்.

 

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றி வருகிறது.

அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக் காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். என்பார் எஸ் ராமகிருஷ்ணன்.

அழியாச்சுடரை பார்வையிட https://azhiyasudargal.blogspot.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)


பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ் 

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி


இந்துமதம் என்பது, தொடக்கம் காண இயலாத பிரம்மாண்டத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையதாகும்.

கிளை விரித்தாளும் ஆலமரத்தைப் போன்று ஒன்றே பலவாக மாறும் தன்மையுடையதாகும்.

அறிவைக் கண்டு அடைவதற்கும், பிறப்பின் சூட்சுமத்தை விளங்கிக் கொள்வதற்கும், நிகழ்வுகளில் தெளிவு பெறுவதற்கும் துணையாய் இருப்பது இந்து மதமாகும்.

சிந்தனைகளும், வாழ்க்கை முறைகளும், உடலியல் அதிசயமும், அறிவியல் கூறுகளும் ஒருமித்து இறைக்கோட்பாடாக ஆக்கப் பெற்றிருக்கிற மதம் இந்து மதமாகும்.

இந்து மதத்தின் ஒரு பகுதியான ”சைவ சமயம்” தன் பரப்பில், மீண்டும் மீண்டும் உயர்ந்தும், ஆழமாகியும், நிறைந்தும், பெருகியும் காணப் பெற்று அனைவராலும் உணரத்தக்கதாக இருக்கிறது.

இவை அனைத்தையும் எழுத்தாலும், வாக்காலும், இசையாலும், நடிப்பாலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் நமக்கு இருக்கும் என்றால் ”சைவம்” எனும் இத்தளத்திற்குச் சென்றால் போதும்.

நமக்குத் தேவையான எல்லாம் அங்கு கிடைக்கும். இல்லை என்ற ஒன்று அங்கு இல்லை எனும் அளவு கடுமையான உழைப்பால் இத்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

 

இணையதளத்தின் முகப்புப் பகுதியில் இந்துமதத்தின் வரலாறுகள், அவற்றின் தன்மை, சிறப்பு, விளக்கம் எனப் பல்வேறு விதமான தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

விளக்கங்கள் சைவ சமயம் குறித்தான அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறன.

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆழமான கருத்துக்கள் இறைத் தன்மையின் வெளிப்பாடுகள், மகத்துவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை சைவ சமயம் குறித்தான ஆழமான பார்வையை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

அறிமுகம் எனும் பகுதியில், இந்து மதத்தின் அடிப்படைத் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இத்தலங்கள் செய்துகொண்டிருக்கிற சமூகப்பணிகள் மற்றும் அதற்குத் தேவையானவைகள் போன்றவை இங்கு கூறப்பட்டிருக்கின்றன.

பொது எனும் தலைப்பில் உலக அளவில் நடைபெறும் சைவ சமயத் திருவிழாக்கள், முக்கியமான நாட்கள், விரதங்கள் போன்றவைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த இந்து சமய நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்துவதாக இப்பகுதி காணப்படுகிறது.

பொதுஅறிவு எனும் துணைத் தலைப்பில், சைவம் குறித்தான பல்வேறு வினா விடைகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில், இணையவழி சைவ சமய வினா விடைகளைத் தேர்வாக எழுதி, மதம் குறித்தான அறிவை பெருக்கிக் கொள்ள இப்பகுதி உதவுகிறது.

புத்தகம் மற்றும் இணையதளத் தொடர்பு முகவரி எனும் பக்கத்தில் சைவ சமயம் குறித்தானப் பல்லாயிரம் நூல்களின் பட்டியலும் கட்டுரைகளின் பட்டியலும், அறிஞர்களின் கோட்பாடுகள், சிந்தனைகள் போன்றவற்றை தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சைவ சமய இதழ்கள் எனும் பகுதியில் சைவ சாஸ்திர பரிபாலனம் எனும் இதழும், அருள் ஒளி எனும் இதழும், அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழும் பதிவிடப்பட்டுள்ளன.

மார்ச் 2020 வரை வந்துள்ள அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழை இங்கு படிக்கலாம். மிகச் சிறப்பான ஆன்மீக இதழ் இதுவாகும்.

சைவநிறுவனங்கள் எனும் தலைப்பில், தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் மற்றும் உலக அளவில் காணப்படும் சைவசமய நிறுவனங்கள் எங்கெங்கு இருக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்பதை விளக்குவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

கோயில்கள் எனும் பகுதியில் உலக அளவில் காணலாகும் சிவ தலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. கோவில்களின் சிறப்புத் திருவிழாக்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புப் மிக்க கோவில்களின் பட்டியலும் இங்கு காணப்படுகிறது.

யாத்திரை எனும் தலைப்பிற்குள், இந்தியாவில் உள்ள யாத்திரை செல்ல வேண்டிய மிக முக்கியமான திருத்தலங்கள் குறித்தான முழுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.

புனித இலக்கியம் எனும் மாபெரும் பகுதியில், திருமுறை எனும் துணைத் தலைப்பில் பன்னிருதிருமுறைகள், ஒவ்வொரு திருமுறைகளாகத் தனித்தனியாகத் தொகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

வரி வடிவமாகவும், இசை வடிவமாகவும் அந்தப் புனிதமான திருமுறைகள் காணப்படுகின்றன. வாழ்நாள் முழுவதும் படித்தாலும் படிக்க முடியாத, உணர்வதற்கு இயலாத மாபெரும் உன்னத உணர்வை இலக்கியமாக இங்கு நாம் காண்கின்றோம்.

இந்தப் பணியானது மிகச் சிறந்த மாபெரும் புனித பணியாகும். அதேபோல், தமிழ் எனும் துணைப் பகுதியில் திருமுறைகள், ஆகமங்கள், சைவ சித்தாந்தம், தல புராணங்கள், மொழிபெயர்ப்பு, வீர சைவம் ஆகியவை குறித்த பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைவ சித்தாந்தம் பகுதியில் விளக்கங்கள், சொற்பொழிவுகள், பல்லாயிரம் பக்கங்கள் பேசப்பட்டுள்ளன. இது ஒரு ஆன்மீக களஞ்சியமாகக் காணப்படுகிறது.

தொகுப்பு எனும் பகுதியில், இசை ஒலித்தொகுப்பாகவும், படக்காட்சித் தொகுப்பாகவும், புகைப்படத் தொகுப்பாகும் காணப்படுகின்றன. இவை வரலாற்று ஆவணமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

புகைப்படக் கோப்புகள் சைவம் குறித்தான பல்வேறு ஆலயங்களை வரலாறாகப் பதிவு செய்துள்ளன. கோவில்கள், கோவில் கட்டுமானக் கலைகள், திருவிழாக்கள் இறைவனின் உற்சவப்படங்கள், அறிஞர் பெருமக்களின் இறை ஞான புகைப்படங்கள் எனப் பல்வேறு விதமான ஆவணங்கள் இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சைவத் திருமுறைகள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் போன்றவை அறிஞர் பெருமக்களால் விளக்கப்பட்டுள்ளன. இசை வடிவம் காணப்படுகின்றது.  அவற்றைத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இத்தளத்தில் காணலாம்.

24 மணி நேரமும் கேட்பதற்கு வசதியாக இசைச் சொற்பொழிவுகளும், இசைப் பாடல்களும் திருநெறிய தமிழோசை எனும் பகுதியிலும் சைவ லகரி என்னும் பகுதியிலும் ஒளிபரப்பப்படுகின்றன.

இவை நாள்தோறும் சைவ அன்பர்களுக்குச் சைவத்தின் சாராம்சங்களை எல்லாம் எடுத்தோதுகின்றன.

 

ஆன்மீகத்தைத் தேடுபவரின் கண்களுக்கும். காதுகளுக்கும், அறிவுக்கும், சிந்தனை மாற்றத்திற்கும் பெரும்வித்தாகவும் சொத்தாகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மகான்களின் சிந்தனையில் உதித்த சைவ நூல்கள் பழங்காலம் தொட்டு இக்காலம் வரைச் சேகரிக்கப்பட்டு விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளன.

இத்தளம் செல்பேசியில் பயன்படும் வகையிலும் தனிச் செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மொத்ததில் சைவம் தழைத்தோங்கச் செய்யும் இணையதளமாகவும், ஆன்மீக ஆவணமாகவும், அன்பர்களை வழி நடத்தும் வழிகாட்டி யாகவும் இத்தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

”ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி…” என முழுமுதலைப் பாடும் சேக்கிழாரின் வரிகளுக்கிணங்க சைவத்தின் எல்லாவற்றையும் விளக்கி முழுமுதலாய்த் திகழ்கிறது இத்தளம்.

சைவம்.ஓஆர்ஜி பார்வையிட https://shaivam.org/ ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)



பாரதிசந்திரன்

நன்றி இணைய இதழ்

நரித்தனமானது வார்த்தையின் பொருள்

நரித்தனமானது வார்த்தையின் பொருள்


வார்த்தைகள் சில பொழுதுகளில்

விலை போய்விடுகின்றன வக்கற்று.

 

சில தடிமன் ஆகவும்

சில நோஞ்சான் ஆகவும்

அவதியாய் பிரயோசனப்படுகின்றன.

அவை ஒவ்வொன்றும் உள்ளொன்றும் புறமொன்றும்

வைத்துப்பேசுகின்றன..

 

வார்த்தை ரோசம்அற்றது அல்ல.

சடமும் அல்ல .

அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரிஆனது…

 

இழிந்ததும் கெட்டதும் என்று உண்டு

இழிசாதி என்பதை போல.

மங்கலம் ஆகி மணி மகுடம் தரிப்பதும் உண்டு

உயர்சாதி என்பதை போல.

 

“கோபத்தில் வந்த வார்த்தை அது. அதைச் சும்மா சும்மா சொல்லி மாரடிக்காதே”

வார்த்தை சாகடிக்கவும் செய்யும் கற்புக்கரசி கதை…

 

“இவர்களை மன்னியும் ஆண்டவரே”

வார்த்தை அருள் தரவும் செய்யும்

மேய்ப்பரின் கதை…

 

இவைகளோடு பயணிக்கத் தொடங்கி

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

சிறகிழந்த ஈசலாய்

செத்துப்போன – என்

வாழ்விழந்த வார்த்தைகள்…



பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்

தமிழ்ச்சுரங்கம்.காம் – மாபெரும் அறிவுச் சுரங்கம்


தமிழ்ச்சுரங்கம் எனும் பெயருக்கேற்ப மாபெரும் அறிவுச் சுரங்கமாகவும், ஆற்றல் தரும் சுரங்கமாகவும், ஊற்றாய் ஊறும் சிந்தனைகளைத் தரும் சிந்தனைச் சுரங்கமாகவும், சேகரத்தின் முழுமையை உணர்த்தும் முழுமையின் சேகரமாகவும் அமைந்திருப்பதை தமிழ்ச்சுரங்கம்.காம் தளத்தைப் படிப்பவர் அனைவரும் உணரலாம்.

சுரங்கம் என்றால் தமிழெனும் மலையைத் தேடச் செல்லும் பாதுகாப்பான, அழகான சுரங்கம் இதுவாகும்.

வாருங்கள் தளத்தைக் குறித்துக் காண்போம்.

 

இத்தளத்தில் முதன்மையான ஒன்றாகக் கருதுவது இலக்கியங்கள் எனும் தலைப்பாகும்.

இத்தலைப்பின் கீழ், நம் தமிழ்மொழியின் ஆழமும், அகலமும் மிகப்பெரும் பாரம்பரியமும், தொன்மையும் மிக்கதான சங்க இலக்கியங்கள் எனும் உள்தலைப்பு உள்ளது.

அதனுள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய தlலைப்புகளில் உள்ள அனைத்துப் பாடல்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கியமான தொகுப்பாகும். அனைத்துப் பாடல்களையும் ஒருங்கே ஒரு இடத்தில் கிடைப்பதற்கு வழி செய்தமை மிகப் பெரும் சிறப்பாகும். பல இலக்கியங்களுக்குப் பொருள் தந்திருப்பது அதைவிட சிறப்பாகும்.

காப்பிய இலக்கியங்கள் எனும் பெரும் பகுதியில் ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

சமய இலக்கியங்கள் எனும் பகுதியில் பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சைவ சித்தாந்த நூல்கள் ஆகிய அனைத்தும் போடப்பட்டுள்ளன.

பக்தி இலக்கியங்களின் அனைத்துப் பாடல்களும் ஒரே இடத்தில் இங்கிருப்பது தேடுபவர்களுக்கு இதொரு சொர்க்கப் பகுதியாகும்.

 

தமிழ் உலகம் எனும் தலைப்பில் தமிழ், தமிழர் வரலாறு, தமிழக மாவட்டங்கள், தமிழ்ப் பெயர்கள், தமிழக சிறப்பு, அம்சங்கள், தமிழர் வாழும் நாடுகள், இலக்கிய நூல்களின் பட்டியல் எனும் தலைப்புகளில் தமிழகம் குறித்தான அனைத்து விதமான செய்திகளும் தரவுகளும் தொகுத்து இங்கு தரப்பட்டுள்ளன.

இத்தளத்தின் அளப்பரிய பெருமையினை இப்பகுதி வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தமிழகம் சார்ந்த செய்திகளைத் தேடுவோர் இப்பகுதியில், அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்ளும் விதமாக இங்கு செய்திகள் போடப்பட்டுள்ளன.

 

அறிவியல் என்னும் தலைப்பில் வானவியல் பகுதி, கிரகங்களின் மற்றும் துணைக் கிரகங்களின் தன்மையினை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

ஒளியியல் எனும் தலைப்பின் கீழ் மாயப் படங்கள் மற்றும் 3d படங்கள் எனும் தலைப்புகளில் அறிவியல் சார்ந்த மாயப் பிம்பங்களைக் குறித்தான விளையாட்டுகளும் செய்திகளும் கணித அறிவும் போடப்பட்டுள்ளன.

பொது அறிவு எனும் தலைப்பின் கீழ், பொதுஅறிவுக் கட்டுரைகள், நீதிக் கதைகள், எனும் பகுதிக்குள் தெனாலி ராமன் கதைகள், முல்லாவின் கதைகள் போன்றவை மிகப்பெரிய அளவில் தொகுக்கப்பட்டு போடப்பட்டுள்ளன.

பொதுஅறிவுக் கட்டுரைகள் பல்வேறு பொதுப் போட்டிகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் மிகப் பயனுள்ள பகுதியாக இருக்கும்.

விளையாட்டுகள் எனும் சிறு தலைப்பில் மனதை அறியும் கருவி. சினிமாக் கட்டம் போன்ற விளையாட்டுக்கள் பதி விடப்பட்டுள்ளன.

 

ஆன்மீகம் எனும் பெரும் தலைப்பில் ஆன்மீக நூல்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை இந்துமதம் சார்பாகவும். திருவிவிலியம் பகுதியில் பழைய ஏற்பாடும் மற்றும் புதிய ஏற்பாடும் கிறிஸ்துவ மதத்தின் நூல்களாகவும் அங்கு சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்மீகக் கட்டுரைகள், தந்திர-குண்டலினி யோகம் போன்றவை குறித்த விளக்கங்கள், மந்திரங்கள் குறித்த கட்டுரைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆன்மீகத்தைத் தேடுபவர்களுக்கு இப்பகுதியானது, அதிகமான செய்திகளைத் தருபவையாக இருக்கின்றன.

ஜோதிடம் எனும் பகுதியில், வேத ஜோதிடம், ஆருடங்கள், எண் ஜோதிடம், மற்றும் ஜோதிட குறிப்புகள், ஜோதிடம் சார்பான கட்டுரைகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவம் என்னும் பெரும் தலைப்பில் பொது மருத்துவம் என்பவற்றில் இயற்கை மருத்துவக் கட்டுரைகள், சித்த மருத்துவக் கட்டுரைகள், பிற மருத்துவக் கட்டுரைகள் எனப் பலவேறு கட்டுரைகள் மருத்துவம் குறித்தான செய்திகளைக் கூறுவனவாக இருக்கின்றன.

இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம்மிக்க சித்த வைத்திய முறைகளை அறிந்து கொள்ள முடியும். பொது மருத்துவம் குறித்த நிறைய கட்டுரைகள் இங்கு காணப்படுகின்றன.

பெண்கள் பகுதி என்னும் பெரும் தலைப்பில் பெண்கள் சார்பான மருத்துவக் கட்டுரைகள், அழகுக் கட்டுரைகள், சமையல் செய்கின்ற முறைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கோலங்கள், மருதாணி போன்ற பெண்களுக்கு விருப்பமான செய்திகள் கட்டுரைகளாகப் பட விளக்கங்களாக இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நகைச்சுவை எனும் தனிப் பகுதியும், அதில் சிரிப்புகள், கடி சிரிப்புகள், சர்தார்ஜி சிரிப்புகள், முட்டாள் சிரிப்புகள், ராமு-சோமு சிரிப்புகள், அமலா-விமலா சிரிப்புகள் ஆகியவை பதிவிடப்பட்டுள்ளன.

 

கலை உலகம் எனும் பெரும் தலைப்பில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பல கட்டுரைகள் உள்ளன.

தமிழகத்திரையரங்குகள் பட்டியலும், திரைப்படச் செய்திகள் குறித்த கட்டுரைகளும், திரைக்கதை மற்றும் வசனம் போன்ற செய்திகளும், தமிழிசை இசைக்கருவிகள் குறித்த கட்டுரைகளும், விளக்கங்களும் இப்பகுதியில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

திரைப்படம் குறித்தான செய்திகளைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சுரங்கமாகக் காணப்படுகிறது.

புதுக்கவிதைகள் எனும் பகுதியில் பல கவிஞர்களின் புதுக்கவிதைகள் அணி செய்கின்றன. அதேபோல், மரபுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என இக்கால இலக்கியத்தின் தன்மைகள் தனித்தனி தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹைக்கூ பகுதியில் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன. கட்டுரைகள் எனும் பகுதியில் பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் எனும் பகுதியின் நாட்டுப்புற இலக்கிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கலைக்களஞ்சியம், வரைபடங்கள் போன்ற தலைப்புகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேடுபொறி எனும் தலைப்பின் கீழ் தமிழ்த்தேடல் மூலமாகத் தமிழ் சொற்கள் அனைத்திற்கும் பொருள் விளக்கம் தரும் பகுதி அமைந்திருக்கிறது.

அதேபோல் அகராதி என்னும் தலைப்பின் கீழ் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் பொருள் கூறும் பகுதியும் அமைந்திருக்கிறது.

இதன்மூலம் இளைஞர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சொற்களையும் தமிழ்ச் சொற்களிலிருந்து தமிழ்ச் சொற்களையும் அறிந்து தெரிந்து தமிழ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இப்பகுதிகள் உதவியாக இருக்கின்றன.

வானொலி பகுதியில் இணைய வானொலிச் சேவைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளம் தேடுபவர்களுக்குத் தேடுகிற பொருளையும், நாடுபவர்களுக்கு நாடுகிற அறிவுச் செல்வத்தையும் வழங்கும் தன்மையான தளமாகும்.

சுரங்கம் எனும் பெயருக்கு ஏற்பத் தமிழ்சுரங்கம் என்னும் இத்தளம் எல்லாவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற ஆழமான அகலமான சிறப்புப் பொருந்திய தளமாக விளங்குகிறது.

இலக்கியங்கள், தமிழர் பண்பாடு,  தமிழர் சிறப்பு, பொது அறிவுச் சிந்தனைகள், ஆன்மீகம் குறித்தான விளக்கங்கள், ஜோதிடம், மருத்துவம், சமையல், நகைச்சுவை, திரைப்படம் என எல்லாத் தளங்களையும் தொடுகிறது.

அவற்றில் மிகுதியான தரவுகளையும், செய்திகளையும், கட்டுரைகளையும் தந்திருக்கிற ஒரு மாபெரும் இலக்கியச் சமூக விழிப்புணர்வு அறிவுத்தேடலான தளமாக தமிழ்சுரங்கம் எனும் இத்தளம் விளங்குகிறது.

 

தமிழ்ச்சுரங்கம் எனும் இத்தளத்தினைத் தனியொரு நபராக இருந்து உருவாக்கிய ஒருவர் திரு கே.ஆர்.சக்திவேல் ஆவார். அவரின் தமிழ்ப்பணி யாரும் செய்ய இயலா அரும்பணியாகும்.

கடும் உழைப்பால் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரைத் தமிழ் உலகம் என்றும் இதன் மூலம் மறவாது. அவரின் இணையதளம் குறித்து அவர் கூறுவதை இனி காணலாம்.

ஓர் இனத்தின் வளர்சியும், வாழ்வும் அந்த இனம் பேசுகின்ற மொழியைப் பொருத்தே அமைகிறது.

அதுபோல ஒரு மொழியின் வளர்சியானது அம்மொழியில் உருவாகும் இலக்கிய நூல்கள் மற்றும் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயனுள்ள நூல்களைப் பொருத்தே அமையும்.

மேலும் ஒரு மொழி வளர்ச்சியடையும் போது அந்த இனமும் வளர்ச்சியடையும். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழியக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

தமிழ் இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தொன்மை ஆகியவை நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அடங்கியிருக்கிறது.

நம் தமிழினத்தை காலச்சூழலிலிருந்தும், அன்னியர் ஆத்திக்கத்திலிருந்தும் காப்பாற்ற கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நமது இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், நம் இனத்தின் இளைய தலைமுறையினருக்கு உணர்த்தி, அவர்களை பிற மொழியின் மேல் ஆர்வம் கொண்டு நம் மொழியை உதாசினப்படுத்துவதையும், தேவையற்ற இடங்களில் கூட, குறிப்பாக சொல்ல வேன்டுமானால் வீட்டில் கூட பிற மொழியைப் பயன் பயன்படுத்தும் அவலத்தையும் தடுக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது.

நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சுரங்கம்.காம் இணையதளம்.

மிகமுக்கியமான தமிழ் இணையதளங்களின் பட்டியலில், முன்னிலையில் உள்ள தளம் இதுவாகும். அதைப் பார்வையிட www.tamilsurangam.in ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

நன்றி  இனிது இணைய இதழ்

தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்


தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான பரப்புகளையும் அடையாளப் படுத்தும் மிகச்சரியான இணையதளமாகத் “தமிழ்ஆதர்ஸ்.காம்” எனும் இணையதளம் அமைந்திருக்கிறது.

தேவையற்ற பகட்டான பக்கங்களைக் கொஞ்சம் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், தேவையான, சிறப்பான சிலவற்றை மட்டும் பெரிய அளவில் பதிவு செய்து இருக்கின்ற அற்புதமான   தளமாக இத்தளம் அமைந்திருக்கிறது.

”தமிழ்ஆதர்ஸ்.காம்” இணையதளம், பக்க வடிவமைப்பிலும் சிறந்த வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. பார்த்தவுடன் பிரமிப்பைத் தருகிற சில இணையதளங்கள் போல அல்லாமல் மிக நேர்த்தியாக, எளிமையும் வளமும் உடையதாக இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இந்த இணையதளத்தின் ஆசிரியராக எழுத்தாளர் அகில் இருக்கின்றார். அவரது பக்கத்தில், சமூகம் சார்பான பல கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது அவரது சமூகச் சிந்தனையைக் காட்டுகிறது. இத்தளத்தை உருவாக்குவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக அப்பகுதி விளக்குகின்றது.

குறிப்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை அவசியமா? மாட்டிறைச்சிக்குத் தடை? சர்வதேச தாய்மொழி தினம், இந்தப் பிரபஞ்சத்தை ஆண்ட பிரபஞ்சன் எனும் கட்டுரைகள் அவரது இலக்கியத் தன்மையை, சமூகப் பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

இந்த இணையதளத்தில், கட்டுரைகள் எனும் பகுதியில் கட்டுரை எழுதிய ஆசிரியரின் பெயரும், கட்டுரையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன.

அனைத்துத்  தலைப்புக்களும் வெவ்வேறு கோணத்தை உடைய, பல்வேறு விதமான உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, ஈழத்தில் நாட்டுக் கூத்துகலை, மன அழுத்தமும் தற்கொலைச் சிந்தனையும், கடல்கோள்களும் சுனாமிகளும் எனும் தலைப்புகள் வெவ்வேறு கோணத்தை நமக்குக் காட்டுகின்றன.

இதுபோல் பல நூறு கட்டுரைகள் இப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த சிந்தனைகளின் தொகுப்பாகவே இவைகள் அமைந்திருக்கின்றன. இவை கருத்துக் கருவூலமாக இருப்பதாகப்படுகிறது.

சிறுகதைகள் எனும் தலைப்பின் கீழ், கட்டுரைகள் பகுதி போல் ஆசிரியர் பெயரும், சிறுகதையின் தலைப்பும் தரப்பட்டுள்ளன. இத்தலைப்பின் கீழ் பலநூறு சிறுகதைகள் காணப்படுகின்றன.

நவீன சிறுகதைகளை உள்ளடக்கியதாகச் சிறுகதைகளின் கருத்தாக்கம் அமைந்துள்ளன என்பதை சிறுகதைகளைப் படிக்கும் பொழுது நாம் உணர்கிறோம்.  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளின் தொகுப்பு இத் தொகுப்பாகும்.

கவிதைகள் எனும் தலைப்பும் இவ்வாறு அமைந்துள்ளது. நவீனம் சார்ந்திருக்கிற கவிஞர்கள் இப்பகுதியில் தமது கவிதைகளைத் தந்திருக்கின்றனர்.

கவிதை குறித்து அறிய விரும்புகிறவர்கள் இக்காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கவிதையின் தரத்தை இப்பகுதியில் கண்டு உணரலாம்.

ஒரு சில தலைப்புகளைக் கொடுத்துக் கவிஞர்களுக்கு எழுதச்சொல்லியும் அதனை வெளியிட்டுள்ளனர். இது, ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு கவிஞர்களின் சிந்தனைப் போக்குகளை அடையாளப்படுத்துகின்றது.

நூல் ஆய்வு எனும் பகுதியில் தமிழில் வெளியிடப்பட்டு இருக்கிற நூல்களின் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகமான நூல் ஆய்வுகளைக் கவிஞர் இரா.இரவி அவர்கள் செய்திருக்கின்றார்.

உலகக் கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாளர்கள் ஆகியவர்களின் நூல்கள் குறித்தான, வாசகர்களின் எண்ணப் போக்கை இங்கு தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒரே இடத்தில் பல நூறு நூல்கள் குறித்தான ஆய்வுகளைக் கண்டறிய முடிகின்றது.

மின் நூலகம் எனும் பகுதி, எழுத்தாளர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாகும். காரணம் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. மின்நூலகம், 104 படைப்பாளர்களின் நூல்கள் அனைத்திலும் கூடுமானவரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது என்பது முக்கியமான ஒன்றாகும்.

நேர்காணல் பகுதியில் 42 தமிழ் எழுத்தாளர்களிடம் சென்று நேர்காணல் செய்து, பதிவிட்டு இருக்கிறார்கள். இத்தளத்தின் ஆசிரியர் அகில் நிறைய தமிழ் இலக்கிய ஆளுமைகள் உடன் நேர்காணல் செய்து இருக்கிறார்.

மருத்துவம் என்னும் பகுதியில், மருத்துவக் கட்டுரைகள் பலநூறு இடம்பெற்றுள்ளன. மருத்துவம் சார்பான அனைத்துச் செய்திகளையும் தருவதற்கு இப்பகுதி முயற்சி செய்கிறது எனலாம்.

இலங்கையின் எழுத்தாளர் கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் அதிகமான மருத்துவக் கட்டுரைகளை இப்பகுதியில் எழுதியுள்ளார்.

சினிமா எனும் பகுதியில் தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் மொழி மாற்றத் திரைப்படங்கள் ஆகியவைகள் குறித்தான விமர்சனங்கள், திறனாய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கவிஞர் இரா.இரவி, ஞா.ஆரணி, வித்யாசாகர் ஆகிய எழுத்தாளர்கள் அதிகமான திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். விரிவான திரைப்படத் திறனாய்வான இப்பகுதி திரைப்பட ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

பலதும் பத்தும் எனும் பகுதியில் உலகில் காணலாகும் இலக்கிய நிகழ்வுகள் அல்லது சமூக நடத்தைகள் குறித்தான விளக்கங்களாக அல்லது விமர்சனங்களாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்துக் கட்டுரைகளும் மிக ஆழமான செய்திகளைச் சரியான நோக்கத்துடன் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி எடுத்துக் கூறுகின்றன. கட்சி, ஜாதி, மதம் எனும் எந்தவிதமான பாகுபாடுகளையும் காட்டாமல் விமர்சனங்கள் தரப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.

குறும்படம் எனும் பகுதியில், தமிழில் தற்பொழுது எடுக்கப்பட்டிருக்கின்ற தரமிக்கதான குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். குறும்படங்கள் குறித்து காண விரும்பும் வாசகர் பல்வேறு சேனல்களில் காணப்படும் தரமற்ற குறும்படங்களைக் கண்டு ஏமாற வேண்டியுள்ளது.

ஆனால் இத்தளத்தில் காணப்படும் அனைத்துக் குறும்படங்களும், அது குறித்த தகவல்களும் தமிழ்க் குறும்படத்தின் மேன்மையை கருத்தில் கொண்டவைகளாக அமைந்திருக்கின்றன.

குறிப்பாக, 2020-இல் வெளிவந்த குறும்படத்தில் ஒன்று. கம்பளிப்பூச்சி எனும் குறும்படம் குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் பள்ளி ஆசிரியர்களின் தவறான தொடுதல்களினால் மனம் வேதனைப் படும் நிலையை நேர்த்தியாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர்களின் தவறான நடத்தைகள், குழந்தைகளின் மனதில் எதிர்கால வாழ்வையே சூறையாடி விடுகிறது என்பதை குறும்படம் வெளிப்படுத்துகிறது.

இலக்கியத் தகவல்கள் எனும் பகுதியில் உலக அளவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன.

எழுத்தாளர்கள் எனும் பகுதியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலும், அவர்கள் தம் நூல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பு மிகச்சிறந்த தொகுப்பாகக் காணப்படுகின்றது.

இந்தியாவில் காணப்படும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலை ஒரே இடத்தில் காண வேண்டுமானால் இத்தளத்தில் காணலாம்.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு தொகுப்பாகச் சிற்றிதழ்கள் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சிற்றிதழ்களின் முகவரி, அவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆசிரியர் பெயரும் தரப்பட்டுள்ளன.

காணொளிக் காட்சிகளின் தொகுப்புகள் இங்கு ஒளிப்பேழை எனும் பகுதியில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பல அற்புதமான காணொளிகள் இங்கு காட்சிக்கு உள்ளன.

இவ்வாறாகப் படைப்புகள், படைப்புகள் சார்ந்த எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் பேட்டி, இலக்கியம் குறித்தான காணொளிகள், சமூகம் சார்பான பல கட்டுரைகள் என ஒரு ஜனரஞ்சகமான மற்றும் இலக்கிய மேம்பாட்டைக் கருதுகோளாகக் கொண்ட இணையதளமாக “தமிழ்ஆதர்ஸ்.காம்” அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அதைப் பார்வையிட www.tamilauthors.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)


பாரதிசந்திரன்
நன்றி ; இனிது இணைய இதழ்

பிடிஎஃப் ட்ரைவ்.காம்

பிடிஎஃப் ட்ரைவ்.காம்



பிடிஎஃப் ட்ரைவ்.காம் (pdfdrive.com) பாதுகாக்கப்பட்டப் பன்னூல் நூலகம்.

அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில், பல கோடி நூல்களோடு காத்துக் கொண்டிருக்கிறது.

சில நூறு நூல்களைக்கூட வைப்பதற்கு இல்லங்களில் தற்காலத்தில் இடவசதியும், அதைப் படிக்கும் கால நேரங்களும் இல்லாத நிலையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இச்சமயத்தில், இதுபோன்ற தளங்கள் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விதமான, அனைத்து மொழிகளிலும் காணப்படும் இவ்வகை நூல்கள் நமது அறிவையும் சிந்தனைகளையும் தேவை களையும் நிறைவு செய்யும் படியாக இருக்கின்றன.

இலக்கியம் எனும் பகுதியில், உள்நுழைந்தால், அங்கு இன்னும் நிறைய துணைத் தலைப்புகளோடு பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் சொடுக்கினால் அந்தந்தப் பகுதிக்கான நூல்கள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டு காணப்படுகின்றன.

தலைப்பைத் தெரிந்து கொண்டு மிக எளிதாக உள்நுழைந்து அந்த நூல்களை நாம் பெற்றுவிடலாம். இது ஒரு மிகச்சிறந்த எளிய வழியாகும்.

பல மில்லியன் நூல்களில் நாம் தேடுகிற நூலைத் தேடுபொறியில் பதிவிட்டும் பெறலாம். இந்த இணையதளத்திற்குள் செல்வதற்கு நாம் ”உள்நுழைக” பகுதியில் நமது தகவல்களை அளித்து நமக்கென்று ஒரு கணக்கை வைத்துக் கொள்ளலாம்.

மிகப் பயனுள்ள இணையதளம் இவை என இத்தளத்தைக் கூறலாம். ஒவ்வொரு பெரும் பகுதியிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் பிடிஎஃப் வடிவில் காணக் கிடைக்கின்றன‌.

அதை நாம் நமது கணினியில் அல்லது தொலைபேசியிலோ பதிவிறக்கம் செய்து எப்போது ஓய்வு கிடைக்கிறதோ அப்போது படித்துக் கொள்ளலாம். இது இக்காலத்தின் தேவையாக இருக்கிறது.

இத்தளத்திலுள்ள பெரும்தலைப்புகள் 

ஆசிரியர் தேர்வுகள்

மிகவும் பிரபலமானவை

கல்வி

கலை

வாழ்க்கை வரலாறு

வணிகம் மற்றும் தொழில்

குழந்தைகள் மற்றும் இளைஞர்

சுற்றுச்சூழல்

புனைகதை மற்றும் இலக்கியம்

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

வாழ்க்கை முறை

தனிப்பட்ட வளர்ச்சி

அரசியல் & சட்டங்கள்

மதம்

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி

தொழில்நுட்பம்

போன்ற தலைப்பின் கீழ், பல மில்லியன் புத்தகங்கள் இங்குள்ளன.

அவை, நமக்கு எதாவது ஒரு சமயத்தில் தேவைப்படும் நூலாகவும் இருக்கலாம்.
இது போன்ற அறிவுக்களஞ்சியங்கள் பணச்செலவின்றி உதவுமானால் நமது அறிவினை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம்.

இந்தத் தளம் குறித்து, விளக்கத்தினை அவர்கள் மொழியில் நாம் பெறும் போது, ”PDF டிரைவ் என்பது ஒரு இலவச தேடுபொறி, இது உங்கள் சாதனங்களில் மில்லியன் கணக்கான PDF கோப்புகளைத் தேட, முன்னோட்டமிட மற்றும் பதிவிறக்க அனுமதிக்கிறது.

எங்கள் தரவுத்தளத்தில் PDF கோப்புகளைச் சேர்க்க எங்கள் வலைவலங்கள் தொடர்ந்து உலகளாவிய வலையை ஸ்கேன் செய்கின்றன.

PDF கோப்புகள் வலையிலிருந்து திரும்பப் பெறப்பட்டால், அவை உடனடியாக PDF இயக்கக தேடல் முடிவுகளிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.

இந்த வழியில், எங்கள் PDF டிரைவ் நூலகம் புதுப்பித்த நிலையில் உள்ளது, அதே நேரத்தில் தொடர்ந்து வளர்ந்து, தேட ஒரு மகத்தான தரவுத்தளத்தை உங்களுக்கு வழங்குகிறது.

பாரம்பரிய தேடுபொறிகளுக்கு கூடுதலாக, PDF இயக்ககத்தில் இந்தக் கூடுதல் அம்சங்கள் உள்ளன:

முன்னோட்டங்கள் எல்லா கோப்புகளிலும் கவர் புகைப்படங்கள் உள்ளன, இது நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

மேம்பட்ட வடிகட்டுதல் PDF கோப்புகளை அவற்றின் பக்க எண், வெளியீட்டு தேதி, கோப்பு அளவு மற்றும் / அல்லது புகழ் மூலம் வடிகட்டி வரிசைப்படுத்தலாம்.

வேகமாக PDF கோப்புகளைத் தேட மில்லி விநாடிகள் மட்டுமே ஆகும்.

புதுப்பித்த நிலையில் உள்ளது PDF இயக்ககத்தின் காப்பகம் தொடர்ந்து மற்றும் திறமையாக புதுப்பிக்கப்படும் போது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

ஒத்திசைக்கப்பட்டது எந்தவொரு கோப்பின் அதே PDF பதிப்பையும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்பு கொண்ட மொபைல் சாதனங்களிலிருந்து அணுகலாம்.

உங்கள் ஆர்வங்கள் மற்றும் சமீபத்திய தேடல்களின் அடிப்படையில் PDF டிரைவ் பரிந்துரைகளை வழங்குகிறது.” என்பதாக அறியலாம்.

கணினி மயமான காலத்தின் கொடையாக, pdfdrive.com நமது தேவைகளை மிக எளிதாகப் பூர்த்தி செய்கிறது.

(இணையம் அறிவோமா?  தொடரும்)



பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ் 

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

 

தமிழ்ச்சரம் – இணையதளத் திரட்டி

பல வண்ண மலர்களைத் தொடுத்துக் கட்டும் மாலையைச் சரம் என்று கூறுவர். கண்களுக்கு விருந்தையும், நுகர்வதற்குப் பலவித மனத்தையும் தருவது ’சரம்’ ஆகும்.

மலரைச் சுற்றும் வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிடும். அது காதுகளுக்கு ஓசையோடு இனிமை தரும். மலர் ஸ்பரிசத்தில் சுகமானது. ஆக, நம் புலன்களில் நான்கினுக்கும் சரம் தீனி போடுகிறது.

தமிழ்மொழி இணையதளங்கள், இன்று தமிழ்மொழியை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாகும். அவை காலத்தின் அதீத வளர்ச்சியால் விளைந்தவை.

அத்தகு இணையதளங்களில் நாள்தோறும் நாள்தோறும் கணக்கிலடங்கா படைப்புகள் எழுதப்பட்டும், பகிரப்பட்டும் பேசப்படுகின்றன. அவற்றைத் தேடித் தேடிப் படிப்பது என்பது இயலாத காரியம். வானத்து நட்சத்திரங்களைத் தேடிப்பிடித்து ரசிப்பது போன்றது அதுவாகும்.

தனக்குத் தெரிந்த இணையதளப் படைப்புகளோடு வாசகன் நின்றுவிட்டால், கிணற்றுத் தவளை ஆகிவிடுகிறான் அவன். வான் நோக்கிப் பறந்து பால்வீதி முழுவதும் காணலாகும் அற்புதங்களை ரசிக்க வேண்டும்; உணர வேண்டும்; அறிய வேண்டும். அப்பொழுது தான் வாழ்வு ஓரளவாவது முழுமை பெறும்.

அவ்வகையில், இணையதளங்களைப் பார்க்கும் போதும் இதே நிலைதான். பால்வீதி போன்றவை இணையதளங்கள். அவற்றைத் தேடிப் பிடித்து அனைத்தையும் படிப்பது கடல் மணலை எண்ணுவதற்குச் சமமாகும்.

இதுபோன்ற நிலையில், பல இணையதளங்களில் பகிரப்படும் முக்கியமானவைகளை, ஒரே இடத்தில் திரட்டித் தந்தால் வாசகனுக்கு எப்படி இருக்கும் எனும் நோக்கில், இணையதள வாசிப்பில் இன்னொரு மைல்கல்லாக வந்தது தான் ”திரட்டி” எனும் மென்பொருளாகும்.

இவ்வகை மென்பொருளில் தமிழ் இன்னொரு படிநிலையை அடைந்தது. இவ்வகை திரட்டிகளின் பணி அளப்பரியது மற்றும் சிறப்பானது ஆகும்.

தனக்குத் தேவையான செய்தியை மட்டும் கண்டு, பிறவற்றை படிக்காமல் விட்டால் மட்டுமே ஒரு எல்லையை வாசகன் இக்காலகட்டத்தில் தொட முடியும். காரணம் படைப்புப் பெருக்கம் இன்று காணப்படுகிறது. அவை அனைத்தையும் ஒரு வாசகனால் கண்டு தெளிந்து உணர்ந்து விட முடியாது.

தேவையற்றவைகளைக் காண்பது நேர விரயமும் தன் வளர்ச்சிக்குப் பாதிப்பும் ஆகும். எனவே அதற்கு உதவும் வகையில் இவ்வகைத் திரட்டிகள் பெரும் பங்கினைச் செய்கின்றன.

இணையத்தில் இது போன்ற திரட்டிகள் பல காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற திரட்டி தான் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டி ஆகும்.

ஆரூர் பாஸ்கர் மற்றும் நீச்சல்காரன் ஆகியோரின் பெருமுயற்சியால் இத்திரட்டி செயல்படுகின்றது. இருவரும் தமிழில் மென்பொருள்கள் பலவற்றைக் கண்டுபிடித்துத் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள்; செய்து கொண்டிருப்பவர்கள்.

இத்திரட்டியில் பொது, திரைப்படம், அரசியல், ஆன்மீகம், வீட்டுக்குறிப்பு, வணிகம், புத்தகம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், காணொளி எனும் தலைப்புகளில் தினந்தோறும் பல்வேறு வலைத்தளங்களில் வெளியிடும் படைப்புகளின் சரம் இனம் காட்டப்பெறுகின்றன.

”ஆன்மீகம்’ எனும் பகுதியைச் சொடுக்கினால் ஆன்மீகம் சார்பாக வெளிவந்த பல்வேறு படைப்புகள் காண்பிக்கப்பெறும். அவற்றைச் சொடுக்கினால், அதன் இணையதளம் மற்றொரு பக்கத்தில் திறக்கும். அக்கட்டுரையை அங்கு படிக்கலாம்.

இவ்வாறு தேவையானதை மட்டும் தேர்வு செய்து நாம் படிப்பதற்கு இது மிகப் பெரும் பயனாக இருக்கும். அனைத்து வலைத்தளங்களையும் திறந்து திறந்து தேடிப்பிடித்து பார்க்கும் நேர விரயத்தை இவ்வகைத் திரட்டிகள் தடுக்கின்றன.


வாசகன் சில நேரம், சில இணையதளங்களைப் பார்வையிடாமல் விட்டு விடலாம். அங்கு வெளியிடப்பட்ட படைப்பைத் தவறவிட வாய்ப்பு நிறைய இருக்கின்றது.

ஆனால், இது போன்ற திரட்டிகளில் வாசிக்கப் பழகினால், அனைத்து வலைத்தளங்களையும் சென்று பார்த்து வந்த திருப்தி அனைவருக்கும் ஏற்பட்டுவிடும்.

தேவையற்ற செய்தியாக, படைப்பாக இருந்தால் அதைப் பார்க்காமலும் அந்த இணையதளத்திற்குச் செல்லாமலும் விட்டுவிடலாம். திரட்டியின் முன்பகுதியில், ”தேடுதல்” பகுதியும் உள்ளது.

தேவையான சொல் அல்லது விபரத்தைப் பதிவு செய்து தேடினால், அவ்விவரம் இருக்கும் இணையதளப் பக்கங்களைக் கொண்டு வந்து குவித்து விடும்.
இவ்வாறான உடனுக்குடனான படைப்பு வரலாற்றினை இன்னும் எளிமையாகத் தேட, இன்று, இந்த வாரம், கடந்த வாரம், முன்னணி எனும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைச் சொடுக்கினால் அந்த அந்தக் காலத்தில் வெளிவந்த படைப்புகளைத் திரட்டிப் பெறலாம்.

பல்வேறு வலைத்தளங்களை உள்ளீடு செய்ய ”இணைக்க” எனும் பகுதியும் உள்ளது. இதன் மூலம் வலைத்தள நிர்வாகிகள் இப்பகுதியில் அவர்களின் வலைத்தளங்களை உள்ளீடு செய்து கொள்ளலாம்.

தமிழ் மாலைகளில் இந்தப் பல்மலர் திரட்டியான ”தமிழ்ச்சரம்” மணம் வீசும் சரமாகும்.

வலைத்தள மேன்மையின் மற்றுமொரு சாதனையாகத் ”தமிழ்ச்சரம்” எனும் திரட்டியை க்கூறலாம். அத்திரட்டியைக்காண https://tamilcharam.com/faq/faq.html சொடுக்கவும்

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்


நன்றி : https://www.inidhu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/

கடவுளின் கண்ணில் ரத்தம் தெரிகிறது







”கண்ணில் தெரியும் கடவுள்” நூலைச் சமீபவத்தில் நண்பர் மு.தனஞ்செழியன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஹைக்கூக்களின் கவிதைத் தொகுப்பு அது. கொஞ்ச நேரத்தில் படித்து விடலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். நூலை வைக்க முடியவில்லை.ஆழமும், அகலமுமான பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது நூல். சமகாலப் பிரச்சனைகள் மனதை வாட்டியது. மீள முடியாத வேதனையில் என் மனப் போராட்டங்கள் நீண்டு கொண்டிருந்தன. இது போதாதா, என் எழுது கோல்களுக்கு. கண்ணில் தெரிந்த கடவுளைத் தடவித் தடவி வார்த்தைகள் ஆக்கினேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறம் கிளையின் வெளியீடாக வந்திருக்கும் ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு இது.
கொரோனாக் கால நெருக்கடியில் பிறந்த கவிதைகள் இவை. மனதை நெருடுகிற காட்சிகளின் படிமங்கள் இவை. ரத்தம் உறைய வைக்கிற வார்த்தைகளின் வெளிப்பாடுகள் இவை.சீக்கு வந்த கோழிக் குஞ்சுகளின் கண்மூடிய தூக்கம் அல்ல இவை.

 தன் குஞ்சை தூக்க வருகிற கருடனை சிறகு விரித்து குரல் தெறிக்க கத்தி ஓட ஓட விரட்டுகிற தாய்க் கோழியின் பரவசம் இவை.இந்நூலிலுள்ள, கவிதையைப் படித்தால் சுளீர் என்று ஓரிடத்தில் சுடுகிறது.. எங்கிருந்தோ வந்து கண்ணில் விழுந்த தூசி போல் நெருடுகிறது..எவ்விதப் பாதிப்பையும் படிப்பவர் மனதில் ஒரு கவிதை ஏற்படுத்தவில்லை என்றால், அக்கவிதை தோற்றுப் போய் விடுகிறது. உள்ளே புகுந்து வெவ்வேறு தூண்டுதல்களை ஏற்படுத்தி அகலாது நிலைத்து நிற்குமானால் அக்கவிதை ஜெயித்து விடுகிறது. அதுவே உன்னதமான கவிதை ஆகிறது. காலம் கடந்தும் நிலைக்கிறது. அவ்வகையில், இந்நூல் கவிதைகளில் பல, பல்வேறு உரசல்களை மனதிற்குள் உண்டாக்கி உயர்ந்து நிற்கின்றன. ”உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூ'விற்கு யாரையும் மயக்கக் கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய 3 அடி வடிவம், அழகான படிமங்களால், அழகான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்.அதன் தத்துவப் பார்வை, சுண்டக் காய்ச்சிய அதன் இறுகிய மொழி நடை எல்லாவற்றையும் விட அதன் எளிமை, இவையெல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்” என்று ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் நிகழ்த்தும் தன்மையைத் திருமதி லீலாவதி அழகாகக் கூறுவார்.எழுபத்தைந்து (75) கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி இந்நூல் இக்காலகட்டத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. நடப்பியலின் எதார்த்தத்தைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டாமல் அப்படியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.சமுதாயத்தின் மேல் பயம் இல்லை. வீரமோடு தம்தம் கருத்தினை விளக்கி விளாசித் தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு தீப்பந்தம் இருக்கிறது. உலகைக் கூட, அது சுட்டெரித்து விடும் தன்மையது. இன்று நடந்து கொண்டிருக்கும் அரசியலின் இழிநிலையைப் பா.செந்தில் தமது கவிதையில் கூறும்பொழுது,காசு வாங்காமல்வாக்களித்தேன்…விரலில் கறை.என்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு அளிக்கும் முறை, அரசியல்வாதிகளின் நாடகங்கள், ஓட்டு வாங்கியமைக்குப் பிறகு மக்கள் ஏமாற்றப்படல் என இருக்கும் இந்நிலை உண்மையான ஜனநாயகவாதிக்கு ஏமாற்றமே அளிக்கிறது. எனவே, என் கைகளில் மை வைத்தது கறையாக இருக்கிறது என்று கவிஞர் வருத்தப்படுகிறார்.காவல்துறையில் நடக்கும் சில அக்கிரமங்கள், சாதாரண மனிதனை நிலைகுலைய வைக்கிறது. தூத்துக்குடியில் தற்போது நடந்த தந்தை, மகன் கொலை வழக்கு, காவல்துறை மீதான கேள்விக் கணைகளைத் தொடுக்கப் பலருக்குக் காரணமாய் அமைந்தது. அதைக் கவிதையாகத் தருவதற்கு முயற்சி செய்து கூறும்பொழுது,ஆணவ வெறியர்கள்.ரத்த லத்தியில் எழுதவில்லை…காவல்துறை உங்கள் நண்பன்.
எனக் கவிதா பிருந்தா கூறுகிறார்.
தமிழகத்தை உலுக்கிய மாபாதகச் செயல் அல்லவா அது? கவிஞர் எதற்கும் பயமில்லாது தமது கருத்தை தமது கவிதையில் பதிவு செய்துள்ளார். இது, தமிழக வரலாற்றில், கவிதை வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகி இருக்கிறது. ஒரு நிகழ்வும், அது பார்வையாளன் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுவும், ஒரு சேர நிகழ்வையும் ஏற்படுத்திய சலனத்தையும் படமாக்கி தந்திருக்கிறது. இதேபோல் இன்னொரு கவிதையில், காவல்துறையின் மாண்பைக் கவிஞர் மு தனஞ்செழியன் கூறும்பொழுது,காவலரைக் கடித்தகொசுவும்...அடிபட்டே செத்ததுஎன்கின்றார் காவலரைக் கடித்த சிறு உயிரினம் கொசு. அதுகூட கடித்துவிட்டு சும்மா போய் விட முடியாது. கொசு தானே என்று கூட காவலர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்ற எண்ணத்தைக் கவிஞர் தம் கவிதையில் பதிவு செய்துள்ளார்.மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணம் ஒன்றையே கருதுகோளாகக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளிடம் பரிவோடு நடந்து கொள்வதில்லை. மருத்துவரும், மருத்துவ வசதிகளும், பணம் இருப்பவர்களுக்கே எனும் எண்ணம் பொதுவாக இன்று பொதுவெளியில் அனைவராலும் பேசப்படுகின்றன. அதனை, இனிப்பு மருந்து தான்.கசக்க வைக்கிறது…மருந்தின் விலை.      (ந ஜெகதீசன்)மருந்துக் கம்பெனிகளால்சாகா வரம் பெற்றன…நோய்கள்.                    (பூ முருகவேள்)
நடந்து சென்றவர்நடைப்பிணமாய் திரும்பினார்தீவிர சிகிச்சை.             ( பா கெஜலட்சுமி)இன்னும் இதுபோன்ற கவிதைகள் சமதளமற்ற நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. உயிரை நேசிக்க வேண்டிய மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக மாறிக் கொண்டிருக்கிறது என்ற வேதனை கவிஞர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதுவே படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.சாதீயத் தீண்டாமை குறித்த ஹைக்கூக் கவிதைகள் அதிகம் காணப் படுகின்றன. அறிவியலில்..சமூகம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், ஜாதியின் கொடூர நாக்குகள் இன்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டு தானிருக்கின்றன.நவீன கவிதைப்புரட்சியில் புதுக்கவிதைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்கவிதைப் புரட்சியில், அதன் பாடுபொருளான சமூகக் குறைகளும் ஒரு முக்கியக் கருதுகோளை அமைந்திருக்கின்றன என்பதை அறிகிறோம். கவிஞர் மு.தனஞ்செழியனின் ஒரு கவிதை சாதீயத்தீண்டாமையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறன அவ்வாறான ஒரு கவிதை,
 இறந்த சடலங்களிலும்ஜாதி பார்க்கின்றனமனித பிணங்கள்.என்பதாகும். மனிதன் பிணமாக அர்த்தமற்ற வெற்று வாழ்க்கை வாழ்கின்றான் என விரக்தியாய் சாடுகின்றார்.இத்தொகுப்பில், கொரோனாத் தொற்றுநோய் ஊரடங்கின் போது, பாதிக்கப் பட்ட வாழ்வாதாரங்கள் குறித்த அவலங்களை, பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த சிறு, சிறு தொழில்கள் செய்தவர்களின் மன வேதனையை அதிகமாகக் கவிதையாக்கித் தந்துள்ளனர்.பசி, வறுமை, இயலாமை, இழப்பு, சமூக அவலங்கள், அரசியல் பித்தலாட்டம், மருத்துவமனை அநீதிகள், அழகியல் எனக் காட்சிகள் விரிய கருத்தாக்க வெளிப்பாடுகள் கவிஞர்களின் கைகளில் வெளிப்பட்டுள்ளன.கவிதைத் தொகுப்பில், மிகத் தரமான கவிதைகளை மட்டுமே தேர்வு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். மு.தனஞ்செழியன் எனும் கவிஞர் 15 கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த பொருளாளுமை மிக்க கவிதைகளாக அவைகள் விளங்குகின்றன. குறிப்பாக,கட்டில் கால்கள்இழுத்துப் போயின வங்கிக்கு…முதியோர் உதவித் தொகைக்காக.
என்னும் கவிதையைக் கூறலாம்.இன்னும் வாகன வசதியும், மருத்துவ வசதியும், குடிநீர் வசதியும், கல்வி வசதியும் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் எத்தனை? எத்தனை?பசியால் உயிரிழந்த தாய், அதுகூடத் தெரியாமல் பிஞ்சுக் குழந்தை தாயிடம் விளையாடிக் கொண்டு இருந்த காட்சிகளைத் தினசரியில் பார்த்த பொழுது, இரத்தக்கண்ணீர் வடித்தார்கள் மக்கள். இந்தச் சோகமான காட்சியை, அசையாத அம்மாவின் இமைகளைவிளையாட்டாய் மூடின.பிஞ்சு விரல்கள்.என்கிறார் கவிஞர் மு தனஞ்செழியன். அரசியல் இன்று எவ்வளவு மலிந்து செய்யப்படுகிறது கட்சிகளால் என்பதைக் கண்டு வெறுக்கும் கவிதைகள் காணப்படுகின்றன. அதேபோல, கவிஞர் மு தனஞ்செழியன் கூறும் பொழுது,பொதுக்கூட்டம் முடிவதற்கு உள்ளேயேமுடிந்து போய்விட்டதுபிரியாணிஎன்கின்றார். பிரியாணியைக் காட்டிக் கூட்டம் கூட்டும் அரசியல்வாதிகளின் தன்மை, பிரியாணிக்காக அலையும் மக்கள். யாரைத் திருத்துவது? கவிஞரின் கோபம் கவிதையில் வெளிப்படுகிறது.போர்க்களக் காட்சியைப் பாடுவதைச் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் ”புறத்திணைப் பாடல்கள்” எனும் வகையில் அதிகம் காண்கின்றோம். சிற்றிலக்கியங்களில் பரணி பாடுதல் எனும் வகையில் நிறைய இலக்கியங்கள் பாடியுள்ளமையை அறிகிறோம்தற்காலத்தில் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் நடக்கும் பல்வேறு விதமான சமூகப் போர்களைப் பதிவு செய்வது போல இந்நூல் காணப்படுகிறது.அழகியல் கவிதைகள் குறைவாகவும், சமூகப் பிரச்சனைகள் பெரும் பான்மையாகவும் கவிஞர்களின் படைப்பில் வெளிப்பட்டுள்ளன.குறிப்பாய், கவிதைகள் காலத்தின் தெறிப்புகள். கண்ணில் தெரியும் கடவுள் பசித்த பொழுது உணவு தந்தவன் என்றாலும், இங்கு சமூகத்தில் நடப்பவை கண்டு, கடவுள் நிசமாகவே இரத்தக் கண்ணீர் வடிப்பார்.- பாரதிசந்திரன்
நன்றி : கீற்று இணைய இதழ்

செல்ஃபிபுள்ள” கவிதைநூல் விமர்சனம்என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்

என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்  (செல்ஃபிபுள்ள” கவிதைநூல் விமர்சனம்)

              “மூளைக்குள் விஷம் வைத்து

              முகத்தில் அதை மறைத்து வைத்து

              எப்போதும் என்னைச் சுற்றி - மிருகங்கள்

              இனம் கண்டு எழுந்து கொள்ளும்

              என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்

              நீதி வேண்டும் - என்னுள்

              நிரந்தரமாய் மிருகம் வேண்டும்”

ஒரு கவிஞனைச் சமூகம் சில நேரங்களில் மிருகமாக்குகிறது. மனிதனாக வாழவிடாது, ஆதிகால காட்டுமிராண்டித்தனத்தை உசிப்பேற்றி விடுகிறது. அந்த அவதாரம், பிறரைப் பயமுறுத்துகிறது. அவ்வாறு இருக்க, கவிஞனாகிய நான் விரும்பவில்லை. ஆனால் சமூகம் மாற வேண்டுமானால் கவிஞனாகிய நான் மிருகமாக ஆக வேண்டும்.

கவிஞர் க.வீரமணியின் “செல்ஃபிபுள்ள” கவிதைகள், படைப்பின் தன்மையில் அனுபவத்தை வெளிப்படுத்தும் பதிவுகளாகும். படைப்பு எவ்விதம் உருவாகிறது என்பதைக் கவிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன.


 
படைப்பில் “முழுமை” இரு வகைகளில் சாத்தியமாகிறது. ஒன்று அனுபவத்தை கூறுகளாகக் கண்டு, அக்கூறுகளில் ஒன்றில் சாராம்சத்தை, முழுமையை, குறிப்பால் உணர்த்துவதாக மாற்றுவது. இதையே கவிதைகள். காவியங்கள் நக்கலாகச் செய்கின்றன.

சிறுகதைகளில் தளமும் இதுவே. இன்னொன்று, அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுகள் தான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்கள் நிறுவுகின்றன என்பார் எழுத்தாளர் ஜெயமோகன்.


 
அனுபவம் அதிகமாக அதிகமாக பக்குவமாகிப் படித்த வாழ்க்கைப் போக்கை ஏதோவொரு வகையில், பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள எத்தனிப்பது உலக இயல்பு. அதுவே, மாபெரும் இலக்கியப் பதிவுகளாக இதுகாறும் கண்டிருக்கின்றோம். ஆதிகால இலக்கியம் முதல் இன்று வரை இதுவே நிகழ்கின்றது. உலகின் அனைத்து நிகழ்வுகளும், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கின்றன.

இன்றைய சமூகம், கொஞ்சமும் எதிர்பார்க்காத, சகிக்க முடியாத அனுபவங்களைத் தருகின்றவைகளாகவே கூடுமானவரை மாறிப் போய் இருக்கிறன. லஞ்சம், வாவண்யம், குடி, பொய், பித்தலாட்டம், களவு, கற்பழிப்பு, சாதிய ஏற்றதாழ்வு, மதக்காழ்ப்பு இவற்றைக் கண்டு முகச் சுழிப்போடு இதோடு பயணம் செய்கிறவர்களாக அதிகப் பேர் இருக்கின்றனர்.


 
அவ்வகையில், தம் வாழ்வில் அடைந்த சமூகச் சிக்கல்களை மனக் குமுறலாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். க.வீரமணி அவர்கள். அதற்கான வடிவமாக அவர் கவிதையை எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் நக்கல் நிறைந்த கவிதைகளாக…

‘செல்ஃபிபுள்ள’ எனும் கவிதைத் தொகுப்பு தற்பொழுது அவரின் முதல் கவிதை நூலாக வெளி வந்திருக்கிறது. சமூகச் சாடல்கள் காரசாரமாகப் பரிமாறப் பெற்றுள்ளன. கொஞ்சம் கூடப் பாராபட்சம் இல்லாமல் தவறுகளை இனம் காட்டி, வெறுப்புக்களையும், கடும் கோபத்தினையும் பதிவு செய்துள்ளார்.

மிகக் குறைந்த அளவில், மனம் சார்ந்த உள்வெளி வெளிப்பாடுகளையும், காதல் உணர்வுகளையும் கூறும் ஆசிரியர், பெரும்பான்மையாக, மக்களின் இயலாமை, கொடுமைகள், மனச்சோர்வு, திண்டாட்டம், வயிற்றெரிச்சல், பிரச்சனைகள் இதனை அப்படியே அனல் தெறிக்கும் வார்த்தைகளால் வெளிப்படுத்தித் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டுள்ளார்.

இராணுவ வீரர்கள் மனம் நேர்மைக்குப் பழக்கப்படடிருக்கும். அவர்களின் சிந்தனைகள் நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், சுயமரியாதையையும், நாட்டு நலனையும் காக்கக் கூடியதாகவே அமைந்திருக்கும். ஆனால், இன்றிருக்கும் நடைமுறைச் சீரழிவுகள் அவர்களின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன.


 
நாம் சந்திக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மக்களோடு ஒத்துப் போவதில் சிரமப்படுகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கான காரணம் அவர்கள் எதிர்பாக்கும் உலகம் மிக நேர்மையானதும், உண்மையானதும் ஆகும். கவிஞர் க.வீரமணி அவர்களும் முன்னாள் இராணுவ வீரர் என்பதால், இச்சமூகச் சீர்கேடுகள் அவரது உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கின்றன என்பதை அவர்தம் கவிதைகள் மூலமாகவே அறிய முடிகின்றது. ‘தன்னிறைவு’ எனும் கவிதையில், தேசம் எவ்வாறு பிரித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை,

              “அரசியல் வாதிகளுக்கு - ஊழல்

              அரசு அதிகாரிகளுக்கு - லஞ்சம்

              ரவுடிகளுக்கு - கொலை

              ஆண்களுக்கு - கற்பழிப்பு

              பெண்களுக்கு-  பேதைமை

              பிரித்து வைத்திருக்கின்றோம் - இப்படி

              தவறுகளை - தனித்தனியே

              தவறுகளில் – தன்னிறைவு - என்தேசம்”

என்கின்றார். காவல் நிலையமும், சிறைச்சாலையும் எவ்வாறு இருக்கும் என்பதை நம் மனம் ஆண்டாண்டு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறது. நீதியைக் காக்கும் தூய்மையான இடம் காவல் நிலையமாகவும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கும் இடம் சிறைச்சாலையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றோ,

              “கைதிகளுக்கு

              நாள் தவறாமல்

              யோகா. மூச்சுப் பயிற்சி,

              எழுத்து, ஓவியம், கவினை, மேல்படிப்பு….

              காவலர் முகாமில் - எப்போதும்

              கோழிக்கறி - விஸ்கி

              நீலப்படம் - பீடி - சிகரெட்

              சீட்டுக்கட்டு - பெண்சிட்டு”

என இவ்வாறு இருக்கின்றன என்பதை மனம் நொந்துபோய் பதிவு செய்திருக்கின்றார்.

‘தமிழன் என்று சொல்லுவோம்’ எனும் தலைப்பிலான கவிதை நமது இருப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கேவலமான வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்ந்து கொண்டு, அதைப் பெருமையாகப் பிதற்றிக் கொண்டு வாழ்வதைச் சாடுகின்றார். இதுவல்ல வாழ்க்கை இது நரகவாழ்க்கை என விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.


 
தமிழினம் எத்தகைய மாட்சிமைகளைக் கொண்டது. ஆனால் இன்று கீழ்மையான வாழ்க்கை முறைகளால் பெருமைகள் இழந்து நிற்கின்றன என்பதாக அவரது குரல் இருக்கின்றது. இதே போல், விவசாயின் நிலை கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கும் கவிதையாக ‘செல்ஃபிபுள்ள’ கவிதை இருக்கிறது.

‘அதிதி தேவோ பவ’ கவிதை, சுற்றுப்புறச் சூழலில். இந்தியா எவ்வளவு மோசமான நிலையை அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது. இதனால் அன்னியச் செலவாணி குறையும் என்பதோடு. எதிர்காலச் சமூகம். தம் வாழ்வாதாரத்தை இழந்து வாழ்க்கைச் சிக்கலில் கிடந்து சாகும் என்பதை நக்கலாகக் கூறுகிற பொழுது,

              “சுற்றுலா வாசிகளே

              இந்தியா உங்களை

              இனிதே வரவேற்கிறது

              ஆனால்.

              மூக்கைப் பிடித்துக் கொண்டு வரவும்”

என்கின்றார். நாட்டின் மேன்மை வளமாக வேண்டும் என்றால், சுற்றுப்புற சூழலில் மிகுந்த கவனத்தை மக்கள் காட்ட வேண்டும் என்பது இவரது அறிவுரையாக உள்ளது.

ஆண், பெண் இருவரும் இன்று வேலைக்குச் செல்வது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கியமாகிறது. அவ்வாறு நகரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையை ‘மல்லிகைப் பூ’ கவிதை குறும் படமாக்கிக் காட்டுகிறது. அவளுக்கு சமூகம் தரும் இன்னல்களைப் பட்டியல் போடுகிறது.


 
ஓவ்வொரு நாளையும் கடத்துவதற்கு அவள் படும்பாடு, அவளுக்கு நேரும் இன்னல்கள் அதனால் அவள் அடையும் வேதனை இவை மாற வேண்டும் எனப் பதிவு செய்கின்றார். இக்கவிதையைப் போல் “ஆபிஸ் கோயிங்” கவிதையும் இத்தகையதே.

“சுபஸ்ரீ - பேனர் எனும் கவிதை அரசியல்வாதிகளினால் இறந்த சுபஸ்ரீயின் இறப்பைப் பற்றியது. சாலையில் பேனர் வைக்கும் கலாச்சாரம் தேவையற்றது. மக்களின் வரிப்பணத்தில். அரசுகள், அரசியல்வாதிகள் செய்யும் பல்வேறு ஊதாரித் தனமான செலவுகளும், அதனால் விளையும் பாதிப்புக்களையும் இனம் காட்டி, தம் நெருடல்களை மனக் குமுறலாக விளக்குகிறார்.

தமிழ் உணர்வும். தமிழின உணர்வும் அவரது பல கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதைப் பதைபதைப்புடன் கவியாக்குவதைக் காண முடிகின்றது.

“கொள்ளி வாய்க்கால்” கவிதையில் இதனையுணரலாம். எவ்வளவு தான் தீமைகள் தமிழனுக்கு வந்தாலும், காக்க வேண்டிய கடவுள்கள் ஏன் வரவில்லை? எனப் படிப்பவரிடம் கேள்வி கேட்கின்றார். மொழியினால் கடவுளைப் பிரித்தலையும் சூழ்ச்சியையும் நக்கல் செய்கின்றார்.

தனிமனிதக் காதலுணர்வுக் கவிதைகளும் கவிஞரின் அற்புதமான காதல் மொழியை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கான கவிஞரின் இடம் அலாதியான இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு மிகச் சரியான மரியாதையைத் தரும் மனதின் வெளிப்பாடுகள் காதல் கவிதைகளாக எழுதப் பெற்றுள்ளன.

எதார்த்த நடை, அழகியல் வெளிப்பாடு, கூட்டி குறைத்துக் கூறாத வார்த்தைகள் இவை இந்நூலின் தரமாகும். ‘எடை குறைப்பு’, ‘கமர்சியல் பிரேக்’ கவிதைகளில் கவிஞரின் சமூக விமர்சனம் மேலோங்கி நிற்கின்றது. நளினமாகப் பிறரின் போக்கைச் சாடும் தன்மையும் விளங்குகிறது.


 
பொதுவாக, கவிதைக்குள் கவிநயம் மிக்க வார்த்தைகள் குறைவு. உணர்வு மிக்க வார்த்தைகள் மிகமிக அதிகம். கவிதை வடிவத்தில், இன்னும் புனைவியலைத் தொட முயற்சிக்கலாமென்றாலும், வெளிப்பாட்டுத்திறன் கூற விழைந்த பொருளைச் சிறப்பாகவே கூறிச் செல்கின்றன. சமூகக் கவிதைகள் காலத்தின் பதிவுகளாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன என்பதே இந்நூலின் மிகப் பெரும் சாதனையாக அமைந்திருக்கிறது.

- பாரதிசந்திரன்

  நன்றி : கீற்று இணைய இதழ்